
நவநாரி குஞ்சரம் - கோயில்களில் அந்தச் சிற்பம் வைக்கப்பட்டிருப்பதன் காரணம் என்ன?
நவநாரி குஞ்சரம் என்பது ஒன்பது பெண்களை யானை உருவத்தில் கொண்ட ஒரு சிற்பமாகும். நவ என்றால் ஒன்பது, நாரி என்றால் பெண், குஞ்சரம் என்றால் யானை. அதாவது, நவநாரி குஞ்சரம் என்றால் ஒன்பது பெண்கள் யானை என்று பொருள் கொள்ளலாம். இங்கு, நவநாரி குஞ்சரம் சிற்பம் குறித்துத் தெரிந்து கொள்வதற்கு முன்பாக, நவரசம் குறித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்திய மரபில் அழகியல் இன்பத்தை ‘ரசம்’ எனும் பதத்தினால் குறிப்பிடுகின்றனர். இப்பதம் இருக்கு வேதத்திலிருந்து தோன்றியது என்கின்றனர். இருக்கு வேதத்தில் சோமாவதை எனும் தாவரத்திலிருந்து பெறப்பட்ட பாணத்தைக் குறிக்க ரசம் எனும் சொல் பயன்பட்டிருக்கிறது. அதாவது, சோமபாணத்தை சோமரசம் என்று சொல்லியிருக்கின்றனர்.
சோமரசத்தைப் போன்று, கலை வெளிப்பாடுகளில் பல்வேறு சுவைகளை உள்ளடக்கிய பண்புகளை, ரசம் எனும் சொல்லின் வழியாக, பரத முனிவர் நாட்டிய சாஸ்திரத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
பரத முனிவர் வழங்கிய, நாட்டிய சாஸ்திரம் மிகத் தொன்மையான நூலாகும். அதில், நாடகங்களின் மனவெழுச்சி விளைவுகளைத் துல்லியமாக அடையாளம் காட்டக் கூடியவாறு ரசக்கோட்பாட்டினை பரத முனிவர் வைத்துள்ளார். அதில்;
1. சிருங்காரம் – காதல்
2. ஹாஸ்யம் – நகைச்சுவை
3. கருணை – இரக்கம்
4. ருத்திரம் – கோபம்
5. வீரம் – திண்டிறல்
6. பயானகம் – அச்சம்
7. பீபஸ்தம் – வெறுப்பு
8. அற்புதம் – வியப்பு
என்று பரதர் எட்டு ரசங்களை முன் வைத்திருந்தார்.
அந்த எட்டு ரசங்களுடன், அபிநவகுப்தர் என்பவர், 'சாந்தம்' எனும் ரசம் ஒன்றைச் சேர்த்து, ‘நவரசங்கள்’ என்று ஒன்பது பண்புகளாகக் காட்டினார்.
இந்த ஒன்பது ரசங்களும், பொதுவாக உடல், உரை மற்றும் உடையால் விளக்கப் பெற்றிருந்தன.
நவநாரி குஞ்சரம் சிற்பத்தில் ஒன்பது பெண்கள், வெவ்வேறு முகபாவனையைக் கொண்டு யானை போன்ற வடிவத்தினுள் காட்சியளிக்கின்றனர். சிற்பக்கலையில் இது ஒரு வகை.
இந்த நவநாரி குஞ்சரம் சிற்பமானது, தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆழ்வார்திருநகரி ஆதிநாத சுவாமி கோயில், திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திருக்குறுங்குடி பெருமாள் கோயில், திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தேவிகாபுரம் ஸ்ரீகனககிரீஸ்வரர் கோயில் என்று ஒரு சில கோயில்களில் மட்டுமே காணமுடியும்.
நவநாரி குஞ்சரம் சிற்பத்தைப் பார்க்கும் போது, யானையின் உருவமே கண்களுக்குத் தெரியும். சிறிது கவனித்துப் பார்த்தால், அந்த யானை உருவத்தில், ஒன்பது பெண்களின் உருவம் தெரியும். ஒவ்வொரு பெண்ணின் முகத்திலும், ஒவ்வொரு முகபாவனை தெரியும். அதாவது, மேலேக் குறிப்பிட்ட நவரசங்களிலான முகங்களைக் காண முடியும்.
கோயில்களில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த நவநாரி குஞ்சரம் சிற்பம் நமக்கு எதைச் சொல்ல வருகிறது? என்கிற கேள்வி நமக்குள் எழுவது இயல்பே.
மனித வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் இந்த ஒன்பது குணங்களும், அதாவது ஒன்பது உணர்வுகளும் வந்து போகும். எந்த உணர்வு வந்தாலும், யானை போல் வலிமையுடன் இருந்து, அதற்குக் காரணமான நிகழ்வைச் சமாளிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தகைய சிற்பங்கள் கோயில்களில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. மேலும், மனித வாழ்வில் மேற்காணும் ஒன்பது குணங்களைச் சந்திக்கும் நிலையில், இறைவன் எண்ணப்படியே அனைத்தும் நடக்கின்றன என்பதை உணர்ந்து, இறைவனைச் சரணடைந்து, அதைச் சமாளிக்கும் ஆற்றலைத் தர வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும்.