

தர்பா என்பது மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தின் வார்லி பழங்குடியினரால் பயன்படுத்தப்படும் ஒரு பாரம்பரிய காற்று இசைக்கருவியாகும். இது குஜராத் மாநிலத்தில் உள்ள Dangi எனப்படும் பழங்குடியினராலும், மகாராஷ்டிரா மாநிலத்தில் வாழும் Kokna (Kokni) எனப்படும் பழங்குடியினராலும் உபயோகிக்கப்படுகிறது. இது அவர்களின் கலாச்சாரம், திருவிழாக்கள் மற்றும் நடனங்களில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. காய்ந்த சுரைக்காய், மூங்கில் மற்றும் தேன் மெழுகு கொண்டு உருவாக்கப்படுகின்றது. அறுவடை திருவிழாக்கள் மற்றும் சமூக கொண்டாட்டங்களின் பொழுது இது இசைக்கப்படுகிறது. இந்தக் கருவியின் தனித்துவமான ஆழமான, தாள லயத்தை அடிப்படையாகக் கொண்டு 'தர்பா நடனம்' ஆடப்படுகிறது.
வடிவமைப்பு:
இது காய்ந்த சுரைக்காய் குடுவை, மாட்டுக்கொம்பு, மூங்கில் குழாய்கள் மற்றும் பனை ஓலைகளால் செய்யப்படுகிறது. இதன் வாய்ப்பகுதி சுரைக்காயால் ஆனது. இது பார்ப்பதற்கு நீண்ட எக்காளம் (Trumpet) போல் இருக்கும். இந்த இசைக் கருவியின் மேற்பகுதியானது மயிலிறகுகள், பூக்கள் கொண்டு அலங்கரிக்கப்படுகிறது. பாம்பாட்டிகள் உபயோகிக்கும் 'மகுடி' எனப்படும் இசைக்கருவியின் ஒலியை ஒத்ததாக இக்கருவியின் ஒலியும் உள்ளது. இதன் மயக்கும் இசை மற்றும் நடனம் வார்லி கலாச்சாரத்தின் முக்கிய அடையாளமாகும்.
இசை வகை:
இது ஒரு காற்றுக் கருவி (Wind Instrument). ஒரு நீண்ட மூங்கில் குழாய் வழியே காற்றை ஊதி, மற்றொரு முனையில் உள்ள சுரைக்காய் குடுவையிலிருந்து ஒலி எழுப்பப்படுகிறது. தர்பா வாசிப்பவர் நடுவில் நிற்க, மற்றவர்கள் கைகளைப் பிடித்துக்கொண்டு அவரைச் சுற்றி வட்ட வடிவில் நடனமாடுவது வார்லி சமூகத்தின் ஒற்றுமையைக் குறிக்கிறது. சமீபத்தில் 92 வயதான தர்பா கலைஞரான பிக்ல்யா லடக்யா திந்தா (Bhiklya Ladakya Dhinda) என்பவருக்கு இந்த கலை வடிவத்தை பாதுகாத்ததற்காக இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. இந்த இசைக்கருவி வார்லி ஓவியங்களிலும் (Warli Painting) அடிக்கடி சித்தரிக்கப்படுவதைக் காணலாம். தர்பா வெறும் இசைக்கருவி மட்டுமல்ல; இது மகாராஷ்டிராவின் பழங்குடி பாரம்பரியத்தையும் இயற்கை அழகையும் பிரதிபலிக்கிறது.
வார்லி கலாச்சாரத்தில் தர்பா:
வார்லி கலாச்சாரத்தில் தர்பா, வார்லி கடவுளான நரன் என்பவரால் பழங்குடியினருக்கு வழங்கப்பட்டதாக நம்பப்படுகிறது. இதை பெரும்பாலும் திருமண விழாக்களில் தர்பா டோலுடன் சேர்த்து வாசிக்கப்படுகிறது. இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள வார்லி பழங்குடியினரின் கலாச்சாரத்தில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.
குறிப்பாக தர்பா நடனத்தின் போது, நடனக் கலைஞர்கள் இசையின் தாளத்திற்கு ஏற்ப வட்டமாக ஆடுவார்கள். ஆண்கள் மற்றும் பெண்கள் ஒருவரையொருவர் கைகோர்த்து வட்டமாக நின்று ஆடும் 'தர்பார் நடனம்' மிகவும் பிரபலம். நடனத்தின் வேகமும் அடவுகளும் இந்த இசைக்கருவியின் இசைக்கு ஏற்ப மாறும். இந்த இசையை முக்கியமாக அறுவடை திருவிழாக்களின் பொழுது இயற்கைக்கு நன்றி செலுத்தும் விதமாக வாசிக்கப்படுகிறது.
பாரம்பரியமாக இந்த இசைக்கருவி கூட்டங்கள், கொண்டாட்டங்கள் மற்றும் சடங்குகளின் பொழுது வாசிக்கப்படுகிறது. இது மக்களை ஒற்றுமையுடன் ஒன்றிணைக்கிறது. இது வார்லி ஓவியங்களிலும் பரவலாக சித்தரிக்கப்பட்டுள்ளது. பழங்குடியினரின் ஒற்றுமை மற்றும் கொண்டாட்டத்தின் அடையாளமாக தர்பா திகழ்கிறது.