மரத்தின் இலை, வேர், பட்டை, விதை, இவை அனைத்துமே பல்வேறு விதங்களில் பயன்படக்கூடிய மருத்துவத் தன்மை வாய்ந்தது என்று அறிவோம். சில மரத்து பிசின்கள் அழகை கூட்டுவதாகவும் அமைந்துள்ளது. மரத்து பிசின்கள் தரும் நன்மைகளைப் பற்றி இப்பதிவில் காண்போம்.
வெள்வேலம் பிசினை வாயிலிட்டு சுவைத்து விழுங்கி வர வறட்சி, இருமல், நெஞ்செரிச்சல், தொண்டை அலர்ஜி ஆகியவை குணமாகும். நீடித்து சாப்பிட வெள்வேல் மரத்தின் பிசினானது அகவெப்பு தணிந்து தாது கட்டும்; உடல் உரமாகும்; நுரையீரல் தேற்றும்; உடலுக்கு பலமும் அழகும் உண்டாக்கும்.
கருவேல மரத்தின் பிசினை எடுத்து காயவைத்து நெய்யில் பொரித்து அதை தூள் பண்ணி சூடான பாலில் கலந்து குடிக்க முகத்திற்கு அழகு தரும். நரம்பு தளர்ச்சி அகலும்.
கோங்கு பிசினை உலர்த்திப் பொடித்து இளநீரில் நாளுக்கு மூன்று வேலை கொடுக்க தந்தி மேகம் ,பெரும்பாடு, செரியாக் கழிச்சல், சீத கழிச்சல் ஆகியவை தீரும்.
புரசம் பிசினுடன் பாதி அளவு கிராம்பு சேர்த்து பொடித்து அளவாகத் தேனில் குழைத்து காலை, மாலை கொடுக்க கழிச்சல் வகைகள் தீரும். நீடித்துக் கொடுக்க என்புருக்கி, ரத்த வாந்தி, ஆகியவை தீரும்.
பாதாம் மரத்தின் பிசினிற்கும் அற்புதமான பலன் உண்டு. இதுவும் நரம்பிற்கு உறுதி தருகிறது. முருங்கை மரத்து பிசின் நரம்பிற்கு உறுதி தருவதோடு உடல் வலிமைக்கும் தாதுக்களை பலப்படுத்துவதற்கும் பெரிதும் உதவுகிறது.
மாம் பட்டைச் சாற்றையோ மாம் பிசினையோ கால் வெடிப்புகளுக்கு தடவி வர குணம் ஆகும்.
அரசம்பாலை பாதத்தில் காணும் புத்த வெடிப்புகளுக்கு தடவி வர குணம் ஆகும்.
வாகைப் பிசினைப் புது சட்டியிலிட்டு வறுத்துப் பொடித்து காலை, மாலை பாலுடன் சாப்பிட்டு வர மேகக் கட்டி ,பிரமேகம், கிரந்தி, பேதி முதலியவை குணமாகும். தாது கட்டும். உடல் பொலிவு பெறும்.
விளாம் பிசினை உலர்த்திப் பொடித்து காலை, மாலை அரை தேக்கரண்டி வெண்ணெயில் கலந்து சாப்பிட்டு வர நீர் எரிச்சல், மேக நோய் ,அக உறுப்புகளில் உள்ள புண்கள், வெள்ளை, பெரும்பாடு, நீர்த்த கழிச்சல் ஆகியவை தீரும்.
இதுபோல் மருத்துவ பயன்கள் உடைய பிசின்களை பயன்படுத்தும்போது, அருகில் இருக்கும் சித்த வைத்தியரை அணுகினால், அவர் எவ்வளவு அளவு சாப்பிட வேண்டும் என்ற குறிப்புகளுடன் ஒவ்வொன்றையும் பற்றி கூறுவார். ஆதலால் அவர்களை தொடர்பு கொண்டு இது போன்ற மருந்துகளை மேற்கொள்வது உடல் நலம் பாதுகாப்பாக இருக்க உதவும். நோய்களும் எளிதில் குணமடையும்.