
தோல் வறண்டு போய், முழங்கை, முழங்கால்கள், உட்காரும் இடம் போன்ற பகுதிகளில் வேர்க்குரு போன்ற கடினமான சிறு சிறு கொப்புளங்களும், முள்முள்ளான பகுதியும் காணப்படுவதே தவளைச்சொறி எனப்படும். அந்த இடத்தில் தொட்டுப் பார்த்தால், தோல் உலர்ந்து சொறி சொறியாக காணப்படும் மற்றும் பலாப்பழத்தின் மேற்பகுதியைத் தொடுவது போல சொரசொரேவென்று இருக்கும். இது பயப்படக் கூடிய நோய் அல்ல. அந்த இடத்தில் வலியோ, நீர்க்கசிவோ இருக்காது. இந்த நோய் பெரும்பாலும் குழந்தைகளுக்கு தான் அதிகம் ஏற்படுகிறது.
இந்த நோய் எதனால் வருகிறது?
இது உடலில் தோன்றுவதற்கான காரணம் ஊட்டச்சத்து குறைபாடு, விட்டமின் ஏ, இ மற்றும் பி குறைபாடு மற்றும் உடலுக்கு தேவையான கொழுப்பு அமிலங்கள் உண்ணும் உணவின் மூலம் கிடைக்காமல் போவது தான் காரணம்.
இந்தக் குறைபாட்டை சரி செய்யும் உணவு வகைகள்;
உடலுக்கு ஊட்டச்சத்து அளிக்கும் உணவுகளான விட்டமின் ஏ அதிகம் உள்ள முருங்கைக்கீரை, பப்பாளி, மாம்பழம், மீன், பால், முட்டை, கேரட் போன்றவையும் ஆட்டு ஈரல் மற்றும் பசலைக்கீரை போன்றவற்றை உண்ண வேண்டும். நல்லெண்ணெய் உபயோகித்து சமையல் செய்தால் இந்த குறைபாடு ஓரளவு நீங்கும். நல்லெண்ணெய்யை உடம்பிலும் முழங்கால் முழங்கைகளிலும் தடவிக் கொண்டு வந்தால் குறைபாடு நீங்கும்.