

ரக்ஷா பந்தன் என்பது சகோதர சகோதரிகளுக்கு இடையேயான அன்பையும் பாதுகாப்பையும் கொண்டாடும் கலை மற்றும் கலாச்சாரத்தின் மிக முக்கியமான அங்கமாகும். கலை மற்றும் கலாச்சாரப் பார்வையில் இந்த விழா வெறும் நூலைக்கட்டுவது மட்டுமல்லாமல், இந்திய ஓவிய மரபுகள், கைவினைப் பொருட்கள் மற்றும் புராணக் கதைகளின் உன்னத பிரதிபலிப்பாக விளங்குகிறது.
இது ஆண்டுதோறும் ஆவணி மாதம் பௌர்ணமி நாளில் கொண்டாடப் படுகிறது. 'ரக்ஷா' என்றால் பாதுகாப்பு என்றும், 'பந்தன்' என்றால் பிணைப்பு என்றும் பொருள்.
இந்தியாவின் பாரம்பரிய கலை வடிவங்களான மதுபானி (Madhubani) மற்றும் பட்டா சித்ரா (Pattachitra) ஓவியங்களில் ரக்ஷா பந்தனின் சாராம்சம் தொன்றுதொட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு ஒடிசாவின் பூரி ஜெகந்நாதர் பாரம்பரியத்தில் சுபத்ரா தேவி தனது சகோதரர்களான ஜெகந்நாதர் மற்றும் பாலபத்ரர் ஆகிய இருவருக்கும் நடுவில் வீற்றிருப்பது, இந்தியக் கலையில் உடன்பிறந்த உறவுக்குக் கொடுக்கப்படும் மிக உயர்ந்த கலாச்சார அங்கீகாரமாகும்.
ஜெய்ப்பூர், கொல்கத்தா மற்றும் அகமதாபாத் போன்ற நகரங்களில் தனித்துவமான கைவினைப் பொருட்கள் மற்றும் ராக்கி நூல்கள் தயாரிக்கப்படுகின்றன.
கிருஷ்ணர் மற்றும் திரௌபதி:
மகாபாரதக் காலத்தில் ஸ்ரீ கிருஷ்ணரின் கையில் காயம் ஏற்பட்ட பொழுது திரௌபதி தனது சேலையில் ஒரு பகுதியைக் கிழித்து அவரது விரலில் கட்டினார். இதற்குக் கைமாறாக திரௌபதிக்கு எப்போது ஆபத்து வந்தாலும் காப்பதாக கிருஷ்ணர் வாக்கு அளித்தார். பின்னர் சபையில் திரௌபதிக்கு துகிலுரிந்த போது கிருஷ்ணர் அவையில் அவள் மானத்தைக் காத்தார்.
ராணி கர்ணாவதி மற்றும் ஹூமாயூன்:
1528 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி கல்பியில் மன்னர் ராணா சங்கா தனது சொந்தத் தலைவர்களாலேயே விஷம் வைத்து கொல்லப்பட்டார். கணவரை இழந்த ராணி கர்ணாவதி தனது மூத்த மகன் விக்ரமாதித்யனுக்கு பதிலாக மேவாரின் தலைநகரான சித்தோர்கரின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இந்த சமயத்தில் தான் குஜராத்தின் பகதூர் ஷா இரண்டாவது முறையாக மேவார் மீது தாக்குதல் நடத்தினார்.
இது ராணியைக் கவலையடையச் செய்தது. வரலாற்றில் மேவார் ராணி கர்ணாவதி தனக்கு ஆபத்து ஏற்பட்டபோது முகலாயப் பேரரசர் ஹுமாயூனுக்கு ராக்கி அனுப்பி தனது ராஜ்யத்தை காப்பாற்ற உதவுமாறு கோரியதாக புராணக்கதைகள் கூறுகின்றன. அவரும் தன் சகோதரியாக கர்ணாவதியை ஏற்று சித்தோர்கரை வந்தடைவதற்கு முன்பே ராணி கர்ணாவதியும் அரசவையின் மற்ற உயர்குடி பெண்களும் ஜவ்ஹர் - அதாவது சுட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.
இருப்பினும் ஹுமாயூன் 1535 இல் மாண்டுவைக் கைப்பற்றி குஜராத்திற்கு திரும்பும் வழியில் சித்தோர்கரை மீண்டும் கைப்பற்றி, ராணியின் மகனான விக்ரமாதித்யனிடம் ராஜ்யத்தை ஒப்படைத்தார் என்று வரலாறு கூறுகிறது.
தாகூரின் சமத்துவ முயற்சி:
நாட்டின் சுதந்திரப் போராட்டத்தின்போது மகாத்மா காந்தி இந்திய மக்களை ஒன்றிணைக்க மதத்தைப் பயன்படுத்தினார். அதேபோல நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூர் ரக்ஷா பந்தன் பண்டிகையை ஒரு கருவியாகப் பயன்படுத்தினார்.
1905 ஆம் ஆண்டில் வங்கப் பிரிவினையின் பொழுது இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே ஒற்றுமையை வளர்க்க நோபல் பரிசு பெற்ற இரவீந்திரநாத் தாகூர் இப்பண்டிகையைப் பயன்படுத்தினார் என்று கூறப்படுகிறது.
பிரிட்டிஷாரிடம் தங்கள் சகோதரத்துவம், ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் விதமாக இரு சமூகத்தினரும் ஒன்றிணைந்து ஒருவருக்கொருவர் ராக்கி கட்டிக் கொள்ளுமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார். வங்காளம், அஸ்ஸாம் மற்றும் டாக்காவில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கங்கை நதிக்கரையில் ஒன்று கூடி ஒருவருக்கொருவர் ராக்கி கட்டிக்கொண்டனர். தாகூர் புனித கங்கையில் நீராடிய பிறகு ரக்ஷா பந்தன் பேரணியைத் தொடங்கினார். இதைத்தொடர்ந்து ஒரு மசூதிக்கு நடைபெற்ற மற்றொரு பேரணியில், மக்கள் எந்தவித தயக்கமும் இன்றி மதகுருக்களுக்கு ராக்கி கட்டினர்.
ராக்கியின் முக்கிய அம்சங்கள்:
சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் மணிக்கட்டில் ராக்கி எனும் புனித நூல் கட்டுவார்கள். சகோதரர்கள் தங்கள் சகோதரிகளுக்கு பரிசுகளை வழங்கி பாதுகாப்பதாக உறுதி அளிப்பார்கள். இது ரத்த உறவுகளைத்தாண்டி அன்பான மனிதநேயப் பிணைப்பை குறிக்கிறது. இது நமது பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லவும், சமூக ஒற்றுமையை வளர்க்கவும் உதவுகிறது.