

1972 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியாவில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட பின்கோடு என்ற அஞ்சல் குறியீட்டு எண் (PIN Code) என்பது ஒரு பெரும் பகுதி, நகரம் அல்லது பல கிராமங்களை உள்ளடக்கிய வட்டாரத்தைக் குறிக்கும்.
நம் நாட்டின் மொத்த மக்கள் தொகையான 140 கோடிக்கும் அதிகமானவர்கள் இலட்சக்கணக்கான தெருக்களிலும் முகவரிகளிலும் வசிப்பதால் இதன் அடிப்படையிலேயே பின்கோடு வழங்கப்படுகிறது. ஆனால் இந்திய அஞ்சல் துறை இரண்டு குறிப்பிட்ட நபர்களுக்கு (Entities) மட்டும் பிரத்தியேகமாக பின்கோடு ஒதுக்கியுள்ளது. அவர்கள் யார் என்பது குறித்தும் அதற்கான காரணம் குறித்தும் இப்பதிவில் காண்போம்.
நாட்டின் முதல் குடிமகனுக்கு முன்னுரிமை
இந்தியாவின் முதல் குடிமகனாக இருக்கும் குடியரசு தலைவருக்கு நிர்வாக ரீதியாக பிரத்தியேகமான அஞ்சல் குறியீட்டு எண்ணை இந்திய அஞ்சல்துறை ஒதுக்கி உள்ளது. டெல்லியில் சுமார் 330 ஏக்கர் பரப்பளவில் இந்தியாவின் நிர்வாக தலைவரான குடியரசு தலைவரின் இல்லம் மற்றும் அலுவலகமான ராஷ்டிரபதி பவன் (Rashtrapati Bhavan) அமைந்துள்ளது.
உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து நாட்டின் குடியரசு தலைவருக்கு ஆயிரக்கணக்கான முக்கியமான தபால்களும், அரசு கோப்புகளும், தூதரக செய்திகளும் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களும் வருகின்றன. டெல்லியில் இருக்கும் சாதாரண தபால்களுடன் குடியரசுத் தலைவருக்கு வரும் தபால்கள் கலந்து தாமதமாகி விடக்கூடாது என்பதற்காக இராஷ்டிரபதி பவன் சப் - போஸ்ட் ஆபீஸ், குடியரசுத் தலைவரின் அலுவலகமான ராஷ்டிரபதி பவனிலேயே செயல்படுகிறது. இதன் அஞ்சல் குறியீட்டு எண் டெல்லி - 110004 ஆகும்.
நிர்வாக ரீதியான தலைவரான ஜனாதிபதிக்கு வரும் கடிதங்கள் பாதுகாப்புடன் பிரித்து எவ்வித தாமதமும் இன்றி ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பும் வேலையை இந்த தபால் நிலையம் செய்து வருகிறது.
வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவில் சபரிமலை ஐயப்பனுக்கு தனி பின்கோடு.
ஆன்மீக உலகை அதிசயத்தக்க வகையில் சபரிமலை ஐயப்பனுக்கு தனி பின்கோடை இந்திய அஞ்சல் துறை வழங்கியுள்ளது. சபரிமலை சன்னிதானத்திற்கான அஞ்சல் குறியீட்டு எண் 689713 ஆகும். மேற்கு தொடர்ச்சி மலையின் அடர்ந்த காட்டுப்பகுதியில் பெரியார் புலிகள் காப்பகத்தின் நடுவே கேரள மாநிலத்தின் பந்தனம் திட்டா மாவட்டத்தில் சபரிமலை ஸ்ரீ ஐயப்ப சுவாமி கோவில் அமைந்துள்ளது.
வருடம் தோறும் கார்த்திகை, மார்கழி மாதங்களில் இங்கு மண்டல மகர விளக்குபூஜை நடைபெறுகிறது. சித்திரை மாதத்தில் விஷு திருவிழா கோலாகலமாக நடைபெறும். ஆகவே கார்த்திகை, மார்கழி, சித்திரை ஆகிய மூன்று மாதங்களில் மட்டும் இந்த 'சன்னிதானம் தபால் நிலையம்' (Sannidhanam Post Office) தற்காலிகமாகச் செயல்படும். ஆண்டு முழுவதும் இந்த தபால் நிலையம் செயல்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்த இணைய யுகத்திலும் உலகம் முழுவதிலும் உள்ள பக்தர்களிடம் இருந்து சபரிமலை ஐயப்பனுக்கு தினமும் 100 முதல் 150 க்கும் மேற்பட்ட கடிதங்கள் வருகின்றன. பக்தர்கள் தங்கள் குறைகளை தீர்க்க பிரார்த்தனை கடிதங்கள்,திருமண அழைப்பிதழ்கள், புதிய தொழில் தொடங்குவதற்கான பத்திரிகைகள், காணிக்கைக்கான மணி ஆர்டர்களை "சுவாமி ஐயப்பன், சன்னிதானம் அஞ்சலகம், பின் கோடு - 689713" என்ற முகவரிக்கு நேரடியாக அனுப்புகிறார்கள்.
இந்த கடிதங்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு சபரிமலை தேவஸ்வம் போர்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப் படுகிறது. பிறகு, ஐயப்பனின் பாதத்தில் வைத்து பூஜிக்கப்படுகிறது.
புனிதமாகக் கருதப்படும் 'சிறப்பு முத்திரை' (Unique Postal Seal)
ஐயப்பனின் திருவுருவமும் புனிதமான 18-ம் படியும் கொண்ட ஒரு தனித்துவமான முத்திரையை (Postal Seal) இந்த சன்னிதானம் தபால் நிலையத்திற்கு அஞ்சல்துறை வழங்கியுள்ளது. ஆகவே சபரிமலை கோவிலுக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் இந்த முத்திரையை பிரசாதமாக பெறவேண்டும் என்பதற்காகவே தங்களது வீடுகளுக்கும் உறவினர்களுக்கும் இங்கிருந்து கடிதங்களை அனுப்புகின்றனர்.
நிர்வாக வசதிக்காக பின்கோடு முறை அறிமுகப் படுத்தப்பட்டாலும் மக்களின் மனங்களில் அசைக்க முடியாத சக்தியாக இருக்கும் ஆன்மீக தெய்வத்திற்கும் தனி பின்கோடு ஒதுக்கியுள்ளது இந்திய கலாச்சாரத்தின் பன்முகத் தன்மையை பறைசாற்றும் விதமாக அமைந்துள்ளதை காட்டுகிறது.