யானை மரங்கள், அறிவியல்பூர்வமாக ‘பர்செரா மைக்ரோஃபில்லா’ என அழைக்கப்படுகின்றன. அவை முதன்மையாக சோனோரன் பாலைவனத்தின் வறண்ட பகுதிகளில், குறிப்பாக தென்மேற்கு அமெரிக்கா மற்றும் வடமேற்கு மெக்ஸிகோவில் காணப்படும் தனித்துவமான மற்றும் மீள்தன்மை கொண்ட தாவரங்கள் ஆகும். இதன் சிறப்புகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
வாழ்விடம்: யானை மரங்கள் வறண்ட, பாறை மற்றும் நன்கு வடிகட்டிய மண்ணில் செழித்து வளரும். பெரும்பாலும் பாலைவனப் பகுதிகளில் மிக உயரத்தில் காணப்படும். இவை செழித்து வளர முழுமையான சூரிய ஒளி அவசியம்.
மரத்தின் அமைப்பு: யானை மரங்கள் அதிக உயரமாக வளர்வதில்லை. மாறாக அகலமாக வளர்கின்றன. இந்த மரத்தின் பட்டைகள் மிகவும் மிருதுவானவை. எளிதில் உறிந்து விடும் தன்மை உடையவை. இதன் வெளிப்புற பட்டை வெண்மை நிறத்திலும் உட்புறத்தில் சாம்பல் கலந்த பச்சை நிறத்திலும் இருக்கும். சரிவுகளில் வளரும்.
பூக்களும், இலைகளும்: இது வளரும் பருவத்தில் பல்வேறு மகரந்த சேர்க்கைகளை ஈர்க்கும் சிறிய அளவிலான நல்ல மணம் கொண்ட பூக்களை உற்பத்தி செய்கின்றன. மலர்கள் மஞ்சள் நிறத்தில் அழகாக மலர்கின்றன. பின்பு அழகான நட்சத்திர வடிவ வெள்ளை அல்லது கிரீம் நிற மலர்களாக மாறுகின்றன. இவற்றின் இலைகள் சிறியதாகவும் பளபளப்பாகவும் இருக்கும். நீர் இழப்பை குறைக்க உதவுகின்றன. மேலும், அவை ஈரப்பதத்தை பாதுகாக்க கடுமையான வறட்சியின்போது இலைகள் உதிர்ந்து விடுகின்றன.
பருத்தத் தண்டுப் பகுதி: யானை மரத்தின் தண்டு பருத்து, யானையைப் போல் உள்ளது. இது ஒரு நீர்த்தேக்கம் போல செயல்படுகிறது. மழைக்காலத்தில் நீரைச் சேமித்து வைத்து ஈரப்பதத்தைத் தக்கவைத்துக் கொள்கிறது. இது நீடித்த வறட்சியின்போது இந்த மரம் பட்டுப் போகாமல், உயிர் வாழ உதவுகிறது.
பல்லுயிர் பெருக்கத்திற்கு உதவுகிறது: இது பாலைவன வாழ்வின் பல்லுயிர் பெருக்கத்திற்கு உதவுகிறது. பாலைவன சுற்றுச்சூழலில் சமநிலையை பராமரிக்கவும் மற்ற தாவரங்கள் மற்றும் வன விலங்குகளுக்கு நிழல் மற்றும் ஆதரவை வழங்கவும் இந்த மரங்கள் மிகவும் முக்கியமான பங்கைத் தருகின்றன.
மருத்துவ குணம்: யானை மரங்கள் மெதுவாக வளர்கின்றன. இவை சுற்றுச்சூழல் மாற்றங்களுக்கு ஆளானாலும் அவை நீண்ட வருடங்கள் வாழ்கின்றன. உள்ளூர் கலாசாரங்களில் யானை மரங்கள் அவற்றின் பிசினுக்காக பயன்படுத்தப்படுகின்றன. இது மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளது மற்றும் பல்வேறு பாரம்பரியப் பயன்பாடுகளுக்கும் உதவுகிறது.
யானை மரத்தின் பிசின்: யானை மரத்தின் பிசின் நாட்டு மருத்துவத்தில் பயன்படுகிறது. இது ஒரு ஆன்டிசெப்டிக்காக, காயங்களுக்கு மருந்திடப் பயன்படுகிறது. மேலும், அழற்சி எதிர்ப்புப் பண்புகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. சில பழங்குடி கலாசாரங்களில் மரத்தின் பல்வேறு பாகங்களை பல்வேறு மருத்துவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்துகின்றனர். இவற்றிலிருந்து களிம்புகள் உட்பட சில மருத்துவப் பொருட்களைத் தயாரிக்கிறார்கள்.
பறவைகள் மற்றும் பூச்சிகள் உட்பட பல்வேறு பாலைவன விலங்குகளுக்கு இம்மரங்கள் வாழ்விடத்தையும் உணவையும் வழங்குகின்றன. அவற்றின் பூக்கள் அமிர்தத்தின் மூலமாகவும் அதேநேரத்தில் அவற்றின் மரத்தின் பட்டை சில உயிரினங்களுக்கு கூடுகட்டும் வாழ்விடமாகவும் உள்ளன.