

பாம்புகளை ஆன்மீகத்துடன் தொடர்புபடுத்தி பார்ப்பதால் காலங்காலமாக அவற்றைப் பற்றி பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன. அந்த வகையில் நல்ல பாம்பு, பூ நாகம், வெள்ளை நாகம் குறித்து இப்பதிவில் தெரிந்துகொள்வோம்.
நல்ல பாம்புகள் 'எலாப்பிடே' குடும்பத்தைச் சேர்ந்தவை. உலகம் முழுக்க நல்ல பாம்புகள் காணப்பட்டாலும் உண்மையான ட்ரூ கோப்ராக்களில் 38 வகைகள் உள்ளன. தமிழ்நாட்டில் காணப்படும் 'ஸ்பெக்டகிள் கோப்ரா'வின் கூடுக்குப் பின்புறம் இரண்டு வட்டம் போன்ற அமைப்புடன் கண்ணாடிபோல காணப்படுவதால் இத்தகைய பெயர் பெற்றுள்ளது.
இரண்டு வட்டங்களை இணைக்கும் நாமம் போன்ற அமைப்பு உள்ளதால் ஆன்மீகத்துடன் அதிகம் தொடர்புடையதாக பார்க்கப்படுகிறது. கூடுக்குப் பின்புறம் உள்ள இரண்டு கருப்பு வட்டமும் முன்புறம் இரண்டு கருப்பு புள்ளிகளும் இருப்பதால், இரண்டு பக்கமும் கண்கள் இருப்பதாக இதனை தாக்க வரும் உயிரினத்தை குழப்பும் விதமாக நல்ல பாம்புகள் அமையப் பெற்றுள்ளது. இத்தகைய அமைப்பு இல்லாமலும் பாம்புகள் இருக்கின்றன.
3.3-4.9 அடி நீளம் வரை வளரும் ஸ்பெக்டகிள் கோப்ரா வெளிர் மஞ்சள், அடர் பிரவுன் மற்றும் கருப்பு நிறத்தில் காணப்படுகின்றன. எலிகள், தவளைகள், தேரைகள், சிறிய பறவைகள் ஆகியவை இவற்றின் உணவுகளாக உள்ளன. அரிதான நேரங்களில் மட்டுமே சிறிய பாம்புகளை இரையாக நல்ல பாம்புகள் எடுத்துக்கொள்ளும்.
ஆண் நல்ல பாம்பும், பெண் நல்ல பாம்பும் இணைந்து இனப் பெருக்கத்தில் ஈடுபடும். பெண் நல்ல பாம்புகள் 10 - 15 முட்டைகள் வரை இடும். 60-70 நாட்கள் கழித்து முட்டையில் இருந்து பாம்பு வெளியே வரும் வரை பெண் நல்ல பாம்புகள் முட்டையை பாதுகாக்கும்.
முட்டையிலிருந்து வரும்போதே பாம்புகள் தன்னை தற்காத்துக் கொள்ளும் விதமாக நன்கு வளர்ச்சியடைந்த நஞ்சுப் பற்கள், நஞ்சு பைகளுடன்தான் வெளிவரும். பெரிய பாம்புகள் தன்னை தாக்க வரும் மிருகத்திற்கு ஏற்ற வகையில் நஞ்சை வெளியிடும். ஆனால் சிறிய பாம்புகள் ஒரே நேரத்தில் அனைத்து நஞ்சையும் வெளியேற்றும் என்பதால் இவை மிகவும் ஆபத்தானவை.
கொடூரமான விஷத்தைக் கக்கி உயிரிழப்புகளை ஏற்படுத்தும் நல்ல பாம்பில் உள்ள 'நல்ல' என்பதற்கு 'கருமை' என்பதே பொருள்படும். கருமையான பாம்புகள் என்பதே நல்ல பாம்புகள் என்று அழைக்கப்படுகிறது.
நல்ல பாம்பு அடுத்தவர்களை எச்சரிக்கை செய்வதற்காகவே பூமியில் கொத்துகிறது. உண்மையில் பாம்புகள் பால் குடிக்காது. முட்டை சாப்பிடும். நஞ்சை வெளியேற்றும் பாம்பின் கோரைப்பற்கள் எத்தனை முறை உடைந்தாலும் எவ்வளவு வயதானாலும் ஒரு வாரத்திற்குள் மீண்டும் முளைத்துவிடும்.
பூ நாகம் என்ற ஒரு இனம் உலகத்தில் கிடையாது. இது பழமையான கதைகளின் அடிப்படையில் பூநாகம் என பெயர் பெற்றுள்ளது.
சாதாரண பாம்பு 'ஆல்பேனிஷம்' குறைபாடு அதாவது மெலனின் சுரப்பி இல்லாமல் இருப்பது மற்றும் 'லூசிஸம்' என்ற மரபணு குறைபாடு காரணமாகவே பாம்பின் தோல் வெளிர் நிறமாக மாறி வெள்ளை நிறமாக காட்சி தருகிறது. உண்மையில் வெள்ளை நாகம் என்ற ஒரு வகை இல்லை.
பாம்பில் விஷம் உள்ளவை, விஷமற்றவை என்ற வகைகள் இருந்தாலும் எந்த பாம்பு கடித்தாலும் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று முதலுதவி செய்து கொள்வதே மிகவும் சிறந்தது.