பருத்தியெல்லாம் இனி ஓரம் போங்க! நம்ம மூங்கில் துணி மார்க்கெட்டுக்கு வந்துருச்சு!

Bamboo Fabric dress
Bamboo Fabric dress
Published on

காலங்காலமாக நாம் பருத்தி, பட்டு, கம்பளி போன்ற துணிகளையே பயன்படுத்தி வருகிறோம். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக "மூங்கில் துணி" (Bamboo Fabric) என்ற பெயர் ஜவுளி மற்றும் ஃபேஷன் உலகில் உலா வருகிறது. ஒரு புல் வகையைச் சேர்ந்த, கடினமான மூங்கிலில் இருந்து எப்படி பட்டுப் போன்ற மென்மையான துணியை உருவாக்க முடியும்? சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வரும் இந்த 2025-ஆம் ஆண்டில், மூங்கில் துணிகள் ஏன் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கின்றன என்பதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

ஏன் இந்த திடீர் புரட்சி?

இன்றைய உலகின் மிகப்பெரிய கவலை சுற்றுச்சூழல் பாதுகாப்பு. பருத்தி சாகுபடிக்கு அதிகப்படியான தண்ணீரும், பூச்சிக்கொல்லிகளும் தேவைப்படுகின்றன. இது நிலத்தையும், நிலத்தடி நீரையும் பாதிக்கிறது. இங்கேதான் மூங்கில் ஒரு ஹீரோவாக உருவெடுக்கிறது. மூங்கில் உலகின் மிக வேகமாக வளரும் தாவரங்களில் ஒன்றாகும். 

அதற்குப் பூச்சிக்கொல்லிகளோ, உரங்களோ தேவையில்லை. மேலும், பருத்தியை விட மிகக் குறைந்த தண்ணீரிலேயே இது செழித்து வளரும். ஒருமுறை அறுவடை செய்தாலும், அதன் வேரிலிருந்து மீண்டும் துளிர்த்துவிடும். இந்தச் சுற்றுச்சூழலுக்கு உகந்த தன்மையே மூங்கிலை ஜவுளித் துறையின் அடுத்தகட்டப் புரட்சியாக மாற்றியுள்ளது.

இதையும் படியுங்கள்:
நீரிழிவு நோயா? மூங்கில் அரிசியில் ஒளிந்திருக்கும் ரகசியம்!
Bamboo Fabric dress

மூங்கில் துணியாக மாறும் விதம்!

மூங்கில் மரத்தின் கடினமான பாகங்கள், கூழாக்கப்பட்டு, பின்னர் அதிலிருந்து மெல்லிய இழைகள் பிரித்தெடுக்கப்படுகின்றன. இந்த இழைகளைக் கொண்டு நூல் நூற்கப்பட்டு, துணிகள் நெய்யப்படுகின்றன. இதில் இரண்டு முக்கிய முறைகள் உள்ளன. ஒன்று, இயந்திர முறை, இது முற்றிலும் இயற்கையானது ஆனால் சற்று செலவு அதிகம். 

மற்றொன்று, ரசாயன முறை, இதில் 'விஸ்கோஸ்' (Viscose) செயல்முறை பயன்படுத்தப்படுகிறது. இந்த முறையில் ரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டாலும், மூங்கில் இழைகளின் இயற்கையான நன்மைகள் துணியில் தக்கவைக்கப்படுகின்றன.

நன்மைகளும், சவால்களும்!

  • நன்மைகள்: மூங்கில் துணிகள் நம்பமுடியாத அளவிற்கு மென்மையாகவும், பட்டுப் போலவும் இருக்கும். இது காற்றோட்டமானது, கோடைக்காலத்தில் அணிவதற்கு மிகவும் ஏற்றது. வியர்வையை உறிஞ்சி, விரைவில் உலர்ந்துவிடும் தன்மை கொண்டது. மிக முக்கியமாக, மூங்கிலில் இயற்கையாகவே Bamboo Kun என்ற ஆன்டி-பாக்டீரியல் பொருள் இருப்பதால், துணிகளில் கிருமிகள் வளருவது தடுக்கப்பட்டு, துர்நாற்றம் ஏற்படாது.

  • சவால்கள்: விஸ்கோஸ் முறையில் தயாரிக்கப்படும்போது பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் சரியாக மறுசுழற்சி செய்யப்படாவிட்டால் சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்கும். சில நிறுவனங்கள் இதை "100% இயற்கை" என்று தவறாக விளம்பரப்படுத்துகின்றன. 

இதையும் படியுங்கள்:
மூங்கில் ஓர் உலக சாதனை: கின்னஸில் இடம் பிடித்த ரகசியம்!
Bamboo Fabric dress

ஃபேஷன் துறையில் அதன் தாக்கம்!

மூங்கில் துணிகள் ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மிகவும் பிரபலமாக உள்ளன. குறிப்பாக, சீனா மூங்கில் உற்பத்தியில் முன்னணியில் இருக்கிறது. இன்று, உள்ளாடைகள், டி-ஷர்ட்கள், படுக்கை விரிப்புகள், குழந்தைகளின் ஆடைகள், மற்றும் விளையாட்டு ஆடைகள் எனப் பலவற்றிலும் மூங்கில் பயன்படுத்தப்படுகிறது. 

பெரிய ஃபேஷன் பிராண்டுகள் கூட "சஸ்டைனபிள் ஃபேஷன்" (Sustainable Fashion) என்ற பெயரில் மூங்கில் துணிகளை அதிகளவில் தங்கள் கலெக்ஷன்களில் சேர்த்து வருகின்றன. இதன் மென்மை மற்றும் சொகுசான உணர்வு, வாடிக்கையாளர்களிடையே இதற்கு ஒரு தனி இடத்தைப் பெற்றுத் தந்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com