
புரோஹோட்னா குகை பல்கேரியாவில் உள்ள கர்லுகோவா எனும் கிராமத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் இஸ்கார் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. இந்தக் குகை 262 மீட்டர் நீளமும் 45 மீட்டர் ஆழமும் கொண்டது.
இது ஒரு கார்ஸ்ட் குகையாகும். கார்ஸ்ட் என்பது சுண்ணாம்பு மற்றும் கார்பனேட் பாறைகளால் ஆன நிலப்பரப்பைக் குறிக்கும். 1962 ம் ஆண்டு முதல் இது பல்கேரியாவின் சுற்றுலாத் தலங்களுள் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. பல்வேறு காரணகளுக்காக இந்தக் குகை புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக திகழ்கிறது. இது பல்கேரியாவின் மிக நீளமான குகைப் பாதையாக உள்ளது.
குகையின் மேற்புறப் பகுதியில் இரண்டு பெரிய ஓட்டைகள் (துளைகள்) உள்ளன. இவை அருகருகே அமைந்து ஒரே மாதிரியான பாதாம் வடிவமைப்பைக் கொண்டுள்ளன. இந்தத் துளைகள் பார்ப்பதற்கு ராட்சத மனிதக் கண்களை ஒத்திருக்கின்றன. மழைப்பொழிவின் போதோ அல்லது குகை ஈரமாக இருக்கும் போதோ துளைகள் வழி குகைக்குள்ளே நீர் சொட்டுவதைப் பார்ப்பதற்கு ராட்சத உயிரினம் 'அழுவது' போல் தெரியுமாம். மக்கள் பலர் இவற்றைக் கடவுளின் கண்கள் என்று அழைக்கிறார்கள்.
நீரோட்டத்தினால் ஏற்பட்ட அரிப்பு மற்றும் மழைப்பொழிவின் விளைவாக மனிதக் கண்கள் போன்ற தோற்றமுடைய இரண்டு ஓட்டைகள் ஏற்பட்டிருக்கலாம் எனக் கணிக்கப்படுகிறது. விசித்திரமான இந்தத் துளைகளுக்காகவே புரோஹோட்னா குகை மிகவும் பிரபலமடைந்தது.
அதோடு, ஏராளமான விளம்பரங்களும் திரைப்படப் பாடல்கள் மற்றும் பிற இசைத் தொகுப்புகளும் திரைப்படங்களும் இங்கு படமாக்கப்படுள்ளனவாம். இந்தக் குகைக்குள் செல்வதற்கு கடினமானப் பாதைகளைத் தாண்ட வேண்டியிருக்கும்.
கடவுளின் கண்கள் என்றழைக்கப்படும் இந்தக் குகை, எதிரெதிரே அமைந்த இரண்டு திறப்புக்களை அல்லது நுழைவு வாயில்களைக் கொண்டுள்ளது. அவை முறையே, பெரிய நுழைவுவாயில் மற்றும் சிறிய நுழைவுவாயில் என வழங்கப்படுகிறது. சிறிய நுழைவு வாயில் தோராயமாக 35 மீட்டர் உயரமும் பெரிய நுழைவுவாயில் கிட்டத்தட்ட 45 மீட்டர் உயரமும் கொண்டது.
மேலும், பங்கீ ஜம்பிங் எனப்படும் சாகசம் உலகில் உள்ள ஒரு சில குகைகளில் மட்டுமே செய்யப்படுகிறது. அவற்றுள் புரோஹோட்னா குகையும் ஒன்றாகத் திகழ்கிறது. குறிப்பாக, பெரிய நுழைவு வாயில் மட்டுமே பங்கீ ஜம்பிங் செய்வதற்கு ஏற்ற இடமாகத் திகழ்கிறது.
குகையில் வரலாற்றுக்கு முந்திய வசிப்பிடத்தின் தடயங்கள் கிடைத்துள்ளதாகவும் அவை புதிய கற்காலத்தில் மனிதர்கள் குகையில் வாழ்ந்ததற்கான சாட்சியங்களாக உள்ளன என்றும் தொல்லியலாளர்கள் கருதுகின்றனர்.