
அழகு என்பது மென்மையான பொலிவான சருமத்தில் மட்டுமல்ல, சருமம் மாசு, மரு மற்றும் பருவற்று பளீரென்று இருந்தால் மட்டுமே அழகு கூடும். ஒரு சிலருக்கு அவர்கள் எவ்வளவு அழகாக இருந்தாலும் முகத்தில் வரும் பருக்கள் அவர்களது அழகையே குறைத்து அவர்களை கவலைக்குள்ளாக்கிவிடும்.
இதற்கு என்னதான் வழி என்று அவர்கள் பிறர் சொல்வதை எல்லாம் முயற்சித்து கடைசியில் சலித்து விடுவார்கள். இல்லையெனில் மேலும் பாதிப்படைவார்கள்.
இதை தவிர்க்க இருக்கவே இருக்கு நம் பாட்டி வைத்தியத்தில் பெரும் பங்கு வகித்த 'வேம்பு' (Neem) எனப்படும் 'வேப்பிலை'(Neem leaves).
வேம்பு பருக்களை குணப்படுத்த மிகவும் ஏற்றதாக உள்ளது. இது மேலைநாட்டு விஞ்ஞானிகளும் ஒப்புக்கொண்ட ஒரு விஷயம்.
வேம்பு எப்படி பருக்களை நீக்குகிறது? அது குறித்து சில தகவல்கள் இங்கு...
பருக்களுக்கு வேம்பு பயன்படுத்துவதன் நன்மைகள் (Benefits of using neem for acne):
வேம்பில் உள்ள அழற்சி எதிர்ப்பு (anti-inflammatory), பாக்டீரியா எதிர்ப்பு (antibacterial) மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளால் (antioxidant properties) பல நன்மைகளை அளிக்கிறது. இது முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களுடன் போராடி அவற்றை அழித்து, பருக்கள் மேலும் உருவாவதைத் தடுக்கிறது. பருக்களால் உண்டாகும் வீக்கத்தையும் முகம் சிவத்தலையும் குறைக்கிறது. சருமத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெய் உற்பத்தியைக் கட்டுப்படுத்துவதுடன் சருமத் துளைகளை அடைக்காமல் சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைக்கிறது.
முகப்பருவுக்குப் பிறகு சருமத்தில் ஏற்படும் வடுக்களைப் போக்க உதவும். மேலும் வாடிய சருமத்திற்கு ஆற்றலை அளித்து பொலிவுடனும் புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க உதவுகிறது.
வேம்பு ஃபேஸ் பேக்குகள் போடுவதால் வேம்பின் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் மூலம் சருமத்தில் உள்ள பாக்டீரியாக்களைக் கட்டுப்படுத்தி, பருக்களைப் போக்க உதவுகின்றன.
பருக்களுக்கு வேம்பு பயன்படுத்தி DIY ஃபேஸ் பேக்குகள் (DIY neem for acne face packs):
கொழுந்து வேப்ப இலைகளை மையாக அரைத்து பேஸ்ட்டாக்கி அதை முகப்பருக்கள் அல்லது பாதிக்கப்பட்ட பகுதிகளில் பூசலாம். பேஸ்ட் நன்கு காய்ந்த பிறகு, வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவலாம்.
தரமான வேப்ப எண்ணெயை நீர்த்துப்போகச் செய்து, பருக்கள் உள்ள இடத்தில் தடவி 20 நிமிடங்கள் வரை ஊறவைத்துக் கழுவலாம்.
வேப்பிலை பவுடர் அல்லது வேப்பிலையை விழுதாக அரைத்து சந்தனப் பவுடர், ரோஸ் வாட்டர் கலந்து, பேஸ்ட் ஆக்கி அதை முகத்தில் தடவி 15-20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவவும்.
வேப்பிலை பவுடர், கடலை மாவு, மஞ்சள் பவுடர், பால் அல்லது தயிர் ஆகியவற்றைக் கலந்து மென்மையான பேஸ்ட் ஆக்கி அதை முகத்தில் தடவி, உலர்ந்ததும் கழுவவும். இது சருமத்தை சுத்தப்படுத்தி, வடுக்களைக் குறைக்கும்.
பருக்களுக்கு வேம்பை எவ்வாறு பாதுகாப்பாகப் பயன்படுத்துவது? (Neem for acne: How to use it safely)
வேம்பு இயற்கை எனினும் அதிலும் எச்சரிக்கை தேவை. வேம்பை பாதுகாப்பாக பயன்படுத்த பல வழிகள் உண்டு. வேப்ப எண்ணெயை பயன்படுத்துவதற்கு முன் சிறிய பகுதியில் பரிசோதனை செய்வது அவசியம். எந்தவொரு சரும பராமரிப்புப் பொருளைப் பயன்படுத்தும் முன்பும் சருமத்தின் சிறிய பகுதியில் பரிசோதனை செய்வது முக்கியம். இதன் மூலம் உங்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டால் இதைத் தவிர்க்க வேண்டும்.
தூய வேப்ப எண்ணெய் மிகவும் சக்தி வாய்ந்தது ஏன்பதால் அதை நேரடியாகப் பயன்படுத்தும்போது, சிலருக்கு சரும எரிச்சல் அல்லது ஒவ்வாமை ஏற்படலாம். எனவே, எப்போதும் தேங்காய் எண்ணெய் போன்ற கேரியர் எண்ணெயுடன் அதை நீர்த்துப்போகச் செய்து பிறகு பயன்படுத்தலாம்.
தூய்மையான பருத்தி துணி அல்லது பஞ்சு பயன்படுத்தி நீர்த்த வேப்ப எண்ணெயை பாதிக்கப்பட்ட பகுதிக்கு அழுத்தமின்றி லேசாக தடவவும்.
வேப்ப எண்ணெய் அல்லது வேப்ப பேஸ்ட்டைப் பயன்படுத்தும் போது, கண் பகுதியை கவனமாகத் தவிர்க்கவும்.
சருமம் மிகவும் மென்மையானது என்பதால் அனைவருக்கும் இந்த வேம்பு போன்ற இயற்கை பொருள் ஏற்புடையதல்ல என்பதிலும் கவனம் தேவை.
ஒவ்வாமை உள்ள சரும பிரச்சனைகள் மற்றும் நீண்ட கால முகப்பருக்களுக்கு இது போன்ற வீட்டு முறையை பயன்படுத்தும் முன் நல்ல மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது சிறந்தது.