வண்ணமயமான காற்றாடிகளின் தோற்றமும் வரலாறும்!

ஜனவரி 14, சர்வதேச காற்றாடிகள் தினம்
International Kite Day
International Kite Day
Published on

லவித வண்ணங்களில் ஆகாயத்தை எட்டுவது போல காற்றில் படபடக்கும் காற்றாடிகள் பார்வைக்கு கொள்ளை அழகாக இருக்கும். ஜனவரி 14ம் தேதி சர்வதேச காற்றாடிகள் தினம் கொண்டாடப்படுகிறது. இது இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. காற்றாடிகள் உருவான வரலாறும் தோற்றமும் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

காற்றாடிகளின் தோற்றம்: காற்றாடிகள் வளமான மற்றும் மாறுபட்ட வரலாற்றைக் கொண்டுள்ளன. அவற்றின் தோற்றம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தையது. சரியான தேதி தெரியவில்லை என்றாலும் 3000 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் முதன் முதலில் காற்றாடிகள் உருவாக்கப்பட்டன என்பது நடைமுறையில் உள்ள நம்பிக்கை.

கி.மு. 203க்கு முந்தைய காலகட்டத்தில் சீனாவில் ராணுவ பயன்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு நடைமுறை நோக்கங்களுக்காக காற்றாடிகள் பயன்படுத்தப்பட்டன. சீன ஜெனரல் ஹான் சிஸின் ஒரு எதிரி நகரத்தின் மீது ஒரு காற்றாடியை பறக்க விட்டார். சீன தத்துவ ஞானிகளான மோசி மற்றும் லு பான் ஆகியோர் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் காற்றாடிகளைக் கண்டுபிடித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. கி.பி. 549ல் காகிதக் காற்றாடிகள் பறக்க விடப்பட்டன. மேலும், அவை தகவல் தொடர்பு மற்றும் மீட்பு பணிகளுக்காகப் பயன்படுத்தப்பட்டன.

இதையும் படியுங்கள்:
தை திருநாளில் காப்பு கட்டும் பொங்கல் பூவின் சிறப்பு!
International Kite Day

காற்றாடிகள் படிப்படியாக சீனாவில் இருந்து அண்டை நாடுகளுக்கு வர்த்தகம் மற்றும் கலாசாரப் பரிமாற்றம் மூலம் பரவியது. கொரியா, ஜப்பான் மற்றும் இந்தியாவிலும் காற்றாடி கலாசாரம் பரவியது. ஒவ்வொரு கலாசாரமும் உள்ளூர் மரபுகளின்படி காற்றாடிகளின் வடிவமைப்பையும் நோக்கத்தையும் மாற்றி அமைத்தது. இந்தியாவில் பௌத்த மிஷனரிகளுடன் காற்றாடிகள் பல்வேறு வடிவங்களில் பிரபலம் அடைந்தன.

சர்வதேச காற்றாடிகள் தினம்: சர்வதேச காற்றாடிகள் தினம் இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் உருவானது. இது ஒவ்வொரு ஆண்டும் அங்கு நடக்கும் மகர சங்கராந்தி திருவிழாவில் பிரபலமான நிகழ்வாகும். குஜராத்தில் வசிப்பவர்கள் பல மாதங்களுக்கு முன்பே காற்றாடிகளை உற்பத்தி செய்யத் தொடங்குகிறார்கள்.

மில்லியன் கணக்கான மக்கள் குஜராத்திற்கு வருகை தந்து பட்டங்களை வானில் பறக்க விட்டு அந்தத் திருவிழாவைக் கொண்டாடுகிறார்கள். ‘உத்தராயண்’ என்று அழைக்கப்படும் காற்றாடித் திருவிழா குளிர்காலம் முடிந்து கோடைக்காலம் தொடங்கும் நாளையும், வரவிருக்கும் அறுவடைக் காலத்தையும் கொண்டாடுகிறது. கடந்த காலங்களில் இந்தியாவில் பட்டம் பறக்க விடுவது அரச குடும்பத்தார் மற்றும் பெரும் செல்வந்தர்களால் கடைப்பிடிக்கப்பட்ட ஒரு விளையாட்டாக இருந்தது. ஆனால், சமீப ஆண்டுகளில் இது நாடு முழுவதிலும் மக்களால் ஒரு திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்:
திருவூடல் பார்ப்பவருக்கு மறுவூடல் இல்லை!
International Kite Day

குஜராத்தில் காற்றாடித் திருவிழா: ஜனவரி 14ம் தேதி, குஜராத் நகரமே திருவிழாக் கோலம் பூண்டது போலக் காட்சியளிக்கும். மில்லியன் கணக்கான வண்ணமயமான காற்றாடிகள் வானில் பறக்கும் அழகிய காட்சிகளைக் கண்டு களிக்கலாம். இந்தத் திருவிழாவில் பல கலைஞர்கள் அக்ரோ பயாடிக் நிகழ்ச்சிகள் மற்றும் பிற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். இரவு முழுவதும் இந்தத் திருவிழா களைகட்டும். இரவில் ஒளிரும் விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் வண்ணமயமான காற்றாடிகள் வானில் பறப்பது கண்களைக் கவரும்.

காற்றாடிகளின் வரலாறு மனித படைப்பாற்றல் மற்றும் கலாசார பரிமாற்றத்திற்கு ஒரு சான்றாகும். பண்டைய சீனாவில் அவற்றின் தோற்றம் முதல் உலகளாவிய பெருக்கம் வரை, காற்றாடிகள் அவற்றின் ஆரம்ப நோக்கங்களை மீறி, கொண்டாட்டம், கலை மற்றும் அறிவியல் விசாரணையின் சின்னங்களாக உருவாகியுள்ளன. காற்றாடிகள் உலகெங்கிலும் உள்ள அனைத்து வயதினரையும் கவர்ந்திழுக்கிறது என்பது நிதர்சனம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com