புயல் காற்று வீசுகிறது... சரி... புயல் எப்படி உருவாகிறது?

storm
storm
Published on

'Storm' (புயல்) என்ற ஆங்கிலச் சொல், சத்தம், கொந்தளிப்பு என்ற பொருளைக் குறிக்கும் 'sturmaz' என்ற ஆதி செருமானிய சொல்லிலிருந்து வந்ததாகும். இந்தப் புயலினால் மின்னல், இடிமழை, பனிப்பொழிவு, கனமழை, ஆலங்கட்டிமழை, பனிப்புயல், பலமான மழைக்காற்று, கடும் உறைபனி, புழுதிப்புயல், மணற்புயல், வெப்பமண்டலச் சூறாவளி அல்லது வளிமண்டலத்தின் ஊடாகப் பொருட்களைத் தூக்கி வீசுவது போன்ற குறிப்பிடத்தக்க இடையூறுகள் மூலம் காற்று என்ற பருப்பொருளின் அமைதிக் குலைவு சுட்டிக்காட்டப்படுகிறது.

உயர் காற்றழுத்த அமைப்பு சூழ்ந்திருக்கும்போது, குறைந்த அழுத்த மையம் படிப்படியாக வளர்ச்சியடைந்து புயல்கள் உருவாகின்றன. எதிரெதிர் சக்திகளின் இந்தக் கலவையானது காற்றை உருவாக்கி, திரள் கார்முகில் போன்ற புயல் மேகங்களை உருவாக்கும். வெப்பமான நிலத்திலிருந்து வீசுகின்ற சூடான காற்றிலிருந்து குறைந்த அழுத்தத்தில் குறிப்பிட்ட ஒரு சிறிய பகுதி உருவாகலாம். இதனால் பேய்க்காற்று, சூறாவளிச் சுழல்காற்று போன்ற இடையூறுகள் ஏற்படுகின்றன.

புயல்களின் தோற்றம் ஒன்றாக இருப்பினும், அதன் நிலைகளுக்கேற்ப அதனைப் பல பெயர்களில் வகைப்படுத்துகின்றனர். 

பனிப்புயல்:

காலம் மற்றும் இருப்பிடத்தின் அடிப்படையில் பனிப்புயலுக்கு மாறுபட்ட வரையறைகள் உள்ளன. பொதுவாக, ஒரு பனிப்புயல் என்பது அதிக விசை கொண்ட கடுங்காற்றுடன் வீசும். குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு 5 சென்டிமீட்டர் அல்லது 2 அங்குலம் என்ற வீதத்தில் பனி திரண்டு குவியும். 10 பாகை செல்சியசு வெப்பநிலைக்கும் குறைவான கடுங்குளிர் நிலவும். பனிப்புயல் சிலசமயம் மணிக்கு 300 கிலோமீட்டர் வேகத்தில் கூட வீசுவதுண்டு. பனிப்புயலால் பெருஞ்சேதம் உண்டாகும். அண்மையில், அமெரிக்கா முழுவதும் வீசிய பனிப்புயலில் இந்த வெப்ப வரையறைகள் எல்லாம் விலகி மிகக்கடுமையான குளிர் நிலவியது.

வெடிப் புயல்:

மத்திய அட்சரேகை குறைந்த காற்றழுத்தப் பகுதியில், குறிப்பாக பெருங்கடலில் விரைவாகத் தோன்றும் காற்றழுத்தத் தாழ்வு பகுதி நிலத்தின் மீதும் ஏற்படலாம். இந்தப் புயல்களின்போது, வீசும் காற்று, சக்திவாய்ந்த டைபூன், அரிக்கேன் போன்ற சூறாவளிகள் போல இருக்கும்.

கரையோரப் புயல்:

கடலோரப் பகுதிகளைத் தாக்குகின்ற பெரிய மற்றும் இராட்சத அலைகளின் எழுச்சி இருக்கும். அவற்றின் தாக்கத்தால் கடலோரங்களில் அரிப்பு மற்றும் கடல் வெள்ளம் போன்ற ஆபத்துகள் இருக்கும்.

டெரெகோ:

டெரெகோ என்பது பரவலாகவும் நீண்ட நேரமாகவும் நேர் கோட்டில் வீசக்கூடிய புயலாகும். இது நிலத்தை அடிப்படையாகக் கொண்டு வேகமாக நகரும் இயல்புடனும் கடுமையான இடியுடனும் தொடர்புடையது ஆகும்.

இதையும் படியுங்கள்:
கடலில் மூழ்கும் காடுகள்… தமிழ்நாட்டில்தான்… எங்கு தெரியுமா?
storm

பேய்ப்புழுதி:

குறிப்பிட்ட ஓர் இடத்தில் மட்டும் சிறிய காற்று மேல்பகுதியை நோக்கி அரைமீட்டர் முதல் சில மீட்டர்கள் வரை உயர்ந்து குறுகிய காலம் வீசும் பலமான காற்று பேய்ப்புழுதி எனப்படுகிறது.

புழுதிப்புயல்:

அதிக அளவு மணல் அல்லது மண்ணை வாரித் தூற்றும் அளவுக்கு வீசும் காற்று புழுதிப் புயல் எனப்படுகிறது. இச்சூழ்நிலையில் பார்வைத்திறன் வெகுவாக மறைக்கப்படும்.

நெருப்புப்புயல்:

நெருப்புப்புயல் அல்லது தீச்சூறாவளிகள் கொந்தளிப்புடன் காணப்படும். தங்களுக்கான வீசும் காற்றை அவையே உருவாக்கி நிலைநிறுத்திக் கொள்கின்றன. பொதுவாக, நெருப்புப்புயல் என்பது ஓர் இயற்கை நிகழ்வாகும். காட்டுத்தீ போன்ற பெரும் தீயிலிருந்து இவை உருவாகின்றன. செயற்கையாக வெடிகுண்டுகளையும், எரிகுண்டுகளையும் வீசுவதன் மூலம் நகரங்களிலும் இவற்றை உருவாக்க முடியும்.

கடுங்காற்று:

மணிக்கு 39 முதல் 55 மைல் வேகத்தில் நீடித்த காற்றுடன் கூடிய ஒரு வெப்பமண்டல புயல் பொதுவாகக் கடுங்காற்று என அழைக்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com