
கடற்காயல் என்பது கடலிலிருந்து சில வகையான தடுப்புகளால் பிரிக்கப்பட்டுள்ள உவர் நீர்ப்பரப்பு ஆகும். கடல் சார்ந்த ஏரியான இதனை வாவி அல்லது களப்பு என்றும், காயல் அல்லது உப்பங்கழி என்றும் அழைக்கின்றனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் இருப்பிட வழிகாட்டல் இதனை, கடலிலிருந்து முழுமையாகவோ பகுதியாகவோ மணல்திட்டுக்கள், பெருவெட்டுக் கூழாங்கற்கள் அல்லது மிகக்குறைவாக கற்களால் பிரிக்கப்பட்டுள்ள, பல்வேறு அளவுகளில் நீர் கொள்ளளவு மற்றும் உப்புத் தன்மை கொண்ட, தாழ்ந்த கடற்கரை உப்புநீர் பரப்பு என்று குறிப்பிடுகிறது.
மேலும், இந்தப் பரப்பில் உள்ள உப்புத்தன்மை மழை, ஆவியாதல், வெள்ள நீர்வரத்து, கடலலை ஏற்ற இறக்கத்தால் அல்லது குளிர்காலங்களில் கடல் நீர் ஏற்றம் போன்றவற்றால் வேறுபடும் என வரையறுத்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் பகுதியிலுள்ள உவர் நீர்ப் பரப்பினைக் காயல் என்று அழைப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
கலிவேளி ஏரி பருவக் காலத்தில் நல்ல நீர் பாய்ந்து உவர் நீராகும் ஒரு நீர்த்தடம் ஆகும். மேலும், இது வலசை வரும் பறவைகளுக்கு உணவு தரும் இடமாகவும் இனப்பெருக்கம் செய்ய வரும் இடமாகவும் உள்ளது. தமிழ்நாட்டின், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கடற்கரை சதுப்பு நில ஏரி மற்றும் கடற்காயல் அல்லது நீர்த்தடம் கலிவேளி ஏரி என்றழைக்கப்படுகிறது.
இந்த ஏரி இந்திய துணைக் கண்டத்தின் பெரிய நீர்த்தடங்களில் ஒன்றாகும். இந்த நீர்த்தடத்தை பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் இந்திய அளவிலும் பன்னாட்டு அளவிலும் முக்கியத்துவம் வாய்ததாகக் கருதுகிறது. இது தற்போது வேளாண் நிலங்களுக்காக நிலத்தை ஆக்கிரமிப்பதாலும், வன வேட்டை, காடழிப்பு, அதிகரித்து வரும் இறால் பண்ணைகள் போன்றவற்றால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகிறது.
இது தென்னிந்திய கடலோரச் சுற்றுச்சூழல் தல உறைவிடங்களில் ஒன்று என்ற போதிலும், இந்த ஏரி அரிதாகத்தான் இயற்கை ஆர்வலர்களாலும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களாலும் ஆராயப்படுகிறது. இந்த ஏரியின் 90 சதவிகித கரைப்பகுதி சாலை வழியாக நெருங்க இயலாதவாறு உள்ளது. இதுவே இங்கு தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் பெருக முக்கியக் காரணம் ஆகும்.
இந்தச் சதுப்பு நிலம், இங்கு வருபவர்களை மூழ்கடிக்கும் ஆபத்து வாய்ததாகவும், மிகவும் பயப்படத்தக்க யானைக்கால் நோய், மலேரியா போன்ற பிற நீர்வழி நோய்களைப் பரப்பும் பூச்சிகள் கொண்டதாகவும் உள்ளது. எனவே, இங்கு வருபவர்கள் தவறாமல், உடலை பூச்சிக் கடியிலிருந்து காக்கக்கூடிய உரிய பூச்சுக்களை பூசுவதும், தடித்த சப்பாத்துக்களை அணிவதும் அவசியம்.
இந்த ஏரி மிகவும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. மனித நடமாட்டம் 20 கி.மீ. வரை இல்லாத நிலை உள்ளதால் இங்கு வருபவர்கள் போதிய நீர், உணவு போன்ற அத்தியாவசிய பொருட்களுடன் செல்ல வேண்டுமென்று அறிவுறுத்தப்படுகின்றனர்.
இந்த கலிவேளி ஏரியைக் காணும் ஆர்வமுடையவர்கள், முன்னெச்சரிக்கையாகத் தேவையான பாதுகாப்பு முன்னேற்பாடுகளுடன் ஒரு முறை சென்று வரலாம்.