

ஒரு விலங்கு ஆபத்தானது என்றால் உடனே நம் நினைவுக்கு வருவது அதன் கூர்மையான பற்களும் பெரிய நகங்களும் தான். சிங்கம், புலி போன்ற பெரிய விலங்குகளைப் பார்த்தால் தான் நாம் பயந்து நடுங்குவோம். ஆனால் இயற்கையின் படைப்பில் சில விசித்திரமான விலங்குகள் உள்ளன. அவை உங்களை தொட வேண்டிய அவசியமே இல்லை.
இரத்தம் சிந்த வைக்கும் எந்த ஒரு நேரடி தாக்குதலும் இல்லாமல், மிக அமைதியாக உங்கள் உயிரை எடுக்கும் வித்தையை இவை தங்களுக்குள் மறைத்து வைத்துள்ளன. நோய்கள் மூலமாகவோ, உடலுக்குள் இருக்கும் ரசாயன விஷத்தின் மூலமாகவோ மரணத்தை பரிசளிக்கும் 5 உயிரினங்கள் என்னென்ன என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
1. கொசு (Mosquito)!
இந்த லிஸ்டில் முதலில் இருப்பது நம்ம ஊர் கொசுக்கள் தான். பார்ப்பதற்கு மிகச் சிறியதாக இருந்தாலும், உலகில் அதிக மனிதர்களை கொன்ற ஒரு ஜீவன் இதுவாகத்தான் இருக்கும். இவை நேரடியாக யாரையும் கொல்வதில்லை. டெங்கு, மலேரியா மற்றும் ஜிகா போன்ற கொடிய நோய்களை ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு டெலிவரி செய்யும் ஒரு ஏஜென்ட் போல செயல்படுகின்றன. இவற்றின் பலம் என்பது உருவத்தில் இல்லை, இவை தங்களுக்குள் சுமந்து செல்லும் அந்த கிருமிகளில் தான் முழுமையாக ஒளிந்திருக்கிறது.
2. பஃபர் மீன் (Pufferfish)!
பார்க்க ரொம்பவே க்யூட்டாக இருக்கும் இந்த பஃபர் மீன்கள் ஒரு நடமாடும் விஷ பாட்டில் ஆகும். இந்த மீன் உங்களை துரத்தி வந்து கடிக்காது. ஆனால் இதை சரியான முறையில் சுத்தம் செய்யாமல் சமைத்து சாப்பிட்டால் அதனுள் இருக்கும் டெட்ரோடோடாக்சின் என்ற கொடிய விஷம் சில நிமிடங்களிலேயே மனிதர்களை காலி செய்துவிடும். சாப்பாட்டு தட்டில் வைத்து ஒரு உயிரை எடுக்கும் அளவுக்கு இது ரொம்பவே டேஞ்சரான ஒரு உயிரினம்.
3. தங்க விஷத் தவளை (Golden Poison Frog)!
மஞ்சள் நிறத்தில் தகதகவென மின்னும் இந்த குட்டி தவளை உலகின் மிக கொடிய விஷம் கொண்ட உயிரினங்களில் ஒன்று. இதன் மேல் தோலில் இருக்கும் விஷம் மிக மிக ஆபத்தானது. இதை ஒருமுறை தொட்டுவிட்டு அந்த கையை நமது முகத்தில் வைத்தாலே போதும், மரணம் உறுதியாகிவிடும். தன்னை யாரும் வேட்டையாடி சாப்பிடக் கூடாது என்பதற்காக தன் உடல் முழுவதையும் இது ஒரு விஷ ஆயுதமாக மாற்றி வைத்துள்ளது.
4. கண்ணை குறிவைக்கும் நாகம் (Spitting Cobra)!
பொதுவாக பாம்புகள் கடித்தால் தான் விஷம் உடலில் ஏறும். ஆனால் இந்த ஸ்பிட்டிங் கோப்ரா எனப்படும் துப்பும் நாகப்பாம்பு ஒரு ஸ்னைப்பர் போல செயல்படும். தூரத்தில் எதிரி நிற்பதை பார்த்தவுடனே, தனது விஷத்தை அப்படியே நேராக அவர்களின் கண்களை நோக்கி பீய்ச்சி அடிக்கும். இதற்காக அது உங்கள் அருகில் வரவேண்டிய அவசியமே இல்லை. அந்த விஷம் கண்களை நிரந்தரமாக குருடாக்கும் அளவுக்கு மிக கொடூரமான பவரை கொண்டது.
5. நியூட் எனப்படும் விசித்திர உடும்பு (Rough Skinned Newt)!
ரஃப் ஸ்கின் நியூட் எனப்படும் இந்த சின்னஞ்சிறு உடும்பு போன்ற உயிரினமும் பஃபர் மீனை போலவே அதே கொடிய விஷத்தை தனது உடலுக்குள் ரகசியமாக வைத்துள்ளது. இது ரொம்பவே அமைதியான ஒரு உயிரினம், யாரிடமும் வலிய போய் சண்டைக்கு நிற்காது. ஆனால் தவறுதலாக இதை யாராவது விழுங்கிவிட்டால், அடுத்த சில நிமிடங்களில் அதனுள் இருக்கும் கெமிக்கல் ரியாக்ஷன் தனது வேலையை காட்டி அவர்களின் உயிரை எடுத்துவிடும்.
ஆபத்து என்றால் எப்போதுமே பெரிய உருவத்துடனோ அல்லது பயங்கரமான சத்தத்துடனோ தான் வரும் என நாம் நினைப்பது ரொம்பவே தவறு. இயற்கையில் மரணம், இது போன்ற மிகச் சிறிய மற்றும் அழகான உயிரினங்களுக்குள்ளும் ரொம்பவே அமைதியாக ஒளிந்திருக்கும்.