

ஒவ்வொரு வருடமும் வசந்த காலத்தில் உத்தரகாண்டில் உள்ள குழந்தைகள் பூக்களையும் பாடல்களையும் ஏந்தி வீடுகளுக்குச் செல்வார்கள்... ஃபூல் தேய் திருவிழா(Flower festival).
நம் இந்தியாவைப் பொறுத்த வரையில் பாரம்பரியமாக கொண்டாடப்படும் திருவிழாக்கள் இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் வாழும் பல்வேறு இனத்தை சேர்ந்தவர்கள் பலவிதமான திருவிழாக்களை கொண்டாடுகிறார்கள்.
உத்தரகாண்டில் நடைபெறும் அத்தகைய ஒரு வசந்தகாலப் பண்டிகைதான் இந்த "ஃபூல் தேய்". ஒவ்வொரு ஆண்டும், பூக்கள் பூக்கும் பருவத்தில் (மார்ச்-ஏப்ரல்), உத்தரகாண்டின் கார்வால் மற்றும் குமாவுன் பகுதிகளில் ஃபூல் தேய் பண்டிகை சுமார் ஒரு மாதத்திற்கும், சில பகுதிகளில் ஒரு வாரத்திற்கும், மற்ற பகுதிகளில் மூன்று நாட்களுக்கும் கொண்டாடப்படுகிறது. ஃபூல் என்றால் பூக்கள் தேய் என்றால் கொடுத்தல் என்று பொருள்.
இந்த திருவிழாவின் முக்கிய அம்சம் என்னவென்றால் பூக்களால் நிரப்பபட்ட கூடைகளை ஏந்தியபடி , இளம் பெண்கள் செழிப்பின் தூதுவர்களாக மாறுகிறார்கள். வீடு வீடாகச் சென்று, அவர்கள் பழங்கால நாட்டுப்புறப் பாடல்களைப் பாடிக்கொண்டே, வாசல்களில் மலர் இதழ்களைத் தூவுகிறார்கள்.
இனிமையாகவும் மெல்லிசையாகவும் உள்ள அந்தப் பாடல் வரிகள், வெறும் கோஷங்களை மட்டும் எழுப்பாமல், அதற்கும் மேலாக செழிப்பு, மகிழ்ச்சி மற்றும் வளமான ஆண்டிற்கான வாழ்த்துகளை தெரிவிக்கும் விதமாக இருக்கின்றன. மக்கள் இனிப்புகளையும் சிறிய அன்பளிப்புகளையும் பரிமாறிக் கொள்கிறார்கள். இதனால், இந்தச் சடங்கு நல்லெண்ணம், நன்றியுணர்வு மற்றும் மகிழ்ச்சியின் ஒரு மென்மையான பரிமாற்றமாக அமைகிறது.
களங்கமில்லாத குழந்தைகள் பாரம்பரியத்தின் பாரத்தைச் சுமந்து, தலைமுறைகளுக்கு இடையே கண்ணுக்குப் புலப்படாத இழைகளைப் பின்னிப் பிணைக்கும் ஒரு திருவிழாவாக இது கருதப்படுகிறது. வீட்டு வாசலில் வைக்கப்படும் பூக்களின் ஒவ்வொரு இதழும் நம்பிக்கையின் அறிகுறியாகவும் மேலும் குழந்தைகள் பாடுகின்ற ஒவ்வொரு பாடலும் முன்னோர்கள், பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோருக்கு இடையே உள்ள தொடர்ச்சியை இணைக்கும் பாலமாகவும் திகழ்கின்றன.
வசந்த காலத்தின் இறுதி நாளில், பூல்யாரி என அழைக்கப்படும் இளைஞர் குழுக்கள், விழாவின் ஒரு பகுதியாக ஒவ்வொரு குடும்பத்திடமிருந்தும் பணத்தையும் இனிப்புகளையும் பெற்றுக்கொண்டு, தினமும் வீடுகளுக்குப் பூக்களைக் கொண்டு சேர்க்கிறார்கள். குழந்தைகள் தங்கள் கூடைகளில் பூக்களுடன், பச்சை இலைகள், தேங்காய், வெல்லம் மற்றும் அரிசி மணிகளையும் சேமித்து வைக்கிறார்கள்.
இந்த மலைப்பகுதிகளில், வசந்த காலத்தின் வருகை என்பது வெறும் பருவகால நிகழ்வு மட்டுமல்லாமல் அந்த பகுதியின் பராம்பரியத்தை எடுத்து காட்டும் வகையில் தனித்திருக்கிறது என்றே சொல்லலாம்.
இந்த மலைப்பகுதிகளில் உள்ளவர்களுக்கு திருவிழாக்கள் என்பது நாட்காட்டியிலுள்ள நாளை மட்டும் குறிக்காமல், மாறாக அதை இளம் கரங்களால் முன்னெடுத்துச் செல்லப்படும் உயிருள்ள கதைகளாக திகழ்கின்றன. அவர்கள் தூவும் இதழ்களைப் போல மலர்ந்து , நம்பிக்கை மற்றும் நன்றியுணர்வு போன்ற கண்களுக்குப் புலப்படாத இழைகளால் சமூகங்களைப் பிணைக்கின்றன என்பதையும் இந்த ஃபூல் தேய் திருவிழா எடுத்துக் காட்டுகிறது .