

அரசர்கள் தங்களுக்கு அடங்காத அரசர்களை அடக்கி திறம்பெறவும், நாடுகளின் ஆட்சிப் பரப்பை விஸ்தரிக்கவும் படைகளை நடத்தினார்கள். அப்படி படை நடத்தி வெற்றி அடைந்த பின் பகைவர் அரண்மனையைக் கொள்ளையிட்டும், அதை அழித்து தீக்கிரையாக்கியும் ஆர்ப்பாட்டம் செய்வார்கள். தங்கள் வெற்றியின் அடையாளமாக, சாதனை அல்லது முக்கிய நிகழ்வை கொண்டாடும் வகையில் நெடிய தூணை நட்டு அதில் தமது வெற்றியைப் பொறிப்பதுண்டு. இத்தகைய தூண்களுக்கு வெற்றித் தூண்கள் என்றும் ஜெயஸ்தம்பம் அல்லது கீர்த்தி ஸ்தம்பம் என்றும் பெயர்.
இதில் மிகவும் புகழ் பெற்றதான ஜெயஸ்தம்பம், விஜயஸ்தம்பம், வெற்றி (Tower of victory) கோபுரம் என்பது ராஜஸ்தானின் சித்தோர் கோட்டையில் உள்ள ஒரு புகழ்பெற்ற 9 அடுக்குமாடி நினைவு கோபுரம் ஆகும். இது 1440- 1448 களில் ராணா கும்பாவால் மால்வா சுல்தான் மஹ்மூத் கில்ஜிக்கு எதிரான வெற்றியை நினைவு கூர்வதற்காக கட்டப்பட்டது.
இது சிவப்பு மணற்கல் மற்றும் வெள்ளை பளிங்கு கற்களால் கட்டப்பட்ட 37.2 மீட்டர் உயரமான ஒன்பது அடுக்கு கோபுரமாகும். இந்த கோபுரம் முழுவதும் இந்து கடவுள்கள், தேவதைகள் மற்றும் புராண காட்சிகளின் நுணுக்கமான சிற்பங்களைக் கொண்டுள்ளது. 157 குறுகிய வட்ட படிக்கட்டுகளைக்கொண்ட இந்த கோபுரத்தின் உச்சியில் இருந்து சித்தோர்கர் நகரின் முழுமையான காட்சியை காணலாம்.
ராணா கும்பாவின் பெரும் வெற்றிக்கு அடையாளமாக சித்தோரின் சின்னமாகக் கருதப்படும் இந்த விஜயஸ்தம்பா மாலை நேரங்களில் மின்னொளியில் ஜொலிக்கும் காட்சி மிகவும் பிரம்மாண்டமானது. மேலும் இது உலகப்புகழ் பெற்ற பழம்பெருமை வாய்ந்த வரலாறு படைத்ததும் ஆகும்.
மத முக்கியத்துவம்:
சில ஜெய ஸ்தம்பங்கள் ஜெயின் சமயத்தினர் ஆதிநாதருக்கு அர்ப்பணித்தவை. இவை கனககிரி என்றும் அழைக்கப்படுகின்றன.
தமிழகத்தில் சில கோயில்கள் முன்பு ஜெயஸ்தம்பங்கள் இருப்பதைக் காண்கிறோம். அழகான பீடத்தின் மீது இத்தகைய தூண்கள் நிலைப்படுத்தப்பட்டுள்ளன. திருக்காளத்தியிலும், காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலிலும் ஜெயஸ்தம்பங்கள் உள்ளன. காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் அம்பிகையின் இடப்புற கோஷ்டத்தில் வாராஹிக்கு முன்னே அம்பிகை பண்டகாசுரனை
அழித்ததன் அடையாளமாக ஒரு ஜெயஸ்தம்பம் உள்ளதைக் காணலாம்.
காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் உள்ள தூணின் உச்சியில் நான்கு திசைகளை நோக்கியவாறு நான்கு பூதங்கள் இருப்பதைக் காணலாம். இவை ஒன்றின் முதுகு ஒன்றோடு இருப்பதுபோல் நின்றுள்ளன.
வரலாற்றில் அசோகன் வெற்றித்தூண்கள் நட்டதைக் காண்கிறோம். உச்சியில் நான்கு பக்கமும் நோக்கியவாறு சிங்கங்களை கொண்ட அந்த உச்சியில் நான்கு சக்கரங்களும் அவற்றின் இடையிடையே இடபம், குதிரை, யானை, மான் ஆகிய உருவங்கள் இயங்கும் நிலையில் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் இடம் பெற்றுள்ள சிங்க வடிவமே பாரதத்தின் அடையாளமாக இருக்கின்றது. இவ் வடிவம் அரசின் அதிகார நிலையின் அடையாளமாக உள்ளது. அதை அனைத்து இடங்களிலும் பொறித்துள்ளனர்.
சென்னை கடற்கரை சாலையில் இந்தியா பெற்ற வெற்றிகளை பொறித்து வைத்துள்ள வெற்றித்தூண் உள்ளது. இதனை போர் நினைவுச் சின்னம் என்று அழைக்கின்றோம்.
இவ்விதம் நாடு முழுவதிலும் உள்ள ஜெயஸ்தம்பங்கள் கலைநயத்தை எடுத்துரைப்பதாகவும், வெற்றி மற்றும் முக்கியமான நிகழ்வுகளை காட்சிப்படுத்துவதாகவும் உள்ளது.