

இரவு நேரத்தில் வீட்டில் உள்ள மீன் தொட்டியைப் பார்க்கும்போது, மீன்கள் கண்களைத் திறந்துபடியே மெதுவாக நீந்திக்கொண்டு இருப்பதைக் காணலாம். அதைப் பார்த்தால் அவை தூங்குகிறதா இல்லை முழித்துக் கொண்டிருக்கிறதா என்ற சந்தேகம் நமக்கு நிச்சயம் வரும்.
மீன்களுக்கு இமைகள் கிடையாது என்பதால் அவை எப்போதுமே தூங்காது என்று பலரும் தவறாக நினைக்கிறார்கள். ஆனால் மனிதர்களைப் போலவே அவற்றுக்கும் மூளை மற்றும் உடலுக்கு ஓய்வு மிக மிக அவசியம். மீன்கள் எப்படி தூங்குகின்றன, அதில் ஒளிந்துள்ள சுவாரஸ்யமான ரகசியங்களை இந்தப் பதிவில் பார்க்கலாம் வாங்க.
தூங்கும் முறை & தற்காப்பு!
மீன்கள் நம்மைப் போல தலையணை வைத்துப் படுத்துத் தூங்குவது கிடையாது. அவற்றின் உடல் செயல்பாடு, வளர்சிதை மாற்றம் குறைந்து ஒருவிதமான அமைதி நிலைக்குச் சென்றுவிடும். அந்த நேரத்தில் அவற்றின் துடுப்புகள் மிக மெதுவாக அசையும், உடலின் நிறம் கூட சற்று மங்கலாக மாறும். தொட்டியின் அடியில் அல்லது செடிகளுக்கு நடுவே அவை எந்த ஒரு அசைவும் இல்லாமல் அப்படியே நிற்கும்.
இருந்தாலும், தங்களை யாராவது வேட்டையாட வந்தால் உடனே தப்பிக்க வேண்டும் என்பதற்காக அவை பாதியளவு விழிப்புடனே தான் இருக்கும். கிளி மீன்கள் தங்களைச் சுற்றி ஒரு சளி போன்ற படலத்தை உருவாக்கி தங்களது வாசனையை மறைத்துக்கொண்டு பாதுகாப்பாகத் தூங்கும்.
ஒவ்வொரு மீனும் ஒரு விதம்!
எல்லா மீன்களும் ஒரே மாதிரி ஓய்வெடுப்பது கிடையாது. Goldfish போன்ற மீன்கள் பகலில் சுறுசுறுப்பாகவும் இரவில் அமைதியாகவும் இருக்கும். ஆனால் சில வகை Catfish பகல் முழுவதும் தூங்கிவிட்டு இரவில் சுறுசுறுப்பாக விழித்துக்கொள்ளும். சில சுறா மீன்கள் தங்கள் மூளையின் ஒரு பகுதியை மட்டும் தூங்க வைத்துவிட்டு, தொடர்ந்து நீந்திக்கொண்டே ஓய்வெடுக்கும்.
Betta Fish தொட்டியில் உள்ள செடிகளின் இலைகளில் ஒரு பெட் போல படுத்துக்கொள்ளும். இன்னும் சில மீன்கள் மணலுக்குள் தங்களை மறைத்துக்கொண்டு தூங்கும் வழக்கத்தைக் கொண்டுள்ளன.
தூக்கம் இல்லை என்றால் வரும் ஆபத்து!
மனிதர்களுக்குத் தூக்கம் கெட்டால் எப்படி கோபம் வருமோ அதேபோல மீன்களுக்கும் நிறைய பிரச்சினைகள் வரும். சரியான ஓய்வு கிடைக்கவில்லை என்றால் அவற்றின் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்துவிடும். இதனால் வெள்ளைப்புள்ளி நோய் மற்றும் துடுப்பு அழுகல் போன்ற பல வியாதிகள் மிக எளிதாகத் தாக்கும். மீன்கள் உணவு சாப்பிடாமல் சோர்வாக இருப்பதற்கும், தொட்டியில் உள்ள மற்ற மீன்களிடம் கோபமாகச் சண்டை போடுவதற்கும் இந்த தூக்கமின்மையே முக்கிய காரணம்.
மீன்கள் மனிதர்களைப் போலக் கனவு காணாவிட்டாலும் தங்களது உடலுக்குத் தேவையான ஓய்வை மிக அமைதியாக எடுத்துக்கொள்கின்றன. கண்களை மூடாமல் அவை தூங்கும் அந்த மெல்லிய நொடிகள் இயற்கையின் ஒரு அற்புதமான படைப்பாகும். இதை முழுமையாகப் புரிந்துகொண்டால் நாம் வளர்க்கும் மீன்களை இன்னும் அன்பாகப் பராமரிக்கலாம்.
இனி உங்கள் தொட்டியில் உள்ள மீன் அமைதியாக மிதப்பதைக் கண்டால், அது போர் அடித்து நிற்கிறது என நினைத்துத் தொந்தரவு செய்யாதீர்கள், அது நிம்மதியாகத் தூங்கிக்கொண்டு இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.