விலை உயர்ந்த சன்ஸ்கிரீன் வாங்கினாலும் வேஸ்ட்தான். இதை தெரிஞ்சுக்காம முகத்துல தடவாதீர்கள்!
கோடைக்காலம் வந்தாலோ, லேசாக வெயில் அடித்தாலோ நாம் முதலில் தேடுவது சன்ஸ்கிரீன் க்ரீம்களைத்தான். கடைகளில் விற்கும் விலை உயர்ந்த சன்ஸ்கிரீன்களை வாங்கி முகத்தில் பூசிக்கொண்டு வெளியே செல்வது பலருக்கும் ஒரு வழக்கமான ஒன்றாகிவிட்டது. இருந்தாலும் பலரும் புலம்பும் ஒரு விஷயம், இவ்வளவு காசு கொடுத்து க்ரீம் போட்டாலும் முகம் கருத்துப்போகிறது என்பதுதான்.
இதற்கு காரணம் அந்த பொருளின் தரம் கிடையாது, நாம் அதை பயன்படுத்தும் தவறான முறைதான். சன்ஸ்கிரீனை சரியான முறையில் எப்படி பயன்படுத்துவது என்பதைப் பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க.
சரியான அளவு மிக முக்கியம்!
சாதாரண ஃபேர்னஸ் க்ரீம், மாய்ஸ்சரைசர் தடவுவது போல ஒரு சின்ன பட்டாணி அளவுக்கு சன்ஸ்கிரீனை எடுத்து முகத்தில் தடவினால் எந்த ஒரு பலனும் கிடைக்காது. உங்கள் முகத்திற்கும் கழுத்திற்கும் தேவையான பாதுகாப்பை கொடுக்க, குறைந்தது உங்கள் ஆள்காட்டி விரல் மற்றும் நடுவிரல் ஆகிய இரண்டு விரல்கள் முழுவதுமாக நிரம்பும் அளவுக்கு க்ரீமை எடுக்க வேண்டும். இதைத்தான் 2 Finger Rule என்று சொல்வார்கள். இந்த அளவுக்கு தாராளமாக எடுத்து முகத்தில் ஒரு லேயர் போல மெதுவாகப் பூசவேண்டும்.
வெளியே செல்லும் நேரம்!
பலரும் செய்யும் மிகப்பெரிய தப்பு, சன்ஸ்கிரீனை முகத்தில் தேய்த்த அடுத்த நொடியே வெயிலில் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பி விடுவார்கள். இது முற்றிலும் தவறான ஒரு செயலாகும். எந்த ஒரு சன்ஸ்கிரீனும் உங்கள் சருமத்தில் நன்றாக ஊடுருவி ஒரு பாதுகாப்பு கவசத்தை உருவாக்க குறைந்தது 20 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும். அதனால், நீங்கள் வீட்டை விட்டு வெளியே கிளம்புவதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பாகவே இதை பொறுமையாக முகத்தில் தடவி விடுவது மிக மிக அவசியமான ஒன்றாகும்.
மீண்டும் மீண்டும் தடவுங்கள்!
காலையில் ஒருமுறை சன்ஸ்கிரீன் போட்டுவிட்டால் நாள் முழுவதும் அது நம்மை பாதுகாக்கும் என்று நினைப்பது ரொம்பவே தவறான எண்ணம். நாம் வெளியே சுற்றும் போது வடியும் வியர்வை மற்றும் காற்றில் இருக்கும் தூசுகள் அந்த க்ரீமின் பவரை சில மணி நேரங்களிலேயே குறைத்துவிடும். எனவே, நீங்கள் தொடர்ந்து வெயிலில் வேலை செய்பவராக இருந்தால், ஒவ்வொரு இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கும் ஒருமுறை முகத்தை துடைத்துவிட்டு மீண்டும் சன்ஸ்கிரீனை தடவுவது உங்கள் சருமத்தை முழுமையாகப் பாதுகாக்கும்.
வீட்டுக்குள்ளும் பாதுகாப்பு தேவை!
வெளியே வெயிலில் சென்றால் மட்டும் தான் சன்ஸ்கிரீன் போட வேண்டும் என எந்த ஒரு கட்டாயமும் இல்லை. உங்கள் வீட்டு ஜன்னல் வழியாக வரும் வெளிச்சம் மற்றும் மொபைல், லேப்டாப் ஸ்க்ரீன்களில் இருந்து வரும் கதிர்வீச்சுகள் கூட உங்களின் சருமத்தை மெல்ல மெல்ல பாதிக்கக் கூடியவை தான். அதனால் மழைக்காலமாக இருந்தாலும் சரி, அல்லது நாள் முழுவதும் வீட்டுக்குள்ளேயே ஏசியில் உட்கார்ந்திருந்தாலும் சரி, காலையில் முகம் கழுவியவுடன் ஒரு முறை சன்ஸ்கிரீன் தடவுவதை உங்களின் தினசரி பழக்கமாக மாற்றிக் கொள்ளுங்கள்.
சன்ஸ்கிரீன், நமது சருமத்தை வயதாகாமல் தடுக்கும் ஒரு மாபெரும் மேஜிக் க்ரீம் ஆகும். அதை சரியான முறையில் பயன்படுத்தினால் மட்டுமே அதற்கான முழுமையான பலன் நமக்கு கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதை விட, அதை எப்படி நமது சருமத்திற்கு ஏற்றவாறு சரியாகப் பயன்படுத்துகிறோம் என்பதில் தான் உண்மையான சூட்சுமம் அடங்கியிருக்கிறது.

