
இந்தியப் பெருங்கடலின் தென்மேற்கு மூலையில், மொஸாம்பிக் கடற்கரையிலிருந்து 800 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது மடகாஸ்கர் தீவு. உலகில் கிரீன்லாந்து, போமியா, நியூ கினியா ஆகிய தீவுகளுக்குப் பிறகு நான்காவது பெரிய தீவாக அமைந்துள்ளது இது.
976 மைல் நீளமும் 355 மைல் அகலமும் கொண்ட இந்தத் தீவை போர்த்துக்கீசிய கடற்பகுதி ஆய்வாளரான டியோகோ டயஸ் பார்த்தார், வியந்தார்! இதை 'உயிருள்ள மியூஸியம்' என்று வர்ணித்தார்.
10000 அடி உயரமுள்ள மலைகளும், அழகிய மழைக்காடுகளும் இங்கு உள்ளன. இதன் தெற்குப் பக்கமோ இதற்கு நேர் எதிர்மாறாக அழகிய நிலப்பரப்புடன் காட்சி அளிக்கிறது. அரை பாலைவனமாக உள்ள இந்தப் பகுதியை 'லேண்ட் ஆஃப் தர்ஸ்ட்' (LAND OF THIRST) என்று பெயரிட்டுள்ளனர்.
இங்கு ஜெரோபைட்ஸ் (XEROPHYTES) என்ற ஒரு அதிசய தாவர வகை இருக்கிறது. இதில் உள்ள பஞ்சு போன்ற கனமான பகுதிகள் தண்ணீரை நன்றாக உறிஞ்சி உள்ளே வைத்துக் கொள்கிறது. கடுமையான நீர்ப் பஞ்சம் ஏற்படும் போது இந்தத் தாவரம் நீரைக் கொடுத்து உதவுகிறது.
இந்த ஜெரோபைட்ஸ் காடுகள் டிடியீரியா (DIDIEREA)என்று அழைக்கப்படுகின்றன. 33 அடி உயரமுள்ள தண்டு போன்ற ஒரு தாவர வகையில் சுற்றிலும் கூர்மையான முட்கள் உள்ளன. முட்களுக்கு இடையே உள்ள இலைகள் ஈரப்பதத்தை ஈர்த்து வைத்துக் கொள்கின்றன.
மடகாஸ்கரில் உள்ள 90 சதவிகித விலங்குகளும், தாவர வகைகளும் தனித்தன்மை வாய்ந்தவை. ஆறு கோடி வருடங்களுக்கு முன்னர் ஆப்பிரிக்க கண்டத்திலிருந்து உடைபட்டுத் தனித் தீவாக மடகாஸ்கர் ஆனது. ஆகவே, இங்குள்ள விலங்குகளையும் சரி, தாவர வகைகளையும் சரி யாரும் கண்டுகொள்ளவில்லை. தொந்தரவும் செய்யவில்லை.
2000 வருடங்களுக்கு முன்பாக எப்போது மனிதன் இங்கு காலடி எடுத்து வைத்தானோ அப்போது தான் நிலைமை தலைகீழாக மாறியது. சில தனித்தன்மை கொண்ட மிருகங்களும் சற்று பிரச்சினைக்குள்ளாயின.
46 வகையான மலகாசி பறவைகளும், பச்சோந்தி வகைகளும் 148 வகையான தவளை இனங்களும் இங்கு உள்ளன. பார்க்கவே அழகாக இருக்கும் குரங்குகளும் இங்கு மட்டுமே இருக்கும். மனித நடமாட்டம் இவைகளுக்குப் பயத்தைத் தந்தது. உலகின் மிகப் பெரிய பறவையான எலிபண்ட் பேர்ட் (ELEPHANT BIRD) 10 அடி உயரமுள்ளது.
அதன் எடை மட்டும் 45 கிலோ. இதன் முட்டையின் எடை 9 கிலோ. இதனால் வேகமாக ஓட முடியாது. சைவ உணவுப் பறவை இது. எவ்வளவு எண்ணிக்கையில் இது இங்கு இருந்ததோ யாருக்கும் தெரியாது. இப்போது ஒன்று கூட இல்லை.
இந்தோனேஷியாவிலிருந்தும், மலாசியாவிலிருந்தும் வந்து இங்கு குடியேறிய மக்கள் மரங்களை வெட்டித் தீர்த்தனர். விவசாயம் செய்ய ஆரம்பித்தனர். லெமுர் (LEMUR) வகையில் மிகச் சிறியதான ஐ-ஐ (Aye-Aye) பதினேழரை அங்குல நீளம் கொண்டது. அதன் வாலோ 24 அங்குலம் இருக்கும். மரத்தில் ஒளிந்து கொண்டு வாழும் இதுவும் எண்ணிக்கையில் குறைந்து கொண்டே வருகிறது. இன்னும் சற்றுகாலத்தில் அருகி, இருக்கவே இருக்காது!
1985 வாக்கில் மூன்று லட்சத்து எழுபத்தைந்தாயிரம் ஏக்கர் நிலம் அழிக்கப்பட்டது. இதே போக்கு நீடித்தால் இன்னும் சிறிது காலத்தில் மடகாஸ்கரில் மழைக்காடுகளே இருக்காது என்று சுற்றுப்புறச்சூழல் ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர். இயற்கை தந்துள்ள ஒரே உயிருள்ள மியூஸியம் நிலைத்து நிற்குமா? காலம் தான் பதில் சொல்லும்!