ரோஜா முதல் காய்கறிகள் வரை: கற்றாழை உரம் தரும் மாயாஜால பலன்கள்!

உங்கள் வீட்டுத் தோட்டம் காய்கறிகளாலும் பூக்களாலும் நிரம்ப இந்த ஒரு டிப்ஸ் போதும்.
Aloe Vera Organic Fertilizer | கற்றாழை உரம்
Aloe Vera Organic Fertilizer | கற்றாழை உரம்AI Image
Updated on

கற்றாழை (Aloe Vera) மனிதர்களுக்கு மட்டுமல்லாமல், செடிகளுக்கும் ஒரு சிறந்த இயற்கை ஊக்கியாகவும், பூச்சிக்கொல்லியாகவும் செயல்படுகிறது. இதில் உள்ள அமினோ அமிலங்கள், என்சைம்கள் மற்றும் வைட்டமின்கள் செடிகளின் வேர்களை வலுவாக்கி, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றன.

​கற்றாழையைச் செடிகளுக்கு 3 எளிமையான வழிகளில் உரமாகப் பயன்படுத்தலாம்:

1. கற்றாழை திரவ உரம் (Aloe Vera Liquid Fertilizer):

​இது செடிகளின் இலைகள் பச்சையாக மாறவும், செடி வேகமாக வளரவும் உதவும் ஒரு சிறந்த 'ஃபோலியார் ஸ்ப்ரே' (Foliar Spray).

இதற்கு நாம் செய்ய வேண்டியது:

​ஒரு பெரிய கற்றாழை மடலை எடுத்து, சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும் (முள்ளை நீக்கத் தேவையில்லை).

​இதனை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு, சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.

​இந்தச் சாற்றுடன் 1:5 என்ற விகிதத்தில் (1 கப் கற்றாழை சாறுக்கு 5 கப் தண்ணீர்) சாதாரணத் தண்ணீர் கலந்து கொள்ளவும்.

​இந்தத் திரவத்தை வாரம் ஒருமுறை செடிகளின் வேர்களிலும், இலைகளின் மீதும் தெளித்து வரலாம். இது செடிகளுக்கு உடனடி ஆற்றலைத் தரும்.

​2. வேர் வளர்ச்சி ஊக்கி (Rooting Hormone):

​புதிய செடிகளைப் பதியம் போடும்போது (Cuttings), அவை அழுகிப்போகாமல் வேர் பிடிக்கக் கற்றாழை ஜெல்லே போதுமானது. அதற்கு ​நீங்கள் நடப்போகும் செடியின் குச்சியை (Cutting), மண்ணில் நடுவதற்கு முன்பு அதன் அடிப் பகுதியை நேரடியாகக் கற்றாழை ஜெல்லில் முக்கி, அதன் பிறகு மண்ணில் நட வேண்டும்.

​கற்றாழையில் உள்ள பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் (Anti-bacterial properties) வேர் அழுகல் நோய் வராமல் தடுத்து, வேர்களை வேகமாக வளரச் செய்யும்.

Aloe Vera Organic Fertilizer | கற்றாழை உரம்
Aloe Vera Organic Fertilizer | கற்றாழை உரம்AI Image

​3. கற்றாழை - வெல்லக் கரைசல் (Fermented Plant Juice):

​இது செடிகளுக்குப் பூக்கும் மற்றும் காய்க்கும் திறனை அதிகரிக்கும் ஒரு சக்திவாய்ந்த உரம்.

​சம அளவு கற்றாழை துண்டுகள் மற்றும் பொடித்த வெல்லம் (நாட்டுச் சர்க்கரை) எடுத்துக் கொள்ளவும் (உதாரணமாக: 250 கிராம் கற்றாழைக்கு 250 கிராம் வெல்லம்).

​இரண்டையும் ஒரு பிளாஸ்டிக் அல்லது கண்ணாடி பாட்டிலில் போட்டு நன்றாகக் கலந்து மூடி வைக்கவும்.

​5 முதல் 7 நாட்கள் இதனை நிழலான இடத்தில் அப்படியே விட்டுவிடவும். இடையில் தினமும் ஒருமுறை ஒரு மரக் குச்சியால் இதைக் கலந்து விட வேண்டும்.

​7 நாட்களுக்குப் பிறகு, வெல்லம் உருகிக் கற்றாழை நொதித்து ஒரு தேன் போன்ற திரவமாக மாறியிருக்கும்.

​இந்தத் திரவத்தில் இருந்து 10 மிலி (ml) எடுத்து, 1 லிட்டர் தண்ணீரில் கலந்து செடிகளின் வேர்களில் ஊற்ற வேண்டும். மாதத்திற்கு இரண்டு முறை இதனைப் பயன்படுத்தலாம்.

கற்றாழை உரம் ஸ்பெஷலாக கூறப்படுவதன் காரணங்கள்:

​இயற்கை பூச்சிக்கொல்லி: கற்றாழையின் கசப்புத் தன்மை இலைகளைத் தாக்கும் பூச்சிகள், அசுவினிப் பூச்சிகள் மற்றும் எறும்புகளைக் கட்டுப்படுத்தும்.

வறட்சியைத் தாங்கும் சக்தி: கோடை காலத்தில் இந்தக் கரைசலை ஊற்றும்போது, செடிகள் வறட்சியைத் தாங்கி வாடாமல் இருக்க உதவும்.

வீட்டில் வளரும் பூச்செடிகளுக்கு (ரோஜா, மல்லிகை) மற்றும் காய்கறி செடிகளுக்கு இதைப் பயன்படுத்த சில டிப்ஸ்!

ரோஜா, மல்லிகை போன்ற பூச்செடிகளுக்கும், நாம் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிச் செடிகளுக்கும் கற்றாழை உரம் ஒரு அருமருந்தாகும். ஏனெனில், பூச்செடிகளுக்குத் தேவையான வண்ணப் பொலிவையும், காய்கறிச் செடிகளுக்குத் தேவையான நோய் எதிர்ப்புத் திறனையும் கொடுக்கும் ஆற்றல் கற்றாழைக்கு உண்டு.

​ஒவ்வொரு வகைச் செடிக்கும் கற்றாழையை எப்படித் துல்லியமாகப் பயன்படுத்தலாம் என்று பார்ப்போம் வாங்க:

​1. ரோஜா செடிகளுக்கு (Rose Plants)

​இலைகளில் கரும்புள்ளிகள் விழுவது, மொட்டுகள் கருகிப் பூக்காமல் போவது மற்றும் வேர் அழுகல் போன்றவை ரோஜா செடிகளின் பொதுவான பிரச்சினை.

இதற்கு பயன்படுத்தும் முறை (மண் ஊட்டச்சத்து): கற்றாழையின் உட்பகுதியை (Gel) மட்டும் எடுத்து தண்ணீரில் நன்கு அடித்துக் கொள்ளவும். இதனுடன் கழுவிய அரிசி வடித்த தண்ணீர் (Rice water) கலந்து, ரோஜா செடியின் வேர்ப்பகுதியில் ஊற்ற வேண்டும். இப்படி ஊற்றி வரும் பொழுது கற்றாழையில் உள்ள பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் சேர்ந்து ரோஜா செடிகளில் பெரிய அளவிலான பூக்களைப் பூக்க வைக்கும். அரிசி தண்ணீருடன் சேரும்போது வேர்கள் பலமடைந்து, புதிய துளிர்கள் வேகமாக வரும். இலைகளில் கரும்புள்ளிகள் இருந்தால், கற்றாழைத் திரவத்தை வாரம் ஒருமுறை இலைகளின் மேல் தெளித்து வரலாம்.

​2. மல்லிகை செடிகளுக்கு (Jasmine Plants):

​மல்லிகை செடிகளுக்குக் கிளைகள் அடர்த்தியாக வளர்ந்து, அதிக நறுமணமுள்ள மொட்டுகள் வைக்க ஊட்டம் தேவை.

கற்றாழைச் சாறு தயாரிக்கும் போது, அதனுடன் 2 தேக்கரண்டி பயன்படுத்திய டீத்தூள் (Used Tea dust - கழுவி உலர்த்தியது) அல்லது காய்ந்த வெங்காயத் தோல் சேர்த்து நன்றாக நொதிக்க வைக்கவும் (Ferment). இந்தத் தண்ணீரை வடிகட்டி 1:5 என்ற விகிதத்தில் நீர் கலந்து மல்லிகைச் செடிக்கு ஊற்றவும்.

நன்மை: டீத்தூள் மண்ணை அமிலத்தன்மை (Acidic) கொண்டதாக மாற்றும்; மல்லிகைக்கு அமில மண் மிகவும் பிடிக்கும். கற்றாழையின் சத்துக்களும் சேரும்போது, செடி முழுவதும் இலைகள் மறையும் அளவிற்கு மொட்டுகள் வைக்கும்.

இதையும் படியுங்கள்:
காசு கொடுத்து உரம் வாங்காதீங்க! செடிகளின் வளர்ச்சியைத் தூண்டும் உருளைக்கிழங்கு தோல் கரைசல்!
Aloe Vera Organic Fertilizer | கற்றாழை உரம்

3. காய்கறிச் செடிகளுக்கு (Vegetable Plants - தக்காளி, மிளகாய், கத்தரி):

​காய்கறிச் செடிகளில் பூக்கள் உதிர்வது மற்றும் பூச்சித் தாக்குதல் (குறிப்பாக இலைச்சுருட்டு நோய், வெள்ளை ஈக்கள்) பெரும் சவாலாக இருக்கும்.

​பூக்கள் உதிர்வதைத் தடுக்க (தக்காளி, எலுமிச்சை, வெண்டை), பூ வைக்கும் பருவத்தில், நாம் முன்னரே பார்த்த கற்றாழை - வெல்லக் கரைசலை (Fermented Plant Juice) 1 லிட்டர் தண்ணீருக்கு 10 மிலி கலந்து தெளித்து வர வேண்டும். இது பூக்கள் உதிராமல் பிஞ்சுகளாக மாற உதவும்.

​இயற்கை பூச்சிக்கொல்லி ஸ்ப்ரே: 1 கப் கற்றாழை சாற்றுடன், 2 பற்கள் இடிச்ச பூண்டு மற்றும் 1 ஸ்பூன் வேப்ப எண்ணெய் (Neem oil) கலந்து, 2 லிட்டர் தண்ணீரில் நீர்த்துப்போகச் செய்யவும். இதனை இலைகளின் அடிப்பகுதியில் படும்படி தெளிக்க வேண்டும். இப்படி செய்வதால் பூண்டின் காரமும், கற்றாழையின் கசப்பும் பூச்சிகளைச் செடியை நெருங்க விடாது. காய்கறிகள் நச்சுத்தன்மை இல்லாமல் ஆரோக்கியமாக வளரும்.

இதையும் படியுங்கள்:
பாலைவனத்தில் விளைந்த அதிசயம்: இஸ்ரேலின் வேளாண் புரட்சி நமக்குச் சொல்லும் பாடம்!
Aloe Vera Organic Fertilizer | கற்றாழை உரம்

பொதுவான டிப்ஸ்:

​கற்றாழை உரங்களைத் தெளிக்கும் போது எப்போதுமே அதிகாலை அல்லது மாலை வேளையில் தெளிப்பதுதான் சிறந்தது. வெயில் உச்சிக்கு வரும்போது தெளித்தால் இலைகள் கருகக்கூடும்.

​கற்றாழையின் தோலை வீணாக்காமல், அதனைச் சிறிய துண்டுகளாக வெட்டி கம்போஸ்ட் (Compost) தொட்டியில் போடலாம் அல்லது செடியின் மண்ணைக் கிளறி உள்ளே புதைத்துவிடலாம். அது மெதுவாக மக்கி நல்ல உரமாக மாறும்.

இதுபோல் வீட்டிலேயே கற்றாழை செடியை வளர்த்து, அவற்றையே காய்கறி மற்றும் பூச்செடிகளுக்கு உரமாக்கி, சத்தான முறையில் வளர வைத்து நன்மை அடையலாம்.

எங்கள் வீட்டுத் தோட்டங்களுக்கு இந்த முறையைத் தான் பின்பற்றுகிறோம். ஆதலால் இது என் சொந்த அனுபவத்தில் எழுதும் படைப்பு என்று உறுதி கூறுகிறேன்.

Reference:

Aloe Vera

logo
Kalki Online
kalkionline.com