நம் வாழ்கையில் எத்தனையாே பிரச்சனைகள் இருந்தாலும், அதில் பெரும் பிரச்சனையாக இருப்பது இந்த முடி. முடியில் என்ன பிரச்சனை வரபோகிறது? முடி என்ன அவ்வளவு முக்கியமா? என்று கேட்டால், தலையில் முடி இல்லாமல் இருப்பவர்களிடம் பேசினால்தான் தெரியும் அந்த வலியும், வேதனையும். 'தலையில் முடி இல்லை, வழுக்கையாக உள்ளது. அதனால் திருமணம் நடக்காமல் உள்ளது' என்று புலம்புபவர்களும் உண்டு. பெண்களுக்கு எவ்வாறு கூந்தல் மீது ஆசையோ, அதே போன்று ஆண்களும் தங்களுக்கு அடர்த்தியான தலைமுடி வேண்டும் என நினைப்பார்கள் தானே!
நம்மில் பலருக்கும் இந்த பிரச்சனை இருக்கும். முன் தலையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் முடி கொட்டி, அந்த இடம் மட்டும் வழுக்கையாக தெரியும். ஆண், பெண் என்றில்லாமல் இருவருக்குமே இந்த பிரச்சனை ஏற்பட்டிருக்கும். வழுக்கையாக உள்ள இடத்தில் எவ்வாறு முடி வளர செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
குமட்டிக்காய்:
குமட்டி, குமுட்டி அல்லது குமிட்டி என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது. இது ஒரு படர்கொடி தாவரமாகும். இயற்கையாகவே கசப்பு தன்மை கொண்ட காய். மருத்துவ ரீதியாக பெரும்பாலான நோய்களை விரட்டுவதற்கு இந்த காய் பயன்படுகிறது. தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இந்த காய் கிடைக்கிறது.
அனைவருக்கும் ஒரு சந்தேகம் வரும்... இந்த குமட்டிக்காயை பயன்படுத்தி எவ்வாறு வழுக்கை தலையில் முடி வளர வைக்க முடியும் என்று. இயற்கையாகவே கசப்பு தன்மை கொண்ட காய் என்பதால், பூச்சிகளை எளிதாக விரட்டிவிடும். அதனால் தலையில் பேன் தொல்லை போன்ற பிரச்னைகள் இல்லாமல் பாதுகாக்கும்.
பூச்சி வெட்டு:
பொதுவாக ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் முடிஉதிர்ந்து, மீண்டும் வளராமல் வழுக்கையாக இருந்தால் அதை தான் நாம் பூச்சி வெட்டு அல்லது புழு வெட்டு என்கிறோம். வழுக்கையாக உள்ள இடத்தில் முடி வளருவது கடினம். ஆனால் இந்த குமட்டிக்காயை பயன்படுத்தி மீண்டும் முடி வளர வைக்க முடியும்.
முன் நெற்றி வழுக்கையில் முடி வளர:
குமட்டிக்காயை எடுத்து அதனை இரண்டாக வெட்டி, வழுக்கையாக உள்ள இடத்தில் மசாஜ் செய்வது போல தேய்க்க வேண்டும். நன்றாக தேய்த்ததும் ஒரு 20 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட வேண்டும். பிறகு எப்பொழுதும் போல தலை குளித்து வரலாம். இவ்வாறு வாரத்திற்கு இரு முறை குமட்டிக்காயை தேய்க்க வேண்டும்.
குமட்டிக்காயை சிறிய தீயில் வைத்து வாட்டினால் அதிலிருந்து சாறு வடியும். அதனை எடுத்து வழுக்கை உள்ள இடத்தில் தேய்க்க வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு இருமுறை செய்து வரலாம்.
குமட்டிக்காயை நன்றாக அரைத்து தலை முழுவதும் தேய்த்து வந்தால், பொடுகு, பேன் கடித்து உண்டாகிய புண், பூஞ்சை தொற்று, ஆகியவற்றால் முடி உதிர்ந்தால் தடுக்கப்படும். மீண்டும் முடி வளரும்.
குமட்டிக்காயை அரைத்து, இளஞ்சூடான தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி, அதனை நாள் தோறும் வழுக்கை உள்ள இடத்தில் தடவி வந்தால் சிறிது நாட்களிலேயே முடி வளர ஆரம்பிக்கும்.
மேலும் இந்த காய் கிடைக்காதவர்கள், நாட்டு மருந்து கடைகளில் கேட்டு வாங்கி பயன்படுத்தலாம்.