
ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது வெவ்வேறு வகையான இனத்தைச் சேர்ந்த 4000 வகை பறவைகள் தொடர்ந்து புலம்பெயர்ந்து வருகின்றன. அப்போது அவை சந்திக்கும் சவால்களையும் அச்சுறுத்தல்களையும் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
2025ம் ஆண்டிற்கான கருப்பொருள்:
உலக புலம்பெயரும் பறவைகள் தினம் மே 10 மற்றும் அக்டோபர் 11ஆம் தேதிகளில் கொண்டாடப்படுகிறது. 2025 ஆம் ஆண்டிற்கான கருப்பொருள் பகிரப்பட்ட இடங்கள், பறவை நட்பு, நகரங்கள் மற்றும் சமூகங்களை உருவாக்குதல். இதன் பொருள் கிராமங்கள் மற்றும் புற நகர்ப் பகுதியில் பறவைகளின் எண்ணிக்கையை ஆதரிக்கும் சூழலை ஊக்குவிப்பதன் மூலம் மனிதர்களுக்கும் புலம்பெயரும் பறவைகளுக்கும் இடையில் ஆரோக்கியமான உறவை ஏற்படுத்துதலாகும்.
புலம்பெயரும் பறவைகளைப் பற்றிய சில தகவல்கள்:
அமெரிக்காவில் விஸ்கான்சின் என்ற மாநிலம் புலம்பெயரும் பறவைகளுக்கு மிகவும் பிரபலமான இடமாகும். மே மாதத்தில் ஒவ்வொரு நாளும் மில்லியன் கணக்கான பறவைகள் இந்த மாநில எல்லையைக் கடக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
புலம்பெயரும் பறவைகளில் கடல் மட்டத்திலிருந்து மிகவும் உயரத்தில் பறக்கும் பட்டை தலைவாத்து என்ற பறவை. புலம்பெயரும் பறவைகளால் நீண்ட தூரம் பயணிக்க முடியும். சில பறவைகள் 15 ஆயிரம் மைல்களுக்கு மேற்பட்ட தூரத்தை கூட பறந்து கடக்கும்.
இவை எப்படி நீண்ட தூரம் பறப்பதற்கு தங்களைத் தயார் படுத்துகின்றன தெரியுமா? இடம்பெயர்வுக்கு முன்னால் பறவைகள் ஹைப்பர்ஃபேஜியா எனப்படும் ஒரு செயல்முறைக்கு தங்களை உட்படுத்திக் கொள்கின்றன. பறக்கும் போது அவற்றிற்கு ஆற்றல் தேவைப்படுகிறது. அதனால் தங்களது உடலில் கொழுப்பை சேமிக்க அதிகமாக சாப்பிடுகின்றன. தங்கள் உடல் எடையை சில பறவைகள் இரட்டிப்பாக்கிக் கொள்கின்றன. இதனால் அவர்களுடைய தசை நிறை அதிகரித்து உடலில் மாற்றங்கள் ஏற்படுகின்றன.
புலம்பெயரும் பறவைள் எதிர்கொள்ளும் முக்கிய அச்சுறுத்தல்கள்:
1. புலம்பெயரும் பறவைகள் தங்கள் வாழ்விட இழப்பு, காலநிலை மாற்றம், மாசுபாடு மற்றும் வேட்டையாடுதல் ஆகிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன.
2. நகரங்கள் வழியாக பறவைகள் புலம்பெயரும் போது குறிப்பிடத்தக்க அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன. நகர்ப்புறத்தில் கட்டிடங்கள், கிரேன்கள் கேபிள்கள், மின் இணைப்புகள் மற்றும் காற்றாலைகள் போன்றவை நிறைந்து இருக்கின்றன. இவற்றால் இரவு நேரத்தில் பறவைகளுக்கு உயிரிழப்பு ஏற்படுகிறது. இவற்றில் மோதி பறவைகள் இறக்கின்றன. அமெரிக்காவில் ஆண்டு தோறும் நூற்றுக்கணக்கான பறவைகள் மரணத்தை எதிர்கொள்கின்றன.
3. இரவில் புலம்பெயரும் பறவைகளை செயற்கை விளக்குகளின் ஒளி திசை திருப்புகிறது மற்றும் ஈர்க்கிறது. இதனால் கவரப்பட்ட பறவைகள் கட்டிடங்களில் மோதி இறக்கின்றன.
4. நகரமயமாக்கப்பட்ட இடங்களில் பறவைகளுக்கான இயற்கை வாழ்விடங்கள் மற்றும் வளங்கள் மிகவும் குறைவாகவே இருக்கிறது. அதனால் பறவைகள் தங்கள் பாதைகளை மாற்றவோ அல்லது பொருத்தமற்ற சூழல்களில் பயணிக்கவோ நேரிடும் போது ஆபத்துகளை எதிர்கொள்கின்றன.
5. நகர்ப்புறங்களில் கொசு போன்ற ஜீவராசிகள் நோய்களை அதிகமாக பரப்புகின்றன. இதனால் பறவைகளும் அந்த நோய்த் தொற்றுக்கு ஆளாக வாய்ப்பிருக்கிறது.
6. மின் இணைப்புகள் மற்றும் மின் உள்கட்ட அமைப்புகள் போன்ற மின்சார தாக்குதலுக்கு பறவைகள் உள்ளாக நேர்கின்றன.
புலம்பெயரும் பறவைகளுக்கு உதவும் வழிகள்:
புலம்பெயரும் பறவைகளை பாதுகாக்க மக்கள் தங்களால் முடிந்த அளவு விளக்குகளை அணைத்து வைக்க வேண்டும். பறவைகள் அவற்றால் ஈர்க்கப்படாமல் தங்கள் வழியில் செல்லும். மனிதர்கள் இருக்கும்போது மட்டும் எரியும் விளக்குகள் போன்ற மோஷன் சென்சார்கள் இயக்கப்பட வேண்டும். இதனால் பறவைகளுக்கு ஒளி வெளிப்பாடு குறையும். நீலம், வெள்ளை அல்லது குளிர் நிற விளக்குகளை தவிர்க்கவும். அவை குறைந்த அலை நீளங்களைக் கொண்டதால் பறவைகளைக் குழப்ப வாய்ப்புள்ளது. வீட்டின் உட்புறங்களில் திரைச்சீலைகள் போட்டு ஜன்னலை மூடி விட வேண்டும். இதனால் ஜன்னலில் மோதி பறவைகள் உயிரிழப்பதை தடுக்கலாம்.