Fast fashion is dangerous to the environment
Fast fashion is dangerous to the environmenthttps://phys.org

சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் ஃபாஸ்ட் ஃபேஷன் மோகம் தவிர்ப்போம்!

‘ஃபாஸ்ட் ஃபேஷன்’ என்பது ட்ரெண்டிங்கான ஆடைகளை விரைவாகவும் மலிவாகவும் உருவாக்கி சந்தைப்படுத்தும் அணுகுமுறை. இதனால் நுகர்வோருக்கு மிக எளிதாக இந்த வகையான ஆடைகள் கிடைக்கின்றன. ஆனால், இவை பூமிக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஏற்படுத்தும் கேட்டிற்கு அளவில்லை.

ஃபாஸ்ட் ஃபேஷன் கலாசாரம்: ஃபாஸ்ட் ஃபேஷன் 1960 மற்றும் 70களில் நுகர்வோரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ஜவுளி ஆலைகள் உலகம் முழுவதும் திறக்கப்பட்டன. அப்போதுதான் ஃபாஸ்ட் ஃபேஷன் உபயோகத்திற்கு வந்தது. தற்போதைய சமூக ஊடகங்களின் வாயிலாக ஃபாஸ்ட் ஃபேஷன் அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. தினசரி புதிய ஆடைகளை அணிந்து செல்ஃபி எடுத்து இன்ஸ்டாகிராம், முகநூல், ட்விட்டரில் போட வேண்டி இருப்பதால் நிறைய இளைஞர்களும் இளம் பெண்களும் இந்த ஃபாஸ்ட் ஃபேஷன் மோகத்திற்கு அடிமையாகியிருக்கிறார்கள் என்பது வேதனையான நிஜம்.

ஃபாஸ்ட் ஃபேஷன் சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்தும் கேடுகள்:

1. இந்த வகை ஆடைகள் மலிவான பொருட்கள் மற்றும் மோசமான கைவினை திறன் மூலம் தயாரிக்கப்படுவதால் அவை நீண்ட காலம் நீடிக்காது. எனவே, நுகர்வோர் அடிக்கடி புதிய ஆடைகளை வாங்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்படுகிறார்கள். இது அவர்களது பொருளாதாரத்தை பாதிப்பதோடு மட்டுமல்லாமல், சுற்றுச்சூழலுக்கும் பெரும் கேடு விளைவிக்கிறது.

2. வேகமாக நாகரிகத்தை வளர்க்கிறேன் என்ற பெயரில் நிறைய மலிவான தரமற்ற ஆடைகளை தொழிற்சாலைகள் உருவாக்குகின்றன. அத்துடன் மாசு மற்றும் கழிவுகளை உருவாக்குகின்றன. அவை தன் பங்கிற்கு ரசாயனத்தை கலப்பதும் பெருமளவு தண்ணீரை வீணடிப்பதும் ஒருபுறம் நடக்கிறது என்றால் அவற்றை வெளியேற்றி மனிதர்கள் மற்றும் பிற உயிர்களின் வாழ்வாதாரமான ஆறுகளில் கழிவுகளைக் கொட்டுவதால் தண்ணீர் மாசுபாடு அடைகிறது.

3. மக்கள் இதுபோன்ற துணிகளை அதிகமாக வாங்கிக் குவிப்பதால் அதிகமான நுகர்வு கலாசாரத்தை ஃபாஸ்ட் ஃபேஷன் உருவாக்குகிறது. மேலும் இவற்றை தயாரிக்கும் தொழிலாளர்களின் உடல் நலத்திற்கும் இவை கேடு விளைவிக்கின்றன.

4. ஃபாஸ்ட் ஃபேஷன் ஆடைகளை மறுசுழற்சிக்கு பயன்படுத்த முடியாது என்பதால் அவற்றை எரிக்கிறார்கள். இது சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஓசோன் படலத்தை பாதிக்கிறது. மண்ணில் தூக்கி எறியப்படும் இந்த வகை உடைகளினால் மண்ணின் வளம் பாதிக்கப்பட்டு அது தன்னுடைய செழுமையை இழக்கிறது.

5. நுகர்வோர், ‘யூஸ் அன்ட் த்ரோ’ பேப்பர் கப்புகளை தூக்கி எறிவது போல நான்கைந்து முறை பயன்படுத்திய பின்பு அந்த உடைகளை தூக்கி வீசி விடுகிறார்கள். அவற்றை பிறருக்கு தானமாக அளிக்க முடியாத நிலையில் அவை மிகவும் தரமற்ற இருப்பதுதான் காரணம்.

இதையும் படியுங்கள்:
டீன் ஏஜ் பருவ வயது குழந்தைகளைக் கையாளும் டெக்னிக் தெரியுமா?
Fast fashion is dangerous to the environment

6. உலகளாவிய கார்பன் உமிழ்வில் 10 சதவிகிதம் இத்தகைய மலிவு விலை ஃபேஷன் துணிகள் வெளியிடுகின்றன. மேலும் 20 சதவிகிதம் கழிவுநீரையும் உற்பத்தி செய்யும் ஆலைகள் வெளியே விடுகின்றன. இவை நீர் நிலைகளில் கலக்கும்போது அவை மாசுபட்டு அதை உபயோகிக்கும் மனிதர்கள், விலங்குகள், மீன்கள் மற்றும் பிற கடல் வாழ் உயிரினங்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றன.

7. இதில் சேர்க்கப்படும் செயற்கை ரசாயனங்கள் மற்றும் செயற்கை இழைகள், இவற்றை சலவை செய்யும்போது பெரும் கேட்டை விளைவிக்கின்றன. பெருங்கடல்களில் கலந்து இருக்கும் மைக்ரோ பிளாஸ்டிக் மாசுபாடு 30 சதவீதம் செயற்கை ஜவுளிகள் மற்றும் ஆடைகளால்தான் என்கின்றன ஆய்வுகள்.

எனவே, ஃபாஸ்ட் ஃபேஷன் ஆடைகளை நிராகரித்து நல்ல தரமான துணிகளை வாங்கி அணிய வேண்டும். அவை மறுசுழற்சிக்கு உகந்ததாக இருக்க வேண்டியது மிக அவசியம். அதனால் நமது பொருளாதாரம் மேம்படுவதுடன் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும்.

logo
Kalki Online
kalkionline.com