
டோங்கன் என்ற கொரிய வார்த்தைக்கு உண்மையான வயதைவிட இளமையாகத் தோன்றும் ஒருவரைக் குறிக்கிறது. இது ‘குழந்தை முகம்’ என குறிப்பிடப்படுகிறது. பெரும்பாலான கொரியப் பெண்களின் லட்சியமே டோங்கன் அழகோடு இருப்பதுதான். வயதான பெண்மணிகளும் இளமையாக தோன்றும் தர மிகுந்த முக்கியத்துவம் தருகிறார்கள். அவர்களின் அழகு ரகசியம் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
கொரியப் பெண்கள் வயதானாலும் இளமையாக அழகாக தோற்றமளிப்பார்கள். அதற்காக அவர்கள் தங்களது வாழ்க்கை முறை, உணவு பழக்க வழக்கம், சருமப் பராமரிப்பு என மிகுந்த அக்கறை எடுத்துக் கொள்வார்கள். அவர்களின் சருமம் மென்மையாகவும் பளபளப்போடும் இருக்கும்.
அவர்கள் முகத்தில் உள்ள மேக்கப்பை அகற்ற எண்ணெய்யை பயன்படுத்தி மேக்கப்பை அகற்றும் வழக்கம் கொண்டிருக்கிறார்கள். மேக்கப் போடுவதற்கு முன்பும் முகத்தில் எண்ணெய் தடவி அதில் இருக்கும் வியர்வை அழுக்கு போன்றவற்றை அகற்றி, அதன்பின்பு முகத்தை சுத்தம் செய்து பிறகு மேக்கப் செய்து கொள்கிறார்கள்.
வாரத்திற்கு இரண்டு முறையாவது சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை அகற்றுகிறார்கள். அவர்கள் கடுமையான ஸ்கிரப்பர்களை விட மென்மையான ஸ்கிரப்புகளை உபயோகப்படுத்தி முகம், கழுத்து, கைகள் போன்றவற்றில் உள்ள இறந்த செல்களை எடுக்கிறார்கள்.
தினமும் அல்லது வாரத்திற்கு பல முறையாவது ஷீட் மாஸ்க் எனப்படும் காகித முகமூடிகள் அணிகிறார்கள். அவை முகத்தோடு ஒட்டிக்கொள்ளும் வகையில் இருக்கும். ஒரு மணி நேரத்திதிற்குப் பிறகு அதை நீக்கி விடலாம். அது முகத்தில் உள்ள சருமத்திற்கு செறிவூட்டுகிறது. முகத்தில் நீரேற்றத்தை தக்கவைத்து முகச் சுருக்கத்தை அகற்றுகிறது.
தரமான சன் ஸ்கிரீன், மாய்ஸ்ரைசர் போன்றவற்றை உபயோகிக்கிறார்கள். இவர்கள் கிளிசரின் பல்வேறு தாவர சாறுகள் போன்றவற்றில் தயாரான அழகு சாதனப்பொருள்களை பயன்படுத்துகிறார்கள். இதனால் அவர்களது சருமம், முகம், கைகள் கண்ணாடி போல பளபளப்பாக மின்னும்.
கிரீன் டீ, அரிசி கழுவிய தண்ணீர், புளிக்க வைக்கப்பட்ட பொருள்கள் போன்றவற்றை உட்கொள்கிறார்கள். மேலும் இவற்றை தமது சருமத்திற்கும் உபயோகிக்கிறார்கள். முகத்திற்கு இளமைத் தோற்றம் தரும் கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து முகத்திற்கு நல்ல டோன் தருகிறது. புற ஊதாக் கதிர்களில் இருந்து பாதுகாக்கிறது.
அவர்கள் முகத்தை மிக மிக மென்மையாக கையாளுகிறார்கள். இயற்கை பொருட்களை முகத்தில் தடவும் போதும், மேக்கப் போடும் போதும் தங்களது சருமத்தில் மிக மென்மையாக கிரீம்களை தடவி தட்டிக் கொடுக்கிறார்கள். இதனால் சருமம் எரிச்சல் அடையாமல், ரத்த ஓட்டம் மேம்பாடு அடைகிறது. வயதான பின்பும் டீன்ஏஜ் பெண்களைப்போல இளமையாகத் தோற்றமளிக்கிறார்கள்.
நிறையத் தண்ணீர் குடித்து உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்கிறார்கள். இதனால் உடளும் சருமமும் பளபளக்கிறது. பார்லி தேநீர், கிரீன் டீ போன்றவற்றை அருந்துகிறார்கள். நல்ல ஆழமான தூக்கத்திற்கு முக்கியத்துவம் தருகிறார்கள். இதனால் மன அழுத்தம் நிர்வகிக்கப்பட்டு சரும ஆரோக்கியம் பாதுகாக்கப் படுகிறது. அதிக ரசாயனம் சேர்க்காத அழகு சாதன பொருட்களை அவர்கள் பயன்படுத்துகிறார்கள். அதனால் அவர்கள் வயதான பின்பும் மிக இளமையாக தோற்றமளிக்கிறார்கள்.