summer Season
அக்னி நட்சத்திரம்

வெப்ப அலை: தமிழகத்தின் தாங்க முடியாத வெப்பமும் தீர்வும்!

Published on

தமிழகம் தற்போது கடுமையான வெப்ப அலையை சந்தித்து வருகிறது. குறிப்பாக சென்னை போன்ற பெருநகரங்களில் வெயிலின் தாக்கம் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த காலங்களை ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் சராசரியாக 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்த திடீர் வெப்ப உயர்வுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், நாம் ஆழமாக சிந்தித்து செயல்பட வேண்டியது அவசியமாகிறது.

வெப்பநிலை உயர்வுக்கு பருவநிலை மாற்றம் ஒரு முக்கிய காரணம் என்பதில் சந்தேகமில்லை. அதோடு, நகரமயமாக்கல் தீவிரமடைந்துள்ளதால் ஏற்படும் வெப்பத்தீவு விளைவும் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. எங்கு பார்த்தாலும் கான்கிரீட் காடுகள் பெருகிவிட்ட நிலையில், பசுமைப் போர்வை குறைந்து வருவது வெப்பத்தை அதிகரிக்கச் செய்கிறது. 

மேற்கிலிருந்து வீசும் வறண்ட காற்றும், பாகிஸ்தானில் இருந்து வரும் வெப்பமான காற்றும் தமிழகத்தின் வெப்பநிலையை மேலும் உயர்த்துகின்றன. சென்னையைப் பொறுத்தவரை, ஈரப்பதம் அதிகரிப்பதும், ஆந்திரா மற்றும் ராயலசிம்மா பகுதிகளில் இருந்து வரும் காற்றினால் கடல் காற்று தடுக்கப்படுவதும் வெப்பம் தணியாமல் இருக்க முக்கிய காரணங்களாக அமைகின்றன. வீடுகளில் மின்விசிறி மற்றும் ஏசியின் பயன்பாடு அதிகரிப்பதும், வாகனப் புகை மற்றும் தொழிற்சாலை கழிவுகளும் பருவநிலை மாற்றத்திற்கு மறைமுகமாக காரணமாகின்றன.

சென்னையின் நிலை மிகவும் கவலை அளிக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் தரை வெப்பநிலை கணிசமாக உயர்ந்துள்ளது. பசுமைப் பரப்பும், நீர்நிலைகளின் அளவும் வெகுவாகக் குறைந்துவிட்டது. இதுவே வெப்பம் அதிகரிப்பதற்கு முக்கிய காரணம். உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி, ஒரு தனிநபருக்கு குறைந்தபட்சம் 9.5 சதுர மீட்டர் பசுமைப் பரப்பு இருக்க வேண்டும். ஆனால் சென்னையில் இது மிகவும் குறைவாக இருப்பது வருத்தமளிக்கிறது.

இந்த வெப்ப அலையில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள உடனடி மற்றும் நிரந்தர தீர்வுகள் காண வேண்டியது அவசியம். பசுமைப் பரப்பை அதிகரிப்பதும், கான்கிரீட் கட்டுமானங்களை குறைப்பதும், நீர்நிலைகளை பாதுகாப்பதும் தான் நிரந்தர தீர்வாக இருக்க முடியும். அரசு மரக்கன்றுகள் நடுவதாக கூறினாலும், நன்கு வளர்ந்த மரங்களை பாதுகாப்பதும், அவை வெட்டப்படாமல் இருப்பதும் மிக முக்கியம். ஒரு மரம் ஆண்டுக்கு 118 கிலோ ஆக்சிஜனை வழங்குகிறது என்பதையும், சுற்றுப்புற வெப்பநிலையை கணிசமாக குறைக்கும் என்பதையும் நாம் உணர வேண்டும். 

இதையும் படியுங்கள்:
மாடி தோட்டம் அமைக்கப்போகிறீர்களா? அதற்கு முன்பு இதையெல்லாம் கவனத்தில் கொள்ளுங்கள்!
summer Season

மொட்டை மாடியில் தோட்டம் அமைப்பது ஓரளவு பலன் அளித்தாலும், அது ஒரு முழுமையான தீர்வாகாது. எனவே, இருக்கும் பசுமைப் பரப்பை பாதுகாப்பதிலும், புதியதாக உருவாக்குவதிலும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். அப்போதுதான் எதிர்கால சந்ததியினருக்கு ஒரு ஆரோக்கியமான வாழ்வை நாம் உறுதி செய்ய முடியும்.

இதையும் படியுங்கள்:
மொட்டை அடித்தால் முடி நன்றாக வளரும் என்பது உண்மையா? 
summer Season
logo
Kalki Online
kalkionline.com