

‘பறக்கும் புல்டாக்’ (Flying Bulldog) என்றழைக்கப்பட்ட உலகிலேயே மிகப்பெரிய சைஸ் வண்டு, 160 ஆண்டுகளுக்கு முன்பு, பிரிட்டிஷ் இயற்கை ஆர்வலர் ஆல்ஃபிரெட் ரஸ்ஸல் வாலஸ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. பிறகு, அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வந்த இந்த வண்டு, பல ஆண்டுகளாக பார்வைக்குத் தென்படாமல் மறைந்துபோனது. அப்போது விஞ்ஞானிகளும் ஆராய்ச்சியாளர்களும் ஒருசேர, புரியாத குழப்பத்தில் ஆழ்ந்தனர்.
பிறகு, 2019ம் ஆண்டு, நார்த் மொலுக்காஸ் (North Moluccas) என்ற இந்தோனேஷிய தீவில், 'உலக வனவாழ் உயிரினப் பாதுகாப்பு' (Global Wildlife Conservation) அமைப்பினரின் முன்னெடுப்பில், தொலைந்துபோன உயிரினங்களை தேடிக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு குழுவினர் இந்த வண்டு இருப்பதைக் கண்டு பிடித்தனர். இச்செயல், உலக அளவில் உள்ள விஞ்ஞானிகளுக்கு இன்ப அதிர்ச்சியளித்தது.
அதிக சதைக் கட்டமைப்பில் உருவான இதன் பெரிய அளவு உடல் மற்றும் பிறரை அச்சம் கொள்ளும் வகையில் இது வெளிப்படுத்தும் இரைச்சல் சத்தம் ஆகியவை இதற்கு இந்த செல்லப் பெயரைப் பெற்றுத் தந்துள்ளது. பெண் இன வண்டின் நீளம் சுமார் 3.8 செ.மீ. கொண்டிருக்கும். இது சாதாரணமானதொரு தேனீயின் அளவை விட நான்கு மடங்கு பெரியதாகும். இதன் இறக்கையின் அளவு சுமார் 6.3 செ.மீ. கொண்டதாக இருக்கும். நம் தோட்டத்தில் மகரந்த சேர்க்கைக்கு உதவும் சாதாரண வண்டு போல் இல்லாமல், கருமையான நிறத்தில், பெரிய வலுவான கீழ்த்தாடையுடன், கவசப் பாதுகாப்புடைய பீரங்கி போல் காற்றில் பறந்து திரிவதால் இதை, ‘பறக்கும் புல்டாக்’ என அழைக்கலாயினர்.
‘இந்த வண்டினம் உயிருடன் இருக்கிறதா இல்லையா என்ற குழப்ப நிலையில் இருந்தபோது, 2019ல் இதைப் பார்த்தபோது, பிரம்மிப்பில் உண்மையாக எனக்கு மூச்சுத் திணறல் உண்டானது’ என்று கூறியுள்ளார், முதல் முறையாக இதை உயிருடன் படம் பிடித்த, புகைப்படக் கலைஞர் கிளே போல்ட் (Clay Bolt). மேலும், ‘அதன் ராட்சஷத் தனமான இறக்கைகளிலிருந்து தெறிக்கவிடும் அதிர்வலையில் சத்தம் உண்டாக்கியபடி இந்த அழகிய, பெரிய சைஸ் வண்டு என் தலைக்கு அருகில் பறந்து சென்றதை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை’ என்றும் அவர் கூறியுள்ளார்.
நார்த் மொலுக்காஸ் பகுதியின் தாழ்நிலப்பரப்புக் காடுகளில் வாழ்ந்து வரும் பறக்கும் புல்டாக் வண்டு, பிற தேனீக்கள் போல் கூடு கட்டி கூட்டமாக வாழ்வதில்லை. கரையான் புற்று மற்றும் மரப் பட்டைகளில் நீண்ட துளையிட்டு, தானும் தன் குட்டிகளும் மழை நீரில் நனைந்துவிடாதபடி பாதுகாப்பாக வாழ வழி வகுத்துக் கொள்ளும். இந்த அமைப்பு எதிரிகளிடமிருந்தும் தப்பிக்க உதவுகிறது.
2019ம் ஆண்டுக்கு முன், 1981ல் இதை கடைசியாக பார்த்துள்ளனர். அதன் பின் இவை முற்றிலும் அழிந்து விட்டதாக நம்பியுள்ளனர். பிறகு சரித்திர ஆவணங்களைப் பின்பற்றி விஞ்ஞானிகள் ஒரு பெண் வண்டை கரையான் புற்றில் கண்டுபிடித்துள்ளனர். தற்போது, IUCN (INTERNATIONAL UNION FOR CONSERVATION OF NATURE) இதை பாதிப்படையக்கூடிய இனமாக அடையாளப்படுத்தி, பட்டியலில் சிவப்புக் குறியீடு போட்டுள்ளனர்.
மரங்களை அழித்தல், விவசாயம் பண்ணுவது போன்றவற்றால் இவற்றின் வாழ்வாதாரம் கெடுவதும், சட்ட விரோத வன விலங்கு வர்த்தகமும் இந்த வண்டுகளின் அழிவிற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
இவற்றின் மறு கண்டுபிடிப்பிற்கு முந்தைய காலத்தில், இவ்வகை வண்டின் போட்டோக்கள் ஈபே (eBay) பகுதியில் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்ததாகவும், விலை 9,000 டாலர் என குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் பிபிசி வைல்ட் லைப் மேகசின் (BBC Wildlife Magazine) கூறுகிறது. வன விலங்கு பாதுகாவலர்கள் இந்த இனத்தைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அது கோரிக்கை வைத்துள்ளது.