
பெண்களுக்கு இயற்கையாக அமைந்துள்ள இயல்புகளையும் அத்தகைய இயல்பு உடையவர்களின் இலட்சணங்களையும் உலகம் எங்கிலும் உள்ள பெண்களின் சுபாவங்களையும் வரிசைப்படுத்தி கூறியுள்ளனர். அதில் குறிப்பிட்ட சில லட்சணங்களை இதில் காண்போம்.
யக்ஷ சுபாவம்;
இவர்களை இயற்கை விரும்பிகள் என்று கூறினால் மிகையாகாது. அதுபோல் தன்னை அலங்கரித்துக் கொள்வதிலும் தன் இஷ்டப்படி எல்லாவற்றையும் ரசிப்பதிலும் அதிக ஆர்வம் உடையவர்கள். இவர்களைப் பற்றிய லட்சணக் குறிப்பு கூறும் சங்கதி என்னவென்றால், இப்பெண்மணிகள் தங்களை மேலும் அழகுப்படுத்திக் கொள்ளும் ஒப்பனைகளை செய்து கொள்வதில் மிகத்திறமை உடையவர்கள். இசைக்கருவிகளை இயக்குவதிலும் இனிமையாக பாடுவதிலும் விருப்பம் உடையவர்கள்.
இவர்கள் பொன், பொருள்களை சேமிப்பதிலும், பேணிக் காப்பதிலும் அதிக அக்கறை உடையவர்களாகவும் விளங்குவார்கள். மேலும் இவர்கள் ஏரிகள், குளங்கள், நீச்சல் குளங்கள் ஆகியவற்றில் இறங்கி நீராடி திளைத்து மகிழ்வதில் விருப்பம் உடையவர்கள் .கனிமலர் சோலைகளிலும் மலர் பூங்காக்களிலும் ஆடி பாடி மகிழ்வதிவல் அதிக ஆர்வம் உடையவர்கள். சிலர் எப்பொழுதும் அழகுடன் மிளிர்வதைக் காணலாம். அவர்கள் இப்படிப்பட்ட இயல்பை உடையவர்கள் என்கிறது இலட்சண சாஸ்திரம்.
ரிஷி சுபாவம்:
தர்மம், ஒழுக்கம், அன்பு, இரக்கம், கருணை ஆகியவற்றில் சிறந்து விளங்கும் அடக்கமான குணமுடைய இவர்கள் மிகவும் தெய்வ பக்தி உடையவர்கள். எதிலும் எளிமையையும், தூய்மையையும், சத்தியத்தையும் விரும்பி மகிழும் குணம் உடையவர்கள் என்றும், சமய சந்தர்ப்பச் சூழ்நிலைகளை அறிந்து நடந்து கொள்ளும் சுய அறிவு மிக்கவர்கள் என்றும் கூறுகிறது சாஸ்திர குறிப்பு.
சிங்கச் சுபாவம்:
கிராமத்தில் ஒரு பழமொழி கூறுவார்கள் வழி வம்புக்கும் போக மாட்டான் வந்த சண்டையையும் விடமாட்டான் என்பதுதான் அது. அதுபோன்ற குணம் உடையவர்கள் இவர்களே. இவர்கள் எத்தகைய துன்பத்தையும் துணிவுடன் தாங்கும் இயல்பு உடையவர்கள். கால நேரம் கடந்தும் எதிலும் சுகம் காண்பதில் ஆர்வம் உடையவர்கள். சோம்பலற்றவர்கள். பயம் இல்லாதவர்கள். கம்பீரமான பேச்சும் நடையம் உடையவர்கள். அதிகாரத்துக்கு பயப்படாதவர்கள்.
யாருக்கும் அடங்காத இவர்கள் அன்பு உடையவர்கள் இடத்தில் அதிக பாசம் கொள்வார்கள். காடுகள், மலைகள், ஏரிகள் நிறைந்த இயற்கை எழில்களை விரும்பி நாடி செல்வதில் அதிக நாட்டமுடையவர்கள். ஆண்களின் வீர விளையாட்டுகளைப் பார்த்து ரசிப்பதில் தனியார்வம் உடையவர்கள். பிள்ளைகளிடத்தில் அதிக பாசம் உடையவர்கள். அளவுக்கு மீறிய உணவுகளை அருந்தாமல் சுவை மிக்க சத்துணவுகளையே அருந்துபவர்கள். தம் நலனை எப்போதும் பேணிக்காப்பதில் அதிக அக்கறை உடையவர்கள். சிங்கச் சுவாபம் உடைய பெண்கள் என்கிறது இலட்சண சாஸ்திரம்.
தெய்வ சுபாவம்:
தெய்வீக நம்பிக்கையும், தார்மீக விஷயங்களில் மனநாட்டமும் உடைய இவர்கள் அழகிய அடக்கமான உடல் தோற்றத்தினர். நறுமணம் கமழும் மேனியும், நேர்த்தியான ஆடைகளையும், சிறந்த நகாஸ் வேலை திறன் உடைய நகைகளையும் விரும்பி அணிபவர்கள். அற்ப நித்திரையுடைய இவர்கள், நுட்பமான ஸ்பரிஸ உணர்வுகளை உடையவர்களாகவும் விளங்குவார்களாம்.
வித்தியா சுபாவம்:
இவர்கள் முழுமதியை போன்ற முகராசி உடையவர்கள். அழகான பொருள்களிலும், கலைநுட்பம் உடையவர்களிடமும் ஆசை கொள்பவர்கள். சகல கலைகளிலும் தேர்ந்த, இயற்கையிலேயே சாந்தமான சாத்வீக குணமுடையவர்கள் இவர்களே என்கிறது லட்சண சாஸ்திரம்.
காந்தர்வ சுபாவம்:
நறுமணமிக்க மலர்களை அணிவதில் நாட்டம் உடைய, இனிமையும், மென்மையும் மிக்க குரல் வளம் உடையவர்கள் இவர்களே என்கிறது இலட்சண குறிப்பு. மேலும் இன்ப ரசம் மிகுந்த கேளிக்கைகளில் அதிக நாட்டமுடையவர்களாகிய இவர்கள் , கலை ஆர்வம் மிக்கவர்களாகவும் திகழ்வார்கள் என்கிறது சாஸ்திர குறிப்பு.
குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொளல் என்கிறது திருக்குறள். அதற்கு தகுந்தாற்போல் எல்லா பெண்களிடத்திலும் எவ்வளவு அழகு, ஆரோக்கியம் இருந்தாலும், சில குறைபாடுகள் இருக்கவே செய்யும். அவற்றை பெரிது படுத்தாமல் அதிகமாக இருக்கும் குணத்தை வசீகரித்து அதற்கு தகுந்தாற்போல் அவர்களிடம் அன்பு பாராட்டுவதும் இயற்கையில் சிறந்த இயல்பே என்பதை அறிவோம். அதன் வழி நடப்போம் ஆக!