

புரட்டாசி முடிந்து ஐப்பசி ஆரம்பிக்கப்போகிறது. இனி மழையும் ஆரம்பித்துவிடும். ஐப்பசியில் அடை மழை என்பது பழமொழி. இந்த வருகின்ற மழைக்காலத்தில் நாம் சருமம் பாதிப்புகளை சந்திக்காமல் இருக்க சில அழகு குறிப்புகள்.
வெயில் காலத்தில் சருமம் அடையும் வறட்சி ஒருபுறம் என்றால் மழைக்காலத்தில் வேறுவிதமான வறட்சியை நம் சருமம் சந்திக்க நேரிடும். உதடுகள் வெடிப்பது, உலர்ந்து போவது, பாதங்களில் வெடிப்பு, சேற்றுப்புண் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதற்கு சில பராமரிப்பு முறைகளை பின்பற்றினால் பாதிப்பு அதிகம் ஏற்படாமல் நம் சருமத்தை பாதுகாத்துக்கொள்ளலாம்.
முதலில் நம் சருமம் சொரசொரப்பாவதை தடுக்க குளிக்க போவதற்கு முன்பு சிறிது தேங்காய் எண்ணெயை சுட வைத்து நம் உடல் முழுவதும் தடவி சிறிது நேரம் (15 நிமிடங்கள்) கழித்து குளிக்க சருமம் வறண்டு சொரசொரப்பாகாமல் பளபளப்புடன் மிருதுவாகவும் இருக்கும்.
காடியான சோப்புகளை பயன்படுத்தாமல் கிளிசரின் கலந்த, எண்ணை கலந்த சோப்புகளை பயன்படுத்துவது நல்லது.
மழைக்காலங்களில் ஃபேஸ் பேக் பயன்படுத்துவதை தவிர்த்து குளியல்பொடி (அதுவும் வீட்டிலேயே தயாரித்ததாக இருந்தால் இன்னும் நல்லது) பயன்படுத்த சருமத்தில் பாதிப்பு அவ்வளவாக ஏற்படாது.
நார்மல் ஸ்கின், வறண்ட சருமம், எண்ணெய் பசை உள்ள சருமம் எதுவாக இருந்தாலும் ரோஜா இதழ்கள் காய வைத்தது ஒரு கப் மிக்ஸியில் பொடித்துக் கொண்டு, நெல்லி பொடி, அதிமதுரம் பொடி (இவை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்), மஞ்சள் தூள் ,சந்தன பொடி எல்லாம் சம அளவு கலந்து ஈரம் படாத இடத்தில் வைத்துக் கொள்ளவும். இந்தப்பொடி ஒரு ஸ்பூன் எடுத்து நீர் விட்டு குழைத்து முகம், கழுத்துப் பகுதிகளில் தடவி 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி வர முகம் பொலிவு பெறும். மஞ்சள் பொடியை மட்டும் தவிர்த்துவிட்டு ஆண்களும் இதனை உபயோகிக்கலாம்.
மழைக்காலங்களில் ஈரப்பதம் அதிகம் இருப்பதால் பாதங்களில் சேற்றுப்புண் பிரச்னை வரும். இதற்கு கடுக்காய் பொடியை (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) வாங்கி அதனை தேங்காய் எண்ணில் குழைத்து சேற்றுப் புண் உள்ள இடங்களில், விரல்களுக்கு நடுவே, உள்ளங்காலில் தடவிவர குணமாகும்.
இன்னும் ஒரு சிம்பிள் முறையும் உள்ளது. விளக்கெண்ணையில் சிறிது மஞ்சள்தூள் கலந்து சேற்றுப்புண் உள்ள இடங்களில் தடவி வர விரைவில் குணமாகும்.
பாதங்களில் வெடிப்பு பிரச்னையும் இந்த மழைக் காலங்களில் வரும். இதற்கு இரவு படுக்கப் போகும் முன்பு பாதங்களை வெந்நீரில் கழுவி ஈரம் போக நன்கு துடைத்து உலர்ந்ததும் தேங்காய் எண்ணெயை தடவி சிறிது மசாஜ் செய்யவும். வெடிப்பு எங்கே என தேடுவீர்கள். தேங்காய் எண்ணெய்க்கு பதில் மாய்சரைசரையும் உபயோகிக்கலாம்.
பப்பாளி பழத்தை சிறிது எடுத்து மிக்ஸியில் அரைத்து கடலைமாவு சேர்த்து நன்கு கலந்து முகம் ,கழுத்து பகுதிகளில் தடவிவர முகத்தில் இருக்கும் வறண்ட, இறந்த செல்களை நீக்குவதுடன், பருக்கள் வராமலும் தடுக்கும்.
prevention is better than cure என்பதுதான் சரி. மழைக் காலத்தில் சருமம் அதன் இயல்பு தன்மையை விட்டு மாறாமல் இருக்க இப்படி சில குறிப்புகளை பின்பற்றினால் மழைக்காலத்திலும் சருமம் பாதுகாப்பாக இருக்கும்.
Kalkionline-ஐ Google செய்திகளில் பின்தொடர... Google News
Kalkionline-ஐ முகநூலில் பின்தொடர... Kalkionline Facebook, Mangayar Malar Facebook
Kalkionline-ஐ இன்ஸ்டாகிராமில் பின்தொடர... Kalkionline Instagram, Mangayar Malar Instagram
Kalkionline-ஐ வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
Kalkionline-ஐ பின்தொடர: Youtube, Twitter
Add KalkiOnline as a preferred source on Google... Click Here