வட இந்திய மலை பகுதிகளில் அடிக்கடி மேக வெடிப்பு நிகழும் செய்திகளைக் கேட்டிருப்போம். இது எதனால் நிகழ்கிறது? எங்கெங்க நிகழ்கிறது? நமக்கும் இந்த ஆபத்து இருக்கா? தெரிந்துகொள்வோம்.
மேக வெடிப்பு: மேக வெடிப்பு என்பது ஒரு சிறிய புவியியல் பகுதியில் திடீரென தீவிரமாக பெய்யும் கனமழை ஆகும். இது பொதுவாக 20-30 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஒரு மணி நேரத்திற்குள் 100 மிமீக்கு மேல் மழையைத் தரும். சாதாரண மழையைப் போலல்லாமல் மேக வெடிப்புகள் மக்களுக்குப் பெரும் அச்சுறுத்தல்களைத் தரக்கூடியவை. பெரும்பாலும் இடி, ஆலங்கட்டி மழையுடன் பலத்த காற்றுடன் இருக்கும். தனித்துவமான நிலப்பரப்பு, வளிமண்டல நிலைமைகளை (unique atmospheric conditions) கொண்ட மலைப் பகுதிகளில் குறிப்பாக இமயமலையில் இது மிகவும் பொதுவாக நிகழக்கூடியவை.
எப்படி உருவாகிறது? வெப்பமான ஈரப்பதம் நிறைந்த காற்று அங்கு சூழ்ந்துள்ள மலைகளில் பட்டு வானத்தை நோக்கி ஓரோகிராஃபிக் லிஃப்ட் (orographic lift) மூலம் செல்வதுதான் இந்த நிகழ்வின் தொடக்கமாகும்.
அப்படி காற்று உயர்ந்து போகும்போது, அது முற்றிலும் குளிர்ந்து குமுலோனிம்பஸ் மேகங்களாக (cumulonimbus clouds) மாறுகிறது. இந்த மேகங்களுக்குள் இருக்கும் நீர்த்துளிகள் (Moisture) Orographic lift ஆல் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து மேகத்தை அடர்த்தியாக மாற்றி அதிலுள்ள மொத்த ஈரப்பதத்தையும் திடீர் மழையாய் ஓர் இடத்தில் பொழிந்துவிடும். இப்படி ஒரேயடியாக பெய்யும் மழை அங்குள்ள நிலப்பரப்பை மூழ்கடித்து, திடீர் வெள்ளம், நிலச்சரிவுகள் என்று இறுதியில் ஒரு பேரழிவையும் உண்டாக்குகிறது.
எங்கெங்கே நிகழ்கிறது?
உலகளவில் மேக வெடிப்புகள் எல்லா இடங்களில் ஏற்படுவதில்லை. செங்குத்தான நிலப்பரப்பு (steep terrain), பருவமழை காலங்களில் குறிப்பிட்ட மண்டலங்களில் நிகழ்கின்றன. இமயமலையைத் தவிர, தென்னாப்பிரிக்கா, ஐஸ்லாந்து மற்றும் வெப்பமண்டல கடலோரப் பகுதிகளின் (tropical coastal regions) சில பகுதிகளில் இந்த நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வை பற்றிய கணிக்க முடியாத (unpredictability) தன்மைதான் இதற்கான முன்னறிவிப்பை சற்று கடினமாக்குகிறது. செயற்கைக்கோள்கள், டாப்ளர் ரேடார்களால் (Doppler radars) இந்த நிகழ்விற்குச் சம்மந்தமான குமுலோனிம்பஸ் மேகங்கள், அதீத ஈரப்பதம் குவிதல் (moisture convergence) போன்றவற்றை கண்டறியபடுகின்றன என்றாலும், மேக வெடிப்புகள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் (20-30 சதுர கிலோமீட்டர்குள்) மட்டும் நிகழ்வதால் ‘எந்த இடம்’ என்ற துல்லியமான கணிப்பை தர கடினமாகின்றது.
அங்குள்ள மக்கள் எப்படி வாழ வேண்டும்?
மேக வெடிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் வானிலை முன்னறிவிப்புகள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும். அதற்கான விரைவான வெளியேற்றத் திட்டங்களையும் வைத்திருக்க வேண்டும்.
ஏற்படும் வெள்ளத்தைத் தடுக்க வலுவான வடிகால் அமைப்புகளுடன் கட்டடங்களை உயரமான நிலங்களில் கட்டிட வேண்டும். டாப்ளர் ரேடார்கள் (Doppler radars), மழை அளவுகோல்களை (rain gauges) நிறுவுவது இதற்கான ஆரம்ப அறிகுறிகளை கண்டறிய உதவுகிறது.
அதே நேரத்தில் வழக்கமான விழிப்புணர்வு திட்டங்கள், அவசரகாலங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் போன்ற பயிற்சிகள் மக்களை ஆபத்துகளில் திறம்பட சமாளிக்கத் தயார்படுத்துகின்றன.