
உலகின் அதிசய இடங்கள்!
பசிபிக் முனையில் உள்ள க்ரேட் பேரியர் ரீஃப் – பவளப் பாறைத் தோட்டங்கள்!
(Great Barrier Reef – Coral Gardens at the edge of the Pacific)
பிரிட்டிஷ் அரசாங்கத்தால் புதிய நாடுகள் காண பணிக்கப்பட்ட காப்டன் ஜேம்ஸ் குக் (Captain James Cook -1728-17779) தனது நாற்பதாம் வயதில் பசிபிக் தீவுகளை நோக்கிப் பயணமானார்.
தென் பசிபிக் கடலில் க்வீன்ஸ்லாந்து அருகே கடலுக்கு அடியில் உள்ள பெருந்தடுப்பு பவளத்திட்டிற்குள் (Great Barrier Reef) நேராக உள்ளே நுழைந்தார். அவரது 368 டன் எடை உடைய எண்டவர் (Endeavour) என்னும் கப்பல் 1770ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19ம் தேதியன்று கடலுக்கடியில் இருந்த ஒரு பெரும் பவள வளத்திற்குள் நுழைந்தது. அங்கு, தான் கண்ட காட்சியைக் கண்டு அவர் அதிசயித்தார்.
அவரது கப்பல் ஒரு பவளத்தில் மோதி, சிக்க பயணம் தடைப்பட்டது. அவரது ஊழியர்கள் இரண்டு மாதம் கப்பலைப் பழுது பார்த்தனர். ஆனால் கப்பலைச் சீராக்க முடியவில்லை. ஒரு வழியாக மெதுவாகக் கப்பலை செலுத்திய குக் பவளப்பாறைகளுக்கு நடுவில் ஒரு இடுக்கைக் கண்டார். அதன் வழியே கப்பலைச் செலுத்தினார். அந்த இடைவெளிக்கு ப்ராவிடன்ஷியல் சானல் (Providential Channel) என்ற பெயரையும் கொடுத்தார்.
அவர் தனது டயரியில் இப்படி எழுதினார்: “ஆழம் காண முடியாத கடலின் அடியிலிருந்து செங்குத்தாக எழுந்து நிற்கும் இந்தப் பவளத் திட்டுகள், பிரம்மாண்டமாக எழுந்து வரும் அலைகளைத் திடீரென்று தடுக்கின்றன!.”
இந்த பெருந்தடுப்பு பவளத்திட்டு ஆஸ்திரேலியாவின் வடகிழக்குக் கடற்கரையிலிருந்து 1250 மைல் நீளத்திற்கு நீண்டிருந்தது. நியூசவுத்வேல்ஸின் பரப்பளவான ஒரு லட்சம் சதுர மைல் பரப்பை இது கொண்டிருந்தது. இதிலிருந்த பவள வகைகள் விதம் விதமாக அழகாக இருந்தன. 350 வகையான பவளங்களை அவர் கண்டார். 90 சதவிகித பவளங்கள் நீருக்கடியிலேயே இருந்தன.
2900 தனித் திட்டுகளுடன் 900 தீவுகளை இந்தப் பரப்பளவு கொண்டிருந்தது.
இந்த இடத்தில் 1400 வகையான மீன் வகைகளும் இதர கடல் வாழ் உயிரினங்களும் வாழ்ந்து வந்தன. ட்ரிக்கி ஸ்நாப்பர் என்ற ஒரு வகை மீன் மட்டும் 9 கிலோ எடை கொண்டதாக இருந்தது.
க்வீன்ஸ்லாந்தின் கடற்கரையிலிருந்து 44 மைலில் இருந்த ஹெரான் தீவு அற்புதமாக அமைந்திருந்தது. இங்கு ஆய்வு செய்ய ஆரம்பித்தனர் விஞ்ஞானிகள்.
இந்தப் பகுதியை விண்வெளியிலிருந்தும் காணமுடியும். சிஎன்என் தொலைக்காட்சி இதை உலகின் ஏழு அதிசய இயற்கை இடங்களில் ஒன்றாக அறிவித்தது.
க்வீன்ஸ்லாந்தின் தேசிய நம்பிக்கை நிறுவனம் இதை மாநிலத்தில் அடையாளச் சின்னமாக அறிவித்தது.
ஆனால் அதிசயம் என்னவென்றால், வெளி உலகம் அறிவதற்கு முன்பே ஆஸ்திரேலியப் பழங்குடி மக்கள் இதை அறிந்திருந்ததோடு பயன்படுத்தியும் வந்துள்ளனர் என்பதுதான்.
இப்போது ஆயிரக்கணக்கில் பயணிகளை ஈர்க்கும் இடமாகத் திகழும் இது பல்லாயிரம் பில்லியன் டாலர்களை ஈட்டித் தரும் இடமாக மாறி விட்டது.
நீருக்கடியில் இயற்கையாக அமைந்திருக்கும் நீர்த் தோட்டங்கள் உலகின் மாபெரும் அதிசயம் தான்!