

ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் வெப்பநிலை அதிகரித்து வருவது தொடர்கதையாகிவிட்டது. பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் இந்த வெப்பநிலை உயர்வு, கடும் உடல்நல அபாயங்களையும் உண்டாக்கும். சமீபத்தில் 'தி லான்செட் குளோபல் ஹெல்த்' என்ற ஆய்விதழில் ஒரு ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது. அதில் அதிகரித்து வரும் வெப்பத்தினால் மக்கள் தங்களின் உடல் செயல் பாடுகளை குறைத்துக்கொள்வார்கள். இதனால், 2050 ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 7 லட்சம் பேர் வரை உயிரிழக்க நேரிடும் என்று ஆய்வு தெரிவித்துள்ளது.
அதிகரிக்கும் வெப்பத்தினால் மக்கள் திறந்தவெளியில் வேலைகளையும், உடற்பயிற்சியும் செய்வதில்லை. அதிக வெப்பநிலை உடற்பயிற்சி செய்யும் திறனை கடுமையாக குறைக்கிறது. இதனால், மக்கள் உடற்பயிற்சி, நடைபயிற்சி போன்றவற்றில் ஈடுபாடு காட்டுவதை குறைத்துள்ளனர்.
வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் வெப்ப உயர்வு காரணத்தினால் மக்களின் உடல் செயல்பாடு 15% வரை குறையும் என்று ஆய்வு கூறியுள்ளது.
உலக சுகாதார அமைப்பு (WHO) நிர்ணயித்துள்ள உடற்பயிற்சி தரநிலைகளை , உலகில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் இன்னும் பூர்த்தி செய்ததில்லை. இந்த அமைப்பின் தகவல்படி 18 முதல் 64 வயதுக்குட்பட்டவர்கள், வாரத்திற்கு 150 நிமிடங்கள் வரை மிதமான உடற்பயிற்சியும், 75 நிமிடங்கள் வரை தீவிர உடற்பயிற்சியிலும் ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. ஆனால், இதை பெரும்பாலான மக்கள் கடைபிடிக்காததால் , ஆரோக்கிய குறைபாட்டிற்கு வழிவகுக்கும் என்று ஆய்வில் கண்டறியப் பட்டுள்ளது.
அதிகரிக்கும் வெப்பத்தின் காரணமாக மக்களின் உடல் சார்ந்த செயல்பாடு குறைவதால், உடல் பருமன், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் ஏற்படக்கூடும். இந்த நோய்கள், உடலுக்கு மற்ற நோய்களை வரவழைக்கும் முக்கிய காரணிகளாக இருக்கிறது. இவற்றின் தீவிரத்தை கண்காணிக் காவிட்டால் அவை உயிரிழப்பிற்கு கூட வழிவகுக்கும். இது மட்டுமல்ல அதிக வெப்பத்தின் காரணமாக, நீரிழப்பினால் ஏற்படும் உயிரிழப்பு அபாயங்களும் அதிகரிக்கும்.
வெப்பம், மாசுபாடு, வெப்பம் சார்ந்த திடீர் உடல்நல குறைபாடுகள், உடல் உழைப்பின்றி ஏற்படும் நோய்கள், ஆகியவற்றின் காரணமாக ஆண்டு தோறும் 20 லட்சம் மக்கள் பலியாகக் கூடும். இதில் வெப்ப அளவு கணிசமாக உயர்ந்தால், மேலும் 2 லட்சம் பேர் வரை பலியாகக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. அதாவது மொத்தமாக 22 லட்சம் பேர் வரை இதனால் பலியாகலாம் என்று அந்த ஆய்வு கூறுகிறது. உலக அளவில் இந்த பாதிப்புகள் தொடர்ந்தால், வெப்பமண்டல இந்தியாவிலும் அதன் பாதிப்புகள் அதிகமாக இருக்கும்.
2050 ஆம் ஆண்டில், உடல் உழைப்பின்மையால் இந்தியாவில் 1 லட்சம் பேருக்கு 10.62 என்ற அளவில் உயிர்பலி விகிதம் இருக்கும். வெப்பம் அதிகரிக்கும் போது மக்கள் தங்கள் உடல் சார்ந்த செயல்பாடுகளை அதிகமாக குறைத்துக் கொள்ளக் கூடாது. பாதுகாப்பான முறையில் உடல் உழைப்பு, உடற்பயிற்சி ஆகியவை அவசியம் என்று வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர். மேலும் , பருவநிலை மாற்றத்தைக் கவனத்தில் கொண்டு புவி வெப்பமயமாதலை குறைக்கும் முயற்சிகளில் அனைவரும் ஈடுபட வேண்டும்.