இந்து புராணங்களும் கிரேக்க புராணங்களும் ஆழமான, வளமான கலாச்சாரங்களின் பின்னணியில் பண்டைய நாகரிகங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன. இரண்டிலும் காவிய நாயகர்கள் மற்றும் பொதுவான கருப்பொருள்கள் என்று சில ஒற்றுமைகள் இருக்கின்றன.
கருப்பொருள்கள்:
ஒழுக்கத்துடன் கூடிய மனித வாழ்க்கை, நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான போராட்டம், ஆணவத்தின் விளைவுகள், விதியின் தன்மை, வாழ்க்கையின் சுழற்சி, போன்ற உலகளாவிய கருத்துக்களின் அடிப்படையில், சக்தி வாய்ந்த கடவுள்களின் அரிய செயல்களை மையமாகக் கொண்டு கதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டு புராணங்களும் போர்கள், பயணங்கள் மற்றும் வீரச் செயல்களின் பின்னணியில் பிரம்மாண்டமான கதைகளைக் கொண்டுள்ளன. மனித ஆத்மாவை முன்னோக்கி கொண்டு செல்லும் பாடங்களை வழங்குவதை முக்கியக் கோட்பாடாகக் கொண்டிருக்கின்றன.
இந்து மற்றும் கிரேக்க புராணங்கள் இரண்டுமே இயற்கை வழிபாட்டை உள்ளடக்கியவை. பஞ்சபூதங்களான நீர், நெருப்பு, வானம், பூமி, காற்று போன்றவற்றுக்கான அதிபதிகளை அதாவது தெய்வங்களை வணங்குவதை குறிப்பிடுகின்றன. இரண்டு புராணங்களிலும் இடம்பெறும் காவிய நாயகர்கள் கடவுளின் அவதாரங்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். அவர்களின் செயல்கள் மூலம் நல்லொழுக்கத்தின் முக்கியத்துவம், தவறு செய்தவர்கள் எதிர்கொள்ளும் விளைவுகள், தண்டனைகள் போன்றவற்றை உள்ளடக்கியது.
மும்மூர்த்திகள்;
இந்து மதத்தின் மும்மூர்த்திகளாக பிரம்மா (படைப்பவர்), விஷ்ணு (பாதுகாப்பவர்), மற்றும் சிவன் (அழிப்பவர்) வணங்கப்படுகிறார்கள். இதேபோல், கிரேக்க புராணங்களின் மும்மூர்த்திகளாக ஜீயஸ் (வானம்), போஸிடான் (கடல்) மற்றும் ஹேட்ஸ் (பாதாள உலகம்) திகழ்கிறார்கள். ஒவ்வொரு தெய்வங்களும் பிரபஞ்ச உருவாக்கம், பாதுகாப்பு மற்றும் அழிவில் சமநிலையைக் குறிக்கின்றன.
காவிய நாயகர்கள்:
இரண்டு புராணங்களும் தெய்வீக சக்தி கொண்ட கடவுள்கள் மற்றும் காவிய நாயகர்களைக் கொண்டுள்ளன. ராமாயணம் மற்றும் கிரேக்க புராணமான இலியட் இரண்டும் ஒரு பெண்ணுக்காக நடத்தப்பட்ட போர்களைப் பற்றியது. இரண்டிலும் அசாதாரணமான சக்தி மற்றும் வலிமை கொண்ட நாயகர்களாக ராமர் மற்றும் ஹெராக்கல்ஸ் போன்ற நாயகர்கள் சித்தரிக்கப்படுகிறார்கள்.
சீதையும் பெர்செபோனும் அவர்களின் விருப்பத்திற்கு மாறாக கடத்தப்பட்டனர். சீதை ராவணனால் கடத்தப்பட, பெர்செபோனும் ஹேடஸால் கடத்தப்பட்டார்கள். இருவரும் பூமியின் கீழ் மறைந்து போனதாகவும், புராணங்கள் கூறுகின்றன.
தூதுக் கடவுளர்கள்/ மரணத்தின் அதிபதிகள்:
இரண்டு புராணங்களிலும் கடவுள்களுக்கும் மனிதர்களுக்கும் இடையில் தூதர்களாக செயல்படும் தெய்வங்கள் உள்ளன. கிரேக்க புராணங்களில் ஹெர்ம்ஸ் என்பவர் தூது கடவுளாகவும், இந்து புராணங்களில் நாரதர் தூதுக் கடவுளாகவும் வருகிறார். இந்துப் புராணத்தில் மரணத்தின் அதிபதியாக எமனும், கிரேக்கத்தில் ஹேடிசும் பாதாள உலகத்தை ஆளுகின்றனர்.
காதல் கடவுள்:
இந்து புராணங்களில் காதல் மற்றும் ஆசையின் கடவுளாக மன்மதனும், கிரேக்கத்தில் ஈரோஸும் இடம்பெறுகின்றனர்.
தேவர்களின் தலைவர்கள்:
இந்திரன் மற்றும் இருவரும் தேவர்களின் கடவுள்களாகவும், இடி மின்னல்களை உருவாக்கும் ஆயுதங்களையும் (வஜ்ராயுதம்) பயன்படுத்துகிறார்கள். இருவரும் தம் எதிரிகளான கடல் அசுரனைக் கொல்கிறார்கள். இந்திரன் பாம்பு விருத்திரனைக் கொல்கிறார். ஜீயஸ் டைஃபோனுடன் சண்டையிட்டு தோற்கடிக்கிறார்.
கர்ணனும், அகில்லெஸும்:
மகாபாரதத்தில் வரும் கர்ணன் சூரியக் கடவுளின் வழித்தோன்றல், இலியட்டில் வரும் அகில்லெஸ் கடல் தெய்வமான தீடிஸின் வாரிசு. இருவரும் சிறந்த போர்வீரர்கள், ஆனால் தங்கள் பலவீனங்களால் துயரமான விதிகளை எதிர்கொள்கின்றனர். கர்ணனுக்கு, சபிக்கப்பட்ட தேர் சக்கரமும், அகில்லெஸுக்கு அவனது குதிகாலும் இறப்பைத் தருகின்றன. இரு புராணங்களும் அவர்களின் பலங்களையும் குறைபாடுகளையும் வெளிப்படுத்துகின்றன.
பாம்புகள்:
இரண்டு புராணங்களிலும் பாம்புகள் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. இந்து புராணத்தில், வாசுகி பாம்புகளின் ராஜாவாகவும், கடலில் அமிர்தத்தை கடைந்தெடுக்க உதவும் மத்தாகவும் பயன்படுத்தப்பட்டது. கிரேக்க புராணத்தில் லாடன் என்பது ஹெஸ்பெரைட்ஸ் தோட்டத்தில் தங்க ஆப்பிள்களைப் பாதுகாக்கும் பாம்பு.