

எண்ணெய், இறந்த சரும செல்கள் மற்றும் அழுக்குகள் சருமத் துளைகளில் அடைபடுவதால் ஏற்படும் பொதுவான சரும பிரச்னை தான் இந்த மூக்கின் மேல் உள்ள கரும்புள்ளிகள் (Blackheads). அடைப்பட்ட சருமத்துளைகளில் உள்ள பொருட்கள் ஆக்சிஜனேற்ற மடைந்து, காற்றுடன் தொடர்புகொள்ளும் பொழுது கருப்பு அல்லது அடர் சாம்பல் நிறமாக மாறுவதால் கரும்புள்ளிகள் உருவாகின்றன.
மூக்கு அதிக எண்ணெய் சுரக்கும் பகுதி என்பதால், அங்கு கரும்புள்ளிகள் அதிகமாகத் தோன்றுகின்றன. இதைப் போக்க தினமும் முகம் கழுவுதல், நோஸ் ஸ்ட்ரிப்ஸ் பயன்படுத்துதல் போன்றவை உதவும்.
1) மூக்கின் மேல் உள்ள கரும்புள்ளிகளை நீக்கும் மற்றும் தடுக்கும் வழிகள்:
*முகம் சுத்தப்படுத்துதல்:
தினமும் இரண்டு முறை எண்ணெய் இல்லாத க்ளென்சர் (Cleanser) கொண்டு முகம் கழுவுவது, அதிகப்படியான எண்ணெயை நீக்கி கரும்புள்ளிகள் உருவாவதைத் தடுக்கும்.
*நீராவி சிகிச்சை (Steaming):
முகத்தில் நீராவி பிடிப்பதன் மூலம் அடைப்பட்ட துளைகளில் உள்ள அழுக்குகள் மென்மையாகி, கரும்புள்ளிகளை எளிதாக அகற்ற உதவும்.
*உப்பு மற்றும் கடலை மாவு:
ஒரு டேபிள் ஸ்பூன் உப்பை சிறிதளவு தண்ணீரில் கரைத்து அத்துடன் கடலை மாவு சேர்த்து பேஸ்ட்போல செய்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி உலர்ந்த பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ நல்ல பலன் கிடைக்கும்.
*முட்டை வெள்ளைக்கரு:
முட்டையின் வெள்ளைக்கருவை மூக்கின் மீது தடவி, காய்ந்ததும் கழுவி வர சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் நீங்குவதுடன் கரும்புள்ளிகளும் மறையும்.
*தேன் மற்றும் சர்க்கரை ஸ்க்ரப்:
தேனை லேசாக சூடு செய்து அத்துடன் சிறிதளவு சர்க்கரையைக் கலந்து மூக்கின் மேல் தடவி மசாஜ் செய்யவும். 20 நிமிடங்கள் கழித்து கழுவினால் மூக்கின் மேல் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் சொரசொரப்பு நீங்கும்.
*நோஸ் ஸ்ட்ரிப்ஸ் (Nose Strips):
கரும்புள்ளிகளை உடனடியாக அகற்றுவதற்கு கடைகளில் கிடைக்கும் நோஸ் ஸ்ட்ரிப்ஸ் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
*சன்ஸ்கிரீன் பயன்பாடு:
எண்ணெய் இல்லாத (Oil free) சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவதன் மூலம் சூரிய ஒளியால் சருமத்தில் ஏற்படும் பாதிப்பு மற்றும் கரும்புள்ளிகளைக் குறைக்கலாம்.
2) கரும்புள்ளிகள் வராமல் தடுப்பதற்கு:
*தினமும் SPF 30+ சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது, முகப்பருவை கிள்ளாமல் இருப்பது, இரவில் சாமந்திப்பூ வாட்டர் (Chamomile water) அல்லது டோனரைப் பயன்படுத்துவது ஆகியவை கரும்புள்ளிகள் ஏற்படுவதைத் தடுக்கும்.
*சாலிசிலிக் அமிலம் (Salicylic Acid) அல்லது பீட்டா ஹைட்ராக்ஸி அமிலம்(BHA) உள்ள ஃபேஸ் வாஷ் பயன்படுத்துவது துளைகளில் உள்ள அடைப்பை நீக்க உதவும்.
*இரவில் தூங்கும் முன்பு முகத்தில் உள்ள மேக்கப்பை கண்டிப்பாக அகற்றி குளிர்ந்த நீர் கொண்டு கழுவ கரும்புள்ளிகள் வராமல் தடுக்கலாம்.
*கரும்புள்ளிகளை விரல்களால் கிள்ளுவதைத் தவிர்க்கவும். இது சருமத்தில் தழும்புகளை உண்டாக்கும்.
*வாரத்திற்கு ஒரு முறை களிமண் மாஸ்க் (clay mask) மற்றும் ஆவி பிடிப்பது (steaming) கரும்புள்ளிகள் வராமல் தடுக்க உதவும்.
*வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை மென்மையான ஸ்க்ரப் பயன்படுத்தி இறந்த சரும செல்களை நீக்கலாம்.
*எண்ணெய் பசையுள்ள சருமம் உடையவர்கள் சருமத்தை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அத்துடன் சுத்தமான, ரசாயனங்கள் குறைந்த சரும பராமரிப்பு பொருட்களை பயன்படுத்தவும்.