

பாம்புகள் என்றாலே நம் அனைவருக்கும் ஒரு இனம் புரியாத அச்சம் வருவது இயல்பு. அதிலும் விஷத்தன்மை கொண்ட பாம்புகள் என்றால் சொல்லவே வேண்டாம். இந்தியாவில் பல வகையான பாம்புகள் இருந்தாலும், இரண்டு பாம்புகள் எப்போதுமே மனிதர்களுக்குச் சிம்ம சொப்பனமாக விளங்குகின்றன.
ஒன்று காடுகளின் ராஜாவாக வலம் வரும் ராஜநாகம், மற்றொன்று சத்தமே இல்லாமல் மறைந்திருந்து தாக்கும் கண்ணாடி விரியன். இவை இரண்டில் எது அதிக வீரியம் மிக்கது மற்றும் எதனிடம் சிக்கினால் உயிர் பிழைப்பது கடினம் என்பதைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
கம்பீரமான ராஜநாகம்!
அடர்ந்த காடுகளுக்குள் ஆட்சி செய்யும் ராஜநாகம் பார்ப்பதற்கே மிகவும் கம்பீரமாக இருக்கும். இது தென்கிழக்கு ஆசியாவின் அடர்ந்த வனப்பகுதிகளில் அதிகமாக வசிக்கிறது. மற்ற பாம்புகளை விட அளவில் மிகப்பெரியது மட்டுமல்லாமல் மிகுந்த புத்திக்கூர்மையும் கொண்டது. இதன் விஷம் 'நியூரோடாக்ஸின்' (Neurotoxic) வகையைச் சேர்ந்தது. அதாவது இது மனிதனைத் தீண்டியவுடனேயே நேரடியாக நரம்பு மண்டலத்தைத் தாக்கத் தொடங்கும்.
மூளைக்கும் உடலுக்கும் உள்ள தொடர்பைத் துண்டித்து, சுவாசக் கோளாறை ஏற்படுத்தி, மிகக் குறுகிய காலத்தில் மரணத்தை உண்டாக்கக்கூடியது. மேலும் இது ஒரே கடியில் மிக அதிக அளவிலான விஷத்தை உடலில் செலுத்தும் ஆற்றல் கொண்டது. சுமார் ஏழு மில்லி லிட்டர் அளவுள்ள இதன் விஷம் ஒரு யானையைக் கூடச் சாய்த்துவிடும் வல்லமை படைத்தது.
கொடூரமான கண்ணாடி விரியன்!
கண்ணாடி விரியன் பாம்பானது காடுகள் மட்டுமல்லாமல் வயல்வெளிகள் மற்றும் சமவெளிப் பகுதிகளிலும் பரவலாகக் காணப்படுகிறது. இதன் விஷம் 'ஹீமோடாக்ஸின்' (Hemotoxic) வகையைச் சார்ந்தது. இது ராஜநாகத்தைப்போல் நரம்பைத் தாக்காமல், நேரடியாக ரத்தச் செல்களைச் சிதைக்கத் தொடங்கும். இது கடித்த இடத்தில் கடுமையான எரிச்சலும், தாங்க முடியாத வலியும் ஏற்படும்.
ரத்தம் உறைவதைத் தடுத்து, திசுக்களை அழுகச் செய்யும் வேலையை இதன் விஷம் செய்கிறது. இதனால் பாதிக்கப்பட்ட நபரின் உடலில் ஏற்படும் ரணங்கள் ஆறுவதற்கு வெகு நாட்கள் ஆகும். ராஜநாகம் உடனடியாக உயிரைப் பறிக்கும் என்றால், கண்ணாடி விரியன் மிகுந்த வேதனையைக் கொடுத்துத் துன்புறுத்தும் தன்மை கொண்டது.
இந்த இரண்டு பாம்புகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, ராஜநாகத்தின் பலம் அதன் பிரம்மாண்டமான உருவம் மற்றும் வலிமை ஆகும். ஒரு மோதல் என்று வந்தால் அதன் உடல் வலிமை, புத்திசாலித்தனம் அதற்குச் சாதகமாக அமையும். ஆனால் விஷத்தின் வீரியம் என்று பார்த்தால் இரண்டுமே சளைத்தவை அல்ல. ராஜநாகம் தனது இரைக்குத் தப்பிக்கும் வாய்ப்பே தராமல் மின்னல் வேகத்தில் செயல்படும். கண்ணாடி விரியனோ அமைதியாக இருந்து, எதிர்பாராத நேரத்தில் தாக்கி, ரத்த மண்டலத்தையே நிலைகுலையச் செய்யும்.
எது எப்படி இருந்தாலும், இந்த இரண்டுமே எமனுக்கு நிகரானவை என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. காடுகளின் ராஜாவாக ராஜநாகம் இருந்தாலும், மறைந்திருந்து தாக்குவதில் கண்ணாடி விரியன் வல்லவன். எனவே இவை இரண்டுமே ஆபத்தானவை தான். இவற்றைக் கண்டால் ஒதுங்கிச் செல்வதே மனிதர்களுக்கு நல்லது.
இயற்கையின் படைப்பில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் ஆபத்தானவை என்பதைப் புரிந்து கொண்டு எச்சரிக்கையுடன் இருப்பதே நம் உயிரைக் காக்கும் வழியாகும். பாம்பு வகைகளில் இவை இரண்டுமே மனித குலத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாகவே இருக்கின்றன.