மால்டோவா: ஏன் இது 'கிணறுகளின் தேசம்' என்று அழைக்கப்படுகிறது?

moldova-groundwater
moldova-groundwater
Updated on

ரோப்பாவின் கிழக்குப்பகுதியில் இயற்கை எழில் கொஞ்சும் நாடாகத் திகழ்வது மால்டோவா. வளமான திராட்சை தோட்டங்கள் மற்றும் பழமையான கலாச்சாரத்திற்குப் பெயர் பெற்றது. இருப்பினும், மால்டோவாவின் ஆன்மாவாகக் கருதப்படுவது அங்குள்ள எண்ணற்ற கிணறுகள் ஆகும். ஒரு நாட்டின் அடையாளம் அதன் நீர் ஆதாரங்களுடன் எவ்வாறு பின்னிப் பிணைந்துள்ளது என்பதற்கு மால்டோவா ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. மக்களின் விருந்தோம்பல், ஆன்மீகம் மற்றும் சமூக வாழ்வின் அடையாளமாக விளங்குவதால், இந்நாடு “கிணறுகளின் தேசம்” என்று உலகளவில் போற்றப்படுகிறது.

கலாச்சார மற்றும் ஆன்மீக முக்கியத்துவம்: மால்டோவா நாட்டுப்புறக் கதைகளின்படி, ஒரு கிணற்றைத் தோண்டுவது என்பது ஒரு மனிதன் தன் வாழ்நாளில் செய்யும் புனிதமான செயல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. “ஒரு மனிதன் தன் வாழ்வில் ஒரு வீட்டைக் கட்ட வேண்டும், ஒரு மகனைப் பெறவேண்டும், ஒரு கிணற்றைத் தோண்ட வேண்டும், ஒரு மரத்தை நடவேண்டும்” என்பது அங்குள்ள ஒரு பிரபலமான பழமொழி.

விருந்தோம்பலின் சின்னம்: பழங்காலத்தில் மால்டோவாவின் சாலை ஓரங்களில் தாகத்துடன் வரும் பயணிகளுக்காகவே ஏராளமான கிணறுகள் வெட்டப்பட்டன. இன்றும் கிராமப்புறங்களில் வீடுகளுக்கு வெளியே அல்லது பொது இடங்களில் கலைநயத்துடன் கட்டப்பட்ட கிணறுகளைக் காணலாம். வழிப்போக்கர் களுக்குத் தண்ணீர் தருவது ஒரு பெரிய தர்மமாகக் கருதப்படுகிறது.

அலங்கார அமைப்பு: மால்டோவா நாட்டு கிணறுகள் மற்ற இடங்களைப் போலச் சாதாரணமாக இருக்காது. அவை மரம் அல்லது உலோகத்தால் செய்யப்பட்ட அழகான கூரைகள், சிலுவைகள் அல்லது பாரம்பரிய ஓவியங்களால் அலங்கரிக்கப் பட்டிருக்கும். இவை அந்த ஊரின் அழகைக் கூட்டுவதால், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஒரு காரணியாகவும் உள்ளது.

நிலத்தடி நீர் சார்ந்து இருத்தல்: வரலாற்று ரீதியாக, மால்டோவா ஒரு விவசாய நாடு. அங்குள்ள பல கிராமங்கள் இன்றும் நிலத்தடி நீரையே (Groundwater) பெரிதும் நம்பியுள்ளன. இதனால் ஒவ்வொரு தெருவிலும் அல்லது ஒவ்வொரு வீட்டின் முன்பும் ஒரு கிணறு இருப்பது அங்கு இயல்பான ஒன்றாகும்.

இதையும் படியுங்கள்:
இது பறவை அல்ல, பறக்கும் பாலூட்டி! உலகின் மிகச்சிறிய பிக்மி கிளைடர் பற்றித் தெரியுமா?
moldova-groundwater

அங்குள்ள கிணறுகளை அவற்றின் ஆழம் மற்றும் அமைப்பைப் பொறுத்து இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்:

சாதாரண கிணறுகள் (Shallow/Dug Wells): மால்டோவா முழுவதும் சுமார் 1,79,574 சாதாரண கிணறுகள் இருப்பதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. இவை பெரும்பாலும் கிராமப்புறங்களில் நிலத்தடி நீரை ஆதாரமாகக் கொண்டு அமைக்கப்பட்டவை.

ஆழ்துளைக் கிணறுகள் (Artesian Wells): இவை பூமியின் மிக ஆழமான அடுக்குகளிலிருந்து நீரை எடுக்கின்றன. இத்தகைய கிணறுகள் சுமார் 7,000-க்கும் மேல் உள்ளன.

மால்டோவாவின் கிராமப்புறங்களில் வாழும் மக்களில் சுமார் 45% பேர் இன்றும் தங்கள் அன்றாடத் தேவைகளுக்கும் குடிநீருக்கும் இந்தக் கிணறுகளையே சார்ந்துள்ளனர். இருப்பினும், சமீப காலங்களில் சுற்றுச்சூழல் மாற்றம் மற்றும் வறட்சி காரணமாக இந்தக் கிணறுகளின் நீர் தரம் மற்றும் அளவு குறைந்து வருவது அந்நாட்டிற்கு ஒரு சவாலாக மாறியுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, சுமார் 12,000-க்கும் மேற்பட்ட பொது மற்றும் தனியார் கிணறுகள் மக்கள் பயன்பாட்டிற்காக மிகச்சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான கிணறுகள் ஒரு சிறிய பரப்பளவு கொண்ட நாட்டில் இருப்பதால்தான், இது ஐரோப்பாவின் “கிணறுகளின் தேசம்” என்று அழைக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
பறவைகளின் சொர்க்கம்: டெல்லி திகம்பர ஜைன சேரிட்டி பறவைகள் மருத்துவமனை!
moldova-groundwater

நவீன உலகில் குழாய் வழித் தண்ணீர் திட்டங்கள் விரிவடைந்தாலும், மால்டோவா மக்கள் தங்கள் பாரம்பரியக் கிணறுகளை இன்றும் பொக்கிஷமாகப் பாதுகாத்து வருகின்றனர். ஒவ்வொரு கிணற்றின் பின்னும் ஒரு மனிதனின் உழைப்பும், வழிப்போக்கர்களின் தாகம் தீர்க்கும் கருணையும் ஒளிந்துள்ளன.

தண்ணீரை வாழ்வின் புனிதமான கூறாகக் கருதும் மால்டோவா மக்களின் பண்பாடு, இந்த “கிணறுகளின் தேசம்” என்ற பெயரின் மூலம் என்றும் நிலைத்து நிற்கும். கலைநயமிக்க இந்தக் கிணறுகள் மால்டோவாவின் வரலாற்றைச் சொல்லும் மௌன சாட்சிகளாகத் திகழ்கின்றன.

logo
Kalki Online
kalkionline.com