உழவர் திருநாள் (மாட்டுப் பொங்கல்) என்பது தைப்பொங்கலின் மறுநாள் தமிழர்களால் கொண்டாடப்படும் விழா ஆகும். கொங்கு மண்டலத்தில் இந்த நாளை ‘பட்டிப் பொங்கல்’ என்று அழைப்பார்கள். உழவுக்கு உயிரூட்டும் விதமாகவும், விவசாயத்திற்கு பயன்படும் கால்நடைகளுக்கு நன்றி சொல்லும்விதமாகவும் மாட்டுப் பொங்கல் திருவிழா தமிழர்களால் சீரும் சிறப்புமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
உழவனின் உயிர்த் தோழனாக இருந்து உழைத்த கால்நடைகளைப் போற்றி நன்றி கூறும் நோக்கோடு, விருந்து படைத்து, நன்றி கடன் செய்யப்பெறும் நிகழ்வே மாட்டுப் பொங்கலாகும். மாட்டுப் பொங்கலன்று வேளாண்மைக்கு உதவும் மாடுகளின் தொழுவத்தினை சுத்தம் செய்து கால்நடைகளைக் குளிப்பாட்டுவர். மாடுகளின் கொம்புகள் சீவப்பட்டு பளபளக்கும் வகையில் வண்ணம் பூசி, கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டி விடுவார்கள்.
மாடுகளின் கழுத்துக்குத் தோலிலான வார்ப்பட்டையில் சலங்கை கட்டி அழகுபடுத்துவார்கள். புதிய மூக்கணாங்கயிறு, தாம்புக் கயிறு, உழவுக் கருவிகளை சுத்தம் செய்து வைப்பார்கள். விவசாயத்தில் பயன்படுத்தப்படும் அனைத்துக் கருவிகளையும் இதேபோல சுத்தம் செய்வார்கள். உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் ஆவினத்திற்கு (காளைகள், பசுக்கள்) நன்றி கூறும் நாளே மாட்டுப் பொங்கலாகும்.
'பொங்கலோ பொங்கல்… மாட்டுப் பொங்கல். பட்டிப் பெருக பால் பானை பொங்க நோவும் பிணியும் தெருவோடு போக' என்று கூறி மாடு பொங்கல் உண்ட எச்சில் தண்ணீரை தொழுவத்தில் தெளிப்பர்.
தற்காலத்தில் விவசாய உற்பத்தியில் பலவிதமான இயந்திரங்கள் வந்துள்ள காரணத்தால், மாடுகளின் தேவை குறைந்துள்ளபோதிலும் நமது மூதாதையினர் செய்து வந்த மாட்டுப் பொங்கல் விழா கிராமப்புறங்களில் மட்டுமே தற்போது கொண்டாடப்பட்டு வருகின்றது.
மாடுகள் சேற்றில் கால் வைத்து உழவு செய்தால்தான், நாம் சோற்றில் கை வைக்க முடியும். எந்த ஒரு பலனையும் எதிர்பாராமல் நம்மை ஒவ்வொரு நாளும் வாழ வைத்து வரும் உழவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் மாடுகளுக்கு இந்நாளில் நன்றி கூறுவோம்.
நமக்கு பலவிதங்களிலும் பயனளிக்கும் கோமாதாவை இன்று அருகில் இருக்கும் கோச்சாலைக்கு சென்று அகத்திக்கீரை, வாழைப்பழம், வெள்ளம் போன்றவை வாங்கிக் கொடுத்தும் நகர்ப்புறங்களில் உள்ளவர்கள் மாட்டுப் பொங்கலை அனுசரிக்கலாமே.