82 வருஷமா ஒரு பெண்ணை கூட பார்க்காம வாழ்ந்த மனுஷனை தெரியுமா... இது கட்டுக்கதை அல்ல நிஜம்!

Mihailo Tolotos
Mihailo Tolotos
Published on

இன்றைய ஸ்மார்ட்போன் உலகத்தில் நாலாபுறமும் மனிதர்கள், எங்கும் தொழில்நுட்பம் என ரொம்பவே பிஸியாகச் சுற்றிக் கொண்டிருக்கிறோம். ஆனால், தன் வாழ்நாளில் ஒருமுறை கூட ஒரு பெண்ணை நேரில் பார்க்காமலேயே 82 ஆண்டுகள் வாழ்ந்து மறைந்த ஒரு மனிதரைப் பற்றிச் சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?

இது ஏதோ கட்டுக்கதை போலத் தோன்றலாம். ஆனால், கிரேக்க நாட்டைச் சேர்ந்த மிஹைலோ டோலோடோஸ் (Mihailo Tolotos)  என்ற துறவியின் நிஜ வாழ்க்கை இதுதான். நவீன உலகம் எந்த அளவுக்கு வளர்ந்துள்ளதோ, அதற்குச் சற்றும் சம்பந்தமே இல்லாமல் மிகவும் தனிமையான ஒரு வாழ்க்கையை வாழ்ந்த இவரின் சுவாரஸ்யமான கதையை இப்போது பார்ப்போம்.

பிறப்பிலேயே ஏற்பட்ட தனிமை!

1856 ஆம் ஆண்டு கிரீஸ் நாட்டில் உள்ள ஹல்கிடிகி என்ற ஊரில் பிறந்தவர் தான் இந்த மிஹைலோ. இவர் பிறந்த சில மணி நேரங்களிலேயே துரதிர்ஷ்டவசமாக இவரின் தாய் இறந்துவிட்டார். ஆதரவற்ற அந்த பச்சிளம் குழந்தையை 'மவுண்ட் அத்தோஸ்' என்ற பழமையான மடாலயத்தில் உள்ள துறவிகள் தத்தெடுத்து வளர்க்கத் தொடங்கினர்.

இந்த மவுண்ட் அத்தோஸ் என்பது உலகத்தின் பார்வையிலிருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்ட ஒரு தனி உலகமாகும். பத்தாம் நூற்றாண்டிலிருந்து இன்று வரை அங்கு ஒரு கடுமையான சட்டம் அமலில் உள்ளது. அதாவது அந்த மலைப்பகுதிக்குள் எந்த ஒரு பெண்ணும் நுழைவதற்கு அனுமதி கிடையாது.

பெண் விலங்குகளுக்கும் தடை!

அது வெறும் ஒரு சாதாரண வழிபாட்டுத் தலம் மட்டுமல்ல, அது துறவிகளுக்கென்றே உருவாக்கப்பட்ட ஒரு மாபெரும் கோட்டை எனலாம். சுமார் இரண்டாயிரம் துறவிகள் வாழும் அந்த யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற இடத்தில், பெண்கள் மட்டுமின்றி பசு, பெண் செம்மறி ஆடு போன்ற பெண் விலங்குகளுக்கும் கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

துறவிகள் தங்களுடைய பிரம்மச்சாரியத்தைக் கடைப்பிடிக்கவும், தியானத்தில் முழுமையாக எவ்வித சலனமும் இன்றி ஈடுபடவும்தான் இப்படியொரு கடுமையான சட்டம் அங்கு கொண்டுவரப்பட்டது. இப்படிப்பட்ட ஒரு கட்டுக்கோப்பான சூழலில் வளர்ந்த மிஹைலோ, தன்னுடைய வாழ்நாள் முழுவதும் அந்த மலையை விட்டு வெளி உலகத்திற்கு வரவே இல்லை.

இதையும் படியுங்கள்:
ஞாபக சக்தியின் ஜீனியஸ்.! உலகை வியக்க வைத்த தமிழ்நாட்டு குழந்தை.!
Mihailo Tolotos

உலகை அறியாத மனிதர்!

அவருக்குப் பெண்கள் எப்படி இருப்பார்கள் என்பது மற்ற மூத்த துறவிகள் சொல்லிக் கேட்டும், மடாலயத்தில் உள்ள புத்தகங்களில் படித்தும் மட்டுமே தெரியும். அதுமட்டுமில்லாமல், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உலகம் எவ்வளவோ நவீனமாக மாறிக் கொண்டு வந்தபோதிலும், அவருக்கு அதைப் பற்றி எந்த ஒரு விழிப்புணர்வும் இல்லை. தனது 82 வருட காலத்தில் அவர் ஒரு காரையோ, விமானத்தையோ, ஒரு சினிமாப் படத்தையோ கூடப் பார்த்ததே இல்லை என்பதுதான் மிகவும் ஆச்சரியமான விஷயம். ஒரு சிறிய வட்டத்திற்குள் தனது மொத்த வாழ்க்கையையும் அவர் வெறும் பிரார்த்தனையிலேயே கழித்துவிட்டார்.

1938 ஆம் ஆண்டு அவர் மரணமடைந்தபோது, அங்கிருந்த சக துறவிகள் அவருக்கு மிகப் பெரிய அளவில் சிறப்பு மரியாதைகளுடன் இறுதிச் சடங்குகளைச் செய்தனர். உலக வரலாற்றிலேயே ஒரு பெண்ணைக் கூட நேரில் பார்க்காமல் பிறந்து, வாழ்ந்து மறைந்த ஒரே மனிதர் அவர் தான் என்று அவர்கள் உறுதியாக நம்பினார்கள். இவ்வளவு பெரிய நவீன உலகத்தில், இன்றும் கூட மவுண்ட் அத்தோஸ் பகுதிக்குள் பெண்களுக்கு அனுமதி இல்லை என்பது பலருக்கும் அதிர்ச்சியைத் தரலாம்.

இதையும் படியுங்கள்:
'Dancing Plague' - வரலாற்றின் விசித்திரமான நோய்... இது அறிவியலா? ஆன்மிகமா? உங்களுக்குத் தெரியுமா?
Mihailo Tolotos

இது பழமைவாதமா, அவர்களின் ஆழமான நம்பிக்கையா என்ற விவாதம் ஒருபுறம் இருந்தாலும், வெளிவுலகின் எந்த ஒரு சத்தமும் இல்லாமல் அமைதியாக வாழ்ந்து மறைந்த மிஹைலோவின் வாழ்க்கை இன்றும் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திக்கொண்டுதான் இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com