சூரியனே தேவையில்லை! இருட்டில் உணவைத் 'திருடி' வாழும் ஜப்பானின் 'பேய்' மலர்கள்!

Ghost Plants of Japan
Ghost Plants of Japan
Published on

பள்ளிக்கூடத்தில் நாம் அனைவரும் படித்த ஒரு அடிப்படை பாடம் தாவரங்கள் வளர சூரிய ஒளி அவசியம். பச்சையம் (Chlorophyll) மூலம் அவை தமக்குத் தேவையான உணவைத் தாமே தயாரித்துக் கொள்ளும். இதுதானே இயற்கை நியதி? ஆனால், இந்த இயற்கை விதியையே உடைத்தெறியும் ஒரு விசித்திரமான தாவரம் ஜப்பானின் அடர்ந்த காடுகளில் ஒளிந்திருக்கிறது என்றால் நம்புவீர்களா?

ஆம், ஜப்பானின் சில பகுதிகளில், சூரியக்கதிர்களே நுழைய முடியாத அடர்ந்த மரத்தடியில், இவை வளர்கின்றன.

பொதுவாக தாவரங்கள் என்றாலே நம் நினைவுக்கு வருவது பச்சை நிறம் தான். ஆனால், ஜப்பானின் காடுகளில் வளரும் இந்த விசித்திர தாவரங்களுக்கு (உதாரணமாக Monotropastrum humile) பச்சையம் கிடையாது. பச்சையம் இல்லாத காரணத்தால் இவை பச்சையாக இருப்பதில்லை.

மாறாக, இவை பார்ப்பதற்கு ஒரு மெழுகுச் சிலை போலவோ, அல்லது கண்ணாடி போல ஒளி ஊடுருவும் தன்மையுடனோ, வெண்ணிறமாக அல்லது வெளிர் பிங்க் நிறத்தில் காட்சியளிக்கும்.

அடர்ந்த காட்டு இருட்டில், காய்ந்த சருகுகளுக்கு இடையே, தரையோடு தரையாக திடீரென முளைத்திருக்கும் இந்த வெண்ணிற உருவங்களைப் பார்க்கும்போது, ஏதோ காட்டிற்குள் ஆவிகள் நடமாடுவது போன்ற தோற்றம் ஏற்படும். இந்த அமானுஷ்ய தோற்றத்தின் காரணமாகவே இவற்றிற்கு 'பேய் தாவரங்கள்' (Ghost Plants) என்று பெயர் வந்தது. பார்ப்பதற்கு அழகாகவும், அதே சமயம் சற்றே பயமுறுத்துவது போலவும் இருக்கும் இந்த மலர்கள், காடுகளுக்கு ஒரு அமானுஷ்ய அழகைச் சேர்க்கின்றன.

இங்குதான் இயற்கையின் மிகப்பெரிய மர்மம் ஒளிந்திருக்கிறது. இவற்றுக்கு பச்சையம் கிடையாது. அதனால் சூரிய ஒளியைப் பயன்படுத்தி உணவு தயாரிக்க முடியாது. பிறகு எப்படி உயிர் வாழ்கின்றன?

இதையும் படியுங்கள்:
இந்த நாடுகளில் ஒரு நதி கூட இல்லையாம்... பின் எப்படி தண்ணீர் குடிக்கிறார்கள்?
Ghost Plants of Japan

காடுகளின் நிலத்தடியில் நம் கண்களுக்குத் தெரியாத ஒரு மிகப்பெரிய உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது. அங்கு பூஞ்சைகளின் (Fungi/Mushrooms) ஒரு மிகப்பெரிய வலைப்பின்னல் இருக்கும். பெரிய மரங்களின் வேர்களுக்கும் இந்த பூஞ்சைகளுக்கும் இடையே ஒரு ரகசியக் கூட்டணி எப்போதுமே உண்டு. அதாவது, மரங்கள் சூரிய ஒளியில் கஷ்டப்பட்டு தயாரிக்கும் சர்க்கரை மற்றும் பிற உணவின் ஒரு பகுதியை, வேர்கள் வழியாக இந்த பூஞ்சைகள் எடுத்துக்கொண்டு உயிர்வாழும்.

இந்த 'பேய் தாவரங்கள்' என்ன செய்யும் தெரியுமா? அந்தப் பூஞ்சைகளுடன் ஒட்டிக்கொண்டு, அவை மரத்திடமிருந்து பெற்ற சத்துக்களைத் தந்திரமாகத் திருடி, தங்கள் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்கின்றன.

இதையும் படியுங்கள்:
அண்டார்டிகா பனிக்கட்டி முழுவதும் உருகினால் என்ன நடக்கும்? - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்!
Ghost Plants of Japan

அதாவது, மறைமுகமாக நிலத்தடி பூஞ்சைகளின் உதவியுடன் இவை வாழ்கின்றன. அறிவியல் மொழியில் இதனை 'Mycoheterotrophy' என்று அழைப்பார்கள்.

சூரிய ஒளியே படாத அடர்ந்த இருட்டில், ஒரு மெழுகுவர்த்தியைப் போல ஒளிரும் இந்த பேய் மலர்கள், இயற்கை இன்னும் எத்தனை ரகசியங்களை நமக்காக ஒளித்து வைத்திருக்கிறது என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம். தாமாக உணவு தயாரிக்க முடியவில்லை என்றாலும், பிற உயிரினங்களைச் சார்ந்து, அவற்றின் அமைப்பிற்குள் ஊடுருவி வாழும் இந்தத் தாவரங்களின் பிழைக்கும் திறன் (Survival Instinct) உண்மையிலேயே வியக்க வைக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com