ஆண்களோ பெண்களோ எல்லோருக்குமே தங்களுடைய சருமத்தை அழகாகவும் இளமையாகவும் பொலிவுடனும் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசையிருக்கும்.
அப்படி நம் சருமத்தை இயற்கையாகவே இளமையாக வைத்துக்கொள்வதற்கு நம் சருமத்தில் இருக்கும் கொலாஜென் என்னும் புரதம் உதவுகிறது. இது நம்முடைய சருமம், எலும்பு மற்றும் தசைகளில் உள்ளது.
இயற்கையான உணவுகளான பாதாம், ஆக்ரூட் பருப்புகள், ஆளி விதைகள், பூசணி விதைகள், சிட்ரஸ் பழங்களில் அதிகப்படியான கொலாஜென்கள் உள்ளன.
இந்த கொலாஜென் நம் உடலில் அதிகப்படியாக இருக்கும்போது முகச்சுருக்கம், கரும்புள்ளிகள், தழும்புகள் தானாகவே குறைந்துவிடுவதைக் காணலாம். இதனுடைய முக்கிய வேலை நம் சருமத்தைப் பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வதாகும். அதனால் கொலாஜென் பெருமளவு அழகிற்காகவே பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மைக்ரோ நீடிலிங் என்பது இந்த கொலாஜென் உற்பத்தியை சருமத்தில் அதிகரிப்பதற்காக செய்யப் படும் ஒருவகை ட்ரீட்மென்ட் ஆகும்.
சிறு ஊசிகளை வைத்து சருமத்தின் மேல்புறம் போடப்படும் சிறு துளைகளால் நம்முடைய சருமம் கொலாஜென் என்னும் புரதத்தை உற்பத்தி செய்து நம் சருமத்தை மிருதுவாகவும் பளபளப்பாகவும் மாற்றும்.
இந்தியாவில் மைக்ரோ நீடிலிங் செய்வதற்கான ஆரம்ப விலை 2000 ரூபாயிலிருந்து துவங்கி 30,000 ரூபாய் வரை பெறப்படுகிறது. குறைந்தது 3 தடவையாவது இந்த செயல்முறையை செய்துகொள்வதன் மூலமே சிறந்த சருமத்தைப் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊசியை பயன்படுத்துவதால் சிறிது வலி ஏற்படும் என்பது உண்மைதான். ஆனால், அழகிற்கு முக்கியத்துவம் தருபவர்கள் வலியைப் பெரிதாக கருதுவதில்லை. அதுவே இந்த முறை பிரபலமடைய காரணமுமாகும்.
இந்த மைக்ரோ நீடிலிங் செயல்முறை இளமையாக தெரிய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருந்தாலும் இதிலும் சில பாதகங்கள் இருக்கத்தான் செய்கின்றன.
சருமம் சிவந்து விடுவது, உரிவது, வலி, நோய்தொற்று போன்றவை ஏற்படலாம்.
இந்த செயல்முறை சருமப்பொலிவுக்குப் பயன் படுத்துவதை தாண்டி, புருவங்களை அழகாகவும் வடிவமாகவும் செய்துகொள்ள, டாட்டூ செய்து கொள்வதற்கு, உதடுகளைச் சிவப்பாகவே வைத்துக் கொள்வதற்கு என்று மேம்பட்டுக்கொண்டே இருக்கிறது.
லேசர் சிகிச்சை முறையைவிட மைக்ரோ நீடிலிங்கையே மக்கள் விரும்புவதற்குக் காரணம், இதனால் பெரிதாக எந்தப் பக்கவிளைவுகளும் ஏற்படாதாதேயாகும். இதை 20 வயது முதல் 30 வயது உள்ளவர்கள் செய்துகொள்ளும் பொழுது சருமத்திற்கு சிறந்த பலனைத் தருகிறது.
எத்தனை வலித்தாலும், செயற்கையான வழிமுறையாக இருந்தாலும், பணம் விரயமானாலும் ‘என்றும் 16’ ஆக இருக்க விரும்புவோர்க்கு இந்த மைக்ரோ நீடிலிங் ஒரு வரப்பிரசாதமாக இருக்கிறது என்பது நிதர்சனம்.
மைக்ரோ நீடிலிங் செய்துகொள்வதில் இருக்கக்கூடிய பாதகங்கள் என்ன என்பது குறித்து அழகுக்கலை நிபுணர் டாக்டர் வசுந்தரா அவர்கள் கூறுவது:
“மைக்ரோ நீடிலிங் செய்ய உதவும் கருவியில் குறைந்தது 500க்கும் மேற்பட்ட மெலிதான ஊசிகள் இருக்கும். இது சருமத்தில் ஆழமாக ஊடுருவாமல் பயன்படுத்தப் படுவதால் சருமத்திற்கு பெரிய பாதிப்புகள் ஏதும் வராது. சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள், சுருக்கங்கள், தழும்புகள் முழுமையாக நீங்க உதவுகிறது. சருமத்தில் உள்ள கொலாஜேன் அதிகரிக்கும்.
அழகு சம்மந்தமான துறையில் இருப்பவர்கள் கொலாஜெனை அதிகரிக்க மைக்ரோ நீடிலிங் முறையை பயன்படுத்தி வருகிறார்கள்.
சிலர் இதை சுயமாக வாங்கி பயன்படுத்தும்போது எப்படி இந்த செயல்முறையை செய்வது என்று கையாள தெரியாமல் சருமத்தில் பாதிப்பை ஏற்படுத்தி கொள்கிறார்கள். இதனால் பேக்டீரியல் நோய்தொற்று, சருமபாதிப்புகள், தழும்புகள், அக்கி போன்ற தொற்றுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
அதனால் மைக்ரோ நீடிலிங் செயல்முறையை இந்த துறையில் நன்றாக தேர்ச்சி பெற்றவர்களிடம் செய்து கொள்வதே சிறந்ததாகும்.
அப்படி தேர்ச்சி பெற்றவர்களிடம் செய்வதன் மூலம் சருமம் இளமையாக மாறுவதை கண்கூடாகக் காணலாம். தலையில் மைக்ரோ நீடிலிங் பயன்படுத்துவதால் முடி வளர்ச்சியுமே அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.”