இந்த உலகில் இயற்கையின் அற்புதங்கள் ஏராளமாகக் கொட்டிக் கிடக்கின்றன. நாம் அறியாத எண்ணற்ற அழகியல் நம்மைச் சுற்றி உள்ளது. இவற்றின் மீதான ஆராய்ச்சிகளும் தொடர்ந்த வண்ணமே உள்ளது. அந்த வகையில் இயற்கை ஆர்வலர்களால் கண்டுபிடிக்கப்பட்ட அதிசய மலர்களில் ஒன்றுதான் எலும்புக்கூடு மலர் அல்லது கண்ணாடி மலர் என்றழைக்கப்படும் சீன வம்சாவளியைச் சேர்ந்த ‘டிஃபிலியா கிரேய்’ எனும் அழகிய மலர். குடை இலை அல்லது ஆசிய குடை இலை என்றும் அழைக்கப்படும் இந்த மலைப்பகுதி தாவரமானது, மெதுவாக வளரும் தன்மையுடையது.
இதன் தண்டுகளின் மேல் விரிந்த குடைகள் போன்ற பெரிய, பசுமையான மடலும் கொண்டுள்ளது. இது உயரமான மலைக் காடுகளில் சற்று ஈரமான இடங்களில் சுமார் 1.3 அடி வரை வளரும். வடக்கு ஜப்பான் மற்றும் சீனாவின் காடுகளில் இந்த மலர்களை அதிகம் காணலாம். இந்த மலர்களை மாய மலர்கள் என்றும் அழைக்கிறார்கள். காரணம், இவை ஈரமாகும்போது இவற்றின் இதழ்கள் கண்ணாடி போன்று பளிங்கு நிறத்தில் மாறுவதால்.
இம்மலர் இதழ்களின் செல்லுலார் அமைப்பு காரணமாக இந்தத் தனித்துவமான நிகழ்வு ஏற்படுகிறது. ஈரம் உலர்ந்ததும் இதழ்கள் ஒளியை சிதறடித்து வெண்மையாகத் தோன்றும். இருப்பினும், ஈரமாக இருக்கும்போது, நீர் இதழ்களுக்குள் உள்ள இடைவெளிகளை நிரப்புகிறது. ஒளியைக் கடந்து செல்ல அனுமதிக்கிறது. அவற்றை ஒளி ஊடுருவக்கூடியதாக மாற்றுவது இதன் அதிசயமாகிறது. பாசம் மற்றும் மகிழ்ச்சி இரண்டையும் குறிக்கும் அடையாளமாகப் பார்க்கப்படும் இதன் தோற்றம் மாறுவதால் இது ‘காடுகளின் பச்சோந்தி’ என்றும் குறிப்பிடப்படுகிறது.
மழைக்காலத்தில் மத்திய ஜப்பானியக் காடுகளின் அடிமரத்தை அலங்கரிக்கும் இந்த மலர்களின் அழகால் ஈர்க்கப்பட்ட சில கைவினைக் கலைஞர்கள், அதன் நுட்பமான வெளிப்படைத் தன்மையை அடிப்படையாக்கி பிரதிபலிக்கும் கண்ணாடிப் பிரதிகளை கலைப்பொருட்களாக உருவாக்கியுள்ளனர்.
இதற்குச் சான்றாக புகழ் பெற்ற ஜப்பானிய கலைஞரான மினாகோ ஷிமோனகேஸ், மெல்லிய உலோகக் கம்பிகளில் பொருத்தப்பட்ட நுட்பமான சிறிய, பல வண்ண கண்ணாடி மணிகளைப் பயன்படுத்தி மலர் கலவைகளை உருவாக்கி கவனம் பெற்றது இந்த மலருக்குக் கிடைத்த சிறப்பு. மேலும், இந்த மலர் ஜப்பானின் எல்லைகளைத் தாண்டி உலகக் கலைஞர்களின் போற்றுதலையும் பெற்றுள்ளது.
ஜப்பானில் கண்ணாடி கலைக்கான பரந்த பாராட்டைப் பெற்ற டிஃபிலியா கிரேயின் வெளிப்படைத்தன்மை மற்றும் மென்மையான அழகைப் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட கண்ணாடிப் பூக்கள், பிரபலமான அலங்காரப் பொருட்களாக மாறியுள்ளன. இந்த நேர்த்தியான படைப்புகள் ஆன்லைன் சில்லறை விற்பனையாளர்களிடம் கிடைக்கின்றன. உலகெங்கிலும் உள்ள கலை ஆர்வலர்கள் இந்த மயக்கும் கலைத்திறனின் அழகை தங்கள் வீடுகளிலும் வைத்து அழகு பார்க்கலாம்.
குறிப்பாக, இதன் தனித்துவமான குணாதிசயங்கள் மற்றும் அழகு ஆகியவை புகைப்படக்காரர்கள், தாவரவியலாளர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள இயற்கை ஆர்வலர்களுக்கு பிரபலமான பாடமாகவும் கலைஞர்களின் கற்பனை வளத்தைத் தூண்டும் வகையிலும் அமைந்திருப்பது தனிச்சிறப்பு.