

கேரளாவின் படகு பந்தயங்கள் மன்னர்களின் தகராறுகளை தீர்த்த வரலாற்று மரபை தாங்கி, ஓணம் பண்டிகை மற்றும் கோவில் சடங்குகளுடன் இணைந்து நடைபெறுகின்றன. ஆலப்புழா, பம்பா, பாயிப்பாடு, கல்லடா, குமரகோம், கொச்சி காயல் போன்ற இடங்களில் நேரு கோப்பை, ஸ்ரீ நாராயண ஜெயந்தி, இந்திரா காந்தி, கல்லடா படகு பந்தயம் என பல போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன.
`கடவுளின் சொந்த நாடு` என அழைக்கப்படும் கேரளாவில் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தின் முக்கிய அங்கமாக படகு போட்டிகள் நடத்தப்படுகின்றன. படகு பந்தயங்கள் கேரள மன்னர்களுக்கும் தலைவர்களுக்கும் இடையேயான தகராறுகளை தீர்த்து வைத்த வரலாற்று நிகழ்வுகள் உண்டு.
பொதுவாக கேரளா படகு திருவிழா ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை நடைபெறுகின்றன. அந்த வகையில் கேரளாவில் நடத்தப்படும் பிரபலமான படகு போட்டிகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
நேரு கோப்பை படகு போட்டி ஆலப்புழா
கேரள மாநிலம் ஆலப்புழைக்கு அருகில் உள்ள புன்னமசா ஏரியில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் இரண்டாவது சனிக்கிழமை அன்று சுண்டன் வல்லம் அதாவது அலகுடைய படகுகளால் படகு போட்டி நடத்தப்படுகிறது. பாம்பு படகுகள் என்று அழைக்கப்படும் இதற்கு மாநில அரசு நிதி உதவி அளிக்கிறது. கேரளாவின் மிகப்பெரிய படகு போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரன்முலா படகு போட்டி, பந்தனம் திட்டம்
பந்தனம் திட்டா மாவட்டம் பார்த்தசாரதி கோவிலுக்கு அருகில் உள்ள பம்பா ஆற்றில் நடைபெறும் ஆரன்முலா படகு பந்தயம் கேரளாவின் புனிதமான படகு பந்தயங்களில் ஒன்றாகும். இந்த படகுப்போட்டி கிருஷ்ண பகவானை கௌரவிப்பதற்காக கொண்டாடப்படுவதால் ஓணம் பண்டிகையின் ஒரு பகுதியாகவும் கோவிலின் சடங்காகவே கருதப்படுகிறது.
சம்பகுளம் மூலம் படகுப் போட்டி, ஆலப்புழா மாவட்டம்
அம்பலப்புழா ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலின் புராண கதையுடன் தொடர்புடைய ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள பம்பா ஆற்றில் நடைபெறும் கேரளாவின் மிகப்பழமையான பாம்பு படகு போட்டியாக சம்பக்குளம் மூலம் படகுப் போட்டி கருதப்படுகிறது.
கேரள மாநிலத்தில் நடைபெறும் மற்ற படகு போட்டிகளில் தொடக்கத்தை குறிப்பதாக இந்த போட்டி உள்ளது. ஆகவே இது ஜூன் ஜூலை மாதங்களிலேயே நடைபெறுகிறது.
புலிங்குன்னு ராஜீவ் காந்தி படகு போட்டி
ஆகஸ்ட் மாதத்தின் கடைசி சனிக்கிழமை புலிங்குன்னு ஆற்றங்கரையில், புலிங்குன்னு ராஜீவ் காந்தி படகு போட்டி நடைபெறுகிறது. ஆலப்புழா நகரத்திலிருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் ஆலப்புழா-சங்கனாச்சேரி வழித்தடத்தில், புலிங்குன்னு ஆற்றங்கரை அமைந்துள்ளது.
நீராட்டுபுரம் படகு போட்டி
ஆலப்புழா நகரத்திலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் எடத்துவா அருகே ஓணம் பண்டிகை காலமான ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் பம்பை ஆற்றங்கரையில் நீராட்டுபுரம் படகு போட்டி நடைபெறுகிறது.
பாய்ப்பாட்டு வல்லைப் பாட்டு அல்லது ஜலோத்சவம்
ஆலப்புழாவில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் மூன்று நாள் நீர் திருவிழா பாயிப்பாடு ஏரியில் நடத்தப்படுகிறது. ஹரிபாட்டில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கும் பாயிப் பாடு படகு போட்டிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.
ஸ்ரீ நாராயண ஜெயந்தி வல்லம் காளி
கேரளாவின் கவர்ச்சிகரமான படகு போட்டிகளில் ஒன்றான ஸ்ரீ நாராயண ஜெயந்தி வல்லம் காளி படகுப் போட்டி ஓணம் பண்டிகை கொண்டாடப்படும் செப்டம்பர் மாதத்தில் ஒவ்வொரு ஆண்டும் குமரகோமில் நடைபெறுகிறது.
இந்திரா காந்தி படகு போட்டி
டிசம்பர் மாதத்தின் கடைசி வாரத்தில் கொண்டாடப்படும் இந்திரா காந்தி படகுப் போட்டி திருவிழா கேரளாவில் கொச்சி காயல்களில் நடைபெறுகிறது.
கல்லடா படகு பந்தயம்
கொல்லம் மாவட்டத்தில் உள்ள கல்லடா ஆற்றின் முத்திரப்பரம்பு - கருவத்ரகடவு வழித்தடத்தில் ஓணம் பண்டிகைக்கு 28 நாட்களுக்குப் பிறகு கல்லடா படகு பந்தயம் நடைபெறுகிறது.
கேரளாவிற்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டு இருப்பவர்கள் படகு போட்டியை கண்டு ரசிப்பதையும் கலந்து கொள்வதையும் தவறவிடாதீர்கள்.
இந்த வழிகாட்டியின் மூலம் கேரளாவின் கலாச்சார பெருமைகளை உணர்ந்து, உங்கள் அடுத்த கேரள பயணத்தின் போது எந்தெந்த படகு பந்தயங்களை எந்தெந்த மாதங்களில் காணலாம் என்பதை துல்லியமாக திட்டமிட்டு சிறந்த அனுபவத்தைப் பெறமுடியும்.