தமிழர்களின் மரபுவழி விளையாட்டுகளில் ஒன்று ஜல்லிக்கட்டு. இதற்கு மஞ்சுவிரட்டு, ஏறுதழுவுதல் என்ற பெயர்களும் உண்டு. மஞ்சுவிரட்டில் உள்ள சில வகைகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
வாடி மஞ்சுவிரட்டு அல்லது ஜல்லிக்கட்டு: இது மக்களிடையே நன்கு அறியப்பட்ட ஒன்றாகும். வாடிவாசல் என்னும் வாசல் வழியாக காளை திறந்து விடப்படும். அப்போது சீறிக்கொண்டு வெளியே வரும் காளையை வீரர் ஒருவர் மட்டும் தாவி அதன் திமிலை பிடித்து கோர்த்து குறிப்பிட்ட தூரம் வரை செல்ல வேண்டும். அப்படிச் சென்றால் அந்த வீரர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். காளையை யாராலும் பிடிக்க முடியவில்லை என்றால் காளை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். இதில் காளையை ஒருவர் மட்டுமே பிடிக்க வேண்டும் என்பதுதான் பொதுவான விதிமுறை. இந்த மஞ்சுவிரட்டு மதுரை, புதுக்கோட்டை, தேனி, தஞ்சாவூர், சேலம் போன்ற இடங்களில் நடைபெறுகிறது.
வேலி மஞ்சுவிரட்டு: திறந்தவெளியில் காளையின் மூக்குக் கயிற்றை அவிழ்த்து விடுவார்கள். அது எந்த திசையை நோக்கி வேண்டுமானாலும் ஓட்டம் பிடிக்கும். வீரர்கள் அதை அடக்க வேண்டும். இந்த மஞ்சுவிரட்டு மதுரை, மானாமதுரை மற்றும் சிவகங்கை போன்ற இடங்களில் பிரபலமானதாகும்.
வடம் மஞ்சு விரட்டு: வடம் என்பது தமிழில் கயிறு என்று பொருள்படும். காளையை பதினைந்து மீட்டர் கயிற்றில் கட்டி அந்த விட்டத்துக்குள்ளேயே நடைபெறுவதுதான் வடம் மஞ்சுவிரட்டு. ஏழு அல்லது எட்டு வீரர்கள் கொண்ட அணி அந்த காளையை குறிப்பிட்ட நிமிடங்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்பது விதி.
குயிலாபாளையம் மஞ்சுவிரட்டு: புதுவை மாநிலத்தை ஒட்டி உள்ள சர்வதேச நகரான ஆரோவில் செல்லும் வழியில் குயிலாபாளையம் கிராமத்தில் காணும் பொங்கல் தினத்தன்று எல்லை பிடாரி அம்மன் கோயில் மந்தை வெளித்திடலில் நடத்தப்படும் போட்டி இது. இதில் அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கும் மாடுகள் கன்றுகளின் கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி அலங்கரித்து மாடுகளின் கொம்புகளுக்கு இடையே தேங்காய், வாழைப்பழம், கரும்பு உள்ளிட்டவற்றை கட்டி விடுவர்.
அரசியல் கட்சித் தலைவர்கள், நடிகர் மற்றும் நடிகைகளின் படங்களையும் கொம்புகளுக்கு இடையே பொருத்தி மாடுகளின் உரிமையாளர்கள் அழைத்து வருவர். சீறிப்பாயும் மாடுகளை இளைஞர்கள், சிறுவர்கள் உற்சாகமாக விரட்டிச் செல்வர். ஒவ்வொரு ஆண்டும் இந்த மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் முன்னூறுக்கும் மேற்பட்ட மாடுகள் பங்கேற்கும். இதை ஒட்டி காலை முதல் இரவு வரை பல்வேறு கலைநிகழ்ச்சிகள், வீர விளையாட்டுகளும் நடத்தப்படும்.