
இரவில் பூக்கும் மலர்கள் பொதுவாக வெள்ளை நிறத்தில்தான் இருக்கும். இரவில் பூச்சிகளுக்குத் தெரியும் வண்ணம் நிறமிகளைச் சுரக்கும் வளங்களை அவை செலவழிக்க வேண்டியதில்லை என்பதால் இரவில் பூக்கும் பூக்கள் பொதுவாக வெண்மையாக இருக்கும். மேலும், வெள்ளை நிறம் ஒளியை பிரதிபலிப்பதால் மகரந்த சேர்க்கைக்குத் தெரியும். அதாவது, இவை மகரந்த சேர்க்கைக்கு பூச்சிகளை ஈர்ப்பதற்காக நிலவொளியை பிரதிபலிக்கின்றன. அப்படி இரவில் பூக்கும் சில மலர்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
இரவில் மலரும் கள்ளி (night blooming cereus): இந்தப் பூ எப்போதும் இரவு நேரங்களில்தான் மலரும். இம்மலரின் வாழ்வு ஒரு நாள் மட்டுமே. ஓராண்டில் ஒரே தடவை மட்டும் இரவில் பூத்து ஒரே நாளில் வாடிப்போகும் தன்மை கொண்டது.
மாலை ப்ரிம்ரோஸ்: வடக்கு மற்றும் மத்திய அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட மஞ்சள் வண்ண பூக்கள் இது. பகல் வெளிச்சம் மங்கும்போது இதன் இதழ்கள் விரிவடைந்து இரவு நேர தேனீக்கள் மற்றும் அந்துப்பூச்சிகளை மகரந்த சேர்க்கைக்கு ஈர்க்கும்.
பிரம்ம கமலம்: ‘இரவின் இளவரசி’ என்று அழைக்கப்படும் பிரம்ம கமலம் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும். இமாலய பிரதேசங்களில் பரவலாகக் காணப்படும் இவை பல மருத்துவ குணங்களைக் கொண்டது.
பவளமல்லி: தேவலோக மரமான பாரிஜாதமே பூலோகத்தில் பவளமல்லியாக வாழ்ந்ததாக புராணங்கள் கூறுகின்றன. இவை இரவில் மலர்ந்து காலையில் உதிர்ந்து விடும். பாற்கடலைக் கடைந்தபோது வந்த ஐந்து பொருள்களில் நறுமணம் கொண்ட பவளமல்லியும் ஒன்று எனக் கூறப்படுகிறது.
தி நைட் ஃப்ளோக்ஸ்: இது தென்னாப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்டது. இரவில் பூக்கும் சிறிய வெள்ளை மற்றும் இளம் சிவப்பு பூக்கள். இவை கிராம்புகளை நினைவூட்டும் வாசனையைக் கொண்டவை.
நான்கு மணி மலர்: அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட இந்த மலர் மாலை 4 மணிக்கு பூக்கும். மஞ்சள், வெள்ளை, வயலட் என பல வண்ணங்களில் இனிமையான நறுமணத்துடன் பூக்கும்.
குமுதினி அல்லது வாட்டர் லில்லி: நீர் லில்லி செடிகளில் பல வகையான வண்ணங்கள் உள்ளன. இவை நிம்பேயேசி குடும்பத்தைச் சார்ந்தது. இரவில் அமைதியான அழகுடன் பூக்கும் நீர் லில்லி போதை தரும் நறுமணம் கொண்டது. நன்னீர் ஏரிகள், குளங்கள் மற்றும் ஆறுகளில் இது காணப்படும்.
ஆர்க்கிட்: தென்கிழக்கு ஆசியாவை பூர்வீகமாகக் கொண்ட இந்த ஆர்க்கிட் இரவில் நறுமணம் கமழப் பூக்கும். வெள்ளை நிறத்தில் இருந்து இளஞ் சிவப்பு மற்றும் ஊதா நிறத்தில் இருக்கும் மென்மையான பூக்கள் இவை.
ராத் கி ராணி: இரவின் ராணி என்னும் பொருளில் இது ‘ராத் கி ராணி’ என அழைக்கப்படுகிறது. மணிப்பூரில் இது ‘நிலா மலர்’ என்று அழைக்கப்படுகிறது. வெள்ளை நிறத்தில் குழாய் வடிவ மலர்களான இவை சிறந்த நறுமணம் கொண்டவை. இதன் நறுமணத்தை சுவாசிக்க மன அமைதி ஏற்படும்.
காசாபிளாங்கா லில்லி: இவை மிகவும் விலை உயர்ந்த மற்றும் நறுமணம் கொண்ட தாவரமாகும். இவை திருமணங்கள் மற்றும் வாசனை திரவியங்கள் தயாரிக்கப் பயன்படுகிறது. ஆறு இதழ்களைக் கொண்ட இளம் சிவப்பு, வெள்ளை, மஞ்சள், ஆரஞ்சு நிறத்தில் காணப்படும்.
டிராகன் பழ மலர்கள்: இவை மாலை 7 மணிக்கு மேல் பூக்கும். இரவு 12 மணிக்குள் முழுமையாக பூத்து விடும். பெரிய பச்சை இலைகளைக் கொண்ட அழகான பூவிது.
சந்திர புஷ்ப் / நிலவொளி மலர்: சந்திராயன் ஒளியில் பூப்பதால் இதற்கு சந்திரா என்று பெயர். வெள்ளை மற்றும் இளம் சிவப்பு நிறங்களில் இது பூக்கும்.
இரவு கிளாடியஸ் மலர்: கிரீமி மஞ்சள் நிறப் பூக்கள். கடுமையான வாசனை கொண்ட மலர் இது. இதன் பல பாகங்கள் நச்சுத்தன்மை கொண்டவை. இவை சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்தும். வண்ணத்துப்பூச்சிகள், ஈக்கள் மற்றும் அந்து பூச்சிகளை அதிகம் இவை ஈர்க்கின்றன.
மல்லிகை: இவை இரவில் பூக்கும். மொட்டுக்கள் பூக்களாக மாறத் தொடங்கும் நேரத்தில் அதன் நறுமணம் அதிகம் இருக்கும்.
டியூப்ரோஸ்: வெள்ளை சம்பங்கி எனப்படும் இவை இனிமையான நறுமணத்தை கொண்டது. இவை ஆண்டு முழுவதும் இரவில் பூக்கும் பூக்களாகும். இவற்றிலிருந்து எடுக்கப்படும் நறுமண எண்ணெய்களுக்காக இது மிகவும் பிரபலமானது.
கார்டேனி: வெள்ளை நிறத்தில் பூக்கும் இவை கேப் மல்லிகை என்றும் அழைக்கப்படுகிறது. இவை காபி குடும்பத்தைச் சேர்ந்தது. நறுமணம் கமழும் பூக்கள் வசந்த காலத்தின் பிற்பகுதியிலிருந்து கோடையின் நடுப்பகுதி வரை பூக்கும்.