யார் இந்த சிகைக் கொற்றன்? எகிப்து மண்ணில் தமிழனின் கால்தடம்!

tamil brahmi inscriptions found in egypt
tamil brahmi inscriptions found in egyptAI Image
Published on

மிழர்களின் கால்தடம் பதியாத இடமே இல்லை என்று சொல்லும் அளவிற்குப் பண்டைய தமிழ்ச் சமூகம் பரந்து விரிந்து இருந்தது. கீழடி மற்றும் ஆதிச்சநல்லூர் போன்ற இடங்களில் கிடைக்கும் ஆதாரங்கள் நம்மை வியக்க வைக்கும் நிலையில், தற்போது எகிப்து நாட்டில் கிடைத்துள்ள புதிய சான்றுகள் நம் வரலாற்றை உலக அரங்கில் உயர்த்தியுள்ளன. 

எகிப்தின் புகழ்பெற்ற 'மன்னர்களின் பள்ளத்தாக்கு (Valley of the Kings)' பகுதியில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான தமிழ் எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது பண்டைய தமிழர்கள் ரோமானியர் காலத்து எகிப்தோடு கொண்டிருந்த நெருக்கமான தொடர்பை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

மன்னர்களின் பள்ளத்தாக்கில் தமிழ்!

எகிப்து என்றாலே நம் நினைவுக்கு வருவது பிரமிடுகளும் மம்மிகளும் தான். லக்சர் நகருக்கு அருகே அமைந்துள்ள மன்னர்களின் பள்ளத்தாக்கில், அரசர்களுக்கான கல்லறைகள் உள்ளன. இந்தப் பகுதியில் 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்து நாட்டு ஆய்வாளர்கள் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டனர்.

அப்போது அங்குள்ள ஆறு கல்லறைகளில் முப்பதுக்கும் மேற்பட்ட கல்வெட்டுகளை அவர்கள் ஆவணப்படுத்தினர். இதில் வியக்கத்தக்க விஷயம் என்னவென்றால், அவற்றில் சுமார் இருபது கல்வெட்டுகள் தமிழ் பிராமி எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ளன. இவை கி.பி. முதல் நூற்றாண்டு மற்றும் மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாக இருக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

யார் அந்த சிகைக் கொற்றன்?

இந்தக் கல்வெட்டுகளில் அதிகம் இடம்பெற்றுள்ள பெயர் 'சிகைக் கொற்றன்' என்பதாகும். ஐந்து வெவ்வேறு கல்லறைகளில், சுமார் எட்டு இடங்களில் இந்தப் பெயர் செதுக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் சுவர்களின் மிக உயரமான பகுதிகளிலும், நுழைவாயில்களிலும் இந்தப் பெயர் காணப்படுகிறது. 'கொற்றன்' என்பது வெற்றியையும், வலிமையையும் குறிக்கும் ஒரு தூய தமிழ்ச் சொல்லாகும். 

இது சேர மன்னர்களின் குலதெய்வமான கொற்றவையோடு தொடர்புடையது. மேலும் 'கோபன்', 'சாத்தன்' மற்றும் 'கீரன்' போன்ற சங்க காலப் பெயர்களும் இந்தக் கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ளன. எகிப்தியர்கள் தங்கள் பெயர்களைச் சுவர்களில் பதிவிடும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். அங்குச் சென்ற தமிழர்களும் அந்தப் பண்பாட்டைப் பின்பற்றித் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் பயன்படுத்திய 'ஏடிஎம்' (ATM) முறை பற்றித் தெரியுமா?
tamil brahmi inscriptions found in egypt

துறைமுகத்தைத் தாண்டி உட்புகுந்த தமிழர்கள்!

இதுவரை கிடைத்த சான்றுகளின்படி, தமிழர்கள் வணிகத்திற்காகக் கடல் வழியாகச் சென்று துறைமுக நகரங்களில் மட்டுமே தங்கியிருந்தார்கள் என்று நம்பப்பட்டது. பெரெனிகே போன்ற செங்கடல் துறைமுகங்களில் ஏற்கனவே தமிழ் எழுத்துக்கள் கிடைத்துள்ளன. ஆனால், துறைமுகத்திலிருந்து வெகு தொலைவில் உள்ள எகிப்தின் உட்புறப் பகுதியான நைல் நதிக்கரை வரை தமிழர்கள் சென்றுள்ளனர் என்பதை இந்தக் கண்டுபிடிப்பு உறுதி செய்கிறது. அவர்கள் வெறும் வியாபாரிகளாக மட்டும் இல்லாமல், எகிப்தின் கலாச்சாரத் தளங்களையும் பார்வையிட்டுள்ளனர் என்பதற்கு 'வந்தேன், கண்டேன்' என்று பொருள்படும் வாசகங்களே சாட்சி.

சங்க காலத் தமிழர்கள் வெறும் வணிகர்களாக மட்டுமல்லாமல், பண்பாட்டுத் தூதுவர்களாகவும் செயல்பட்டுள்ளனர். ரோமானியப் பேரரசு காலத்தில் எகிப்திற்குச் சென்று, அங்குள்ள கலாச்சாரத்தோடு கலந்து, தங்கள் அடையாளத்தை விட்டுச் சென்றிருப்பது சாதாரண விஷயம் அல்ல.

இதையும் படியுங்கள்:
உலகிலேயே அதிக உப்புத் தன்மை கொண்ட கடல் எது தெரியுமா?
tamil brahmi inscriptions found in egypt

கடல் கடந்து சென்று, அந்நிய தேசத்தில் தங்கள் தாய்மொழியைக் கல்லில் செதுக்கி வைத்த நம் முன்னோர்களின் செயல், இன்றும் தமிழினத்தின் பெருமையை உலகுக்குப் பறைசாற்றுகிறது. இந்தத் தொல்லியல் ஆதாரம் தமிழர்களின் வரலாற்றில் ஒரு பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய அத்தியாயமாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com