

'எலக்ட்ரானிக் சிட்டி' என்று அழைக்கப்படும் கர்நாடகா மாநிலத்தின் பெங்களூரு நகரம் தகவல் தொழில்நுட்ப துறையில் முன்னேறி உலக அளவில் பிரசித்தி பெற்று விளங்குகிறது. அதைப்போலவே சாலையோரங்களில் பூத்துக் குலுங்கும் இளஞ்சிவப்பு நிற மலர்களால் 'பிங்க் சிட்டி' என அழைக்கப்படுகிறது. அத்தகைய பிங்க் நிற மலர்கள் பூத்துக் குலுங்குவதற்கு காரணமாக இருந்தவர் குறித்து இப்பதிவில் காண்போம்
ஜப்பான் நாட்டின் தேசிய மரமான சாகுரா (sakura) என்று அழைக்கப்படும் செர்ரி பிளாசம் மரங்கள் டிசம்பர் முதல் ஏப்ரல் மாத வசந்த காலத்தில் இளஞ்சிவப்பு வண்ணத்தில் போர்வை போர்த்தப்பட்டிருப்பதுபோல காட்சியளிப்பது ஜப்பானுக்கே உரிய தனி சிறப்பாகும். இத்தகைய பிங்க் நிற மலர்களை காண்பதற்காகவே சுற்றுலா பயணிகள் இந்த சீசனில் ஜப்பானுக்கு சுற்றுலா செல்வர்.
இத்தகைய இளஞ்சிவப்பு நிற வண்ண மலர்கள் பூத்துக் குலுங்குவதை பார்க்க நாம் ஜப்பானிற்கு செல்ல வேண்டியதில்லை. நம் அண்டை மாநிலமான பெங்களூரில் இக் காட்சியை காணலாம். பெங்களூருவின் இயற்கை அமைப்பும், குளிர்ந்த கால நிலையும் மக்களை தன்னகத்தே ஈர்க்கிறது. இந்த வரிசையில் பிங்க் நிற மலர்களும் சேர்ந்துள்ளன.
பெங்களூரில் சாலைகளின் வண்ணத்தையே மாற்றி இருக்கும் Tabebuia rosea என்ற வகை மரங்கள் ஜப்பானின் Cherry blossom மரங்களில் இருந்து வேறுபட்டது. ஆனாலும் ஜப்பானில் இருக்கும் மரத்தை போலவே இளஞ்சிவப்பு நிற மலர்களைக் கொண்டவையாக பெங்களூரில் இருக்கும் மரங்கள் காட்சி தருகின்றன.
பெங்களூருவில் வருடம் தோறும் வனமோட்சவ் கொண்டாடப்படுவது வழக்கம். குண்டுராவ் முதலமைச்சராக இருந்த 1982 ஆம் ஆண்டில் பெங்களூருவின் பசுமை பரப்பை மேம்படுத்த பெங்களூரு நகர மேம்பாட்டு ஆணையம் மற்றும் பெங்களூர் நகராட்சியிடம் வலியுறுத்தி கேட்டுக் கொண்டார். அதன் அடிப்படையில் பத்தாயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டாலும், வனத்துறையினருக்கு இது குறைவாக தெரிந்ததால், எங்களுக்கு முழு அதிகாரம் கிடைத்தால் ஒரே ஆண்டில் ஒரு லட்சமும் அடுத்த ஆண்டில் 5 லட்சம் பூ பூக்கும் மரக்கன்றுகளை நடுவதாக உறுதியளித்தனர்.
இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க தொலைநோக்கு திட்டத்திற்கு வனத்துறை அதிகாரியான எஸ்.ஜி. நெகின்ஹால் நியமிக்கப்பட்டார். இளஞ்சிவப்பு நிற பூத்துக்குலுங்கும் மரங்களை தேர்வு செய்த எஸ். ஜி. நெகின் ஹாலின் தொலைநோக்கு பார்வையும், அர்ப்பணிப்புமே பெங்களூருவை ஜப்பானைப்போல இளஞ்சிவப்பாக காட்சியளிக்க வைக்கிறது.
சாலையோரங்களில் நடப்படும் மரக்கன்றுகளை ஆடு மாடுகளிடம் இருந்து பாதுகாப்பதற்காக நெகின்ஹால் ஒரு சிறந்த திட்டத்தை முன்வைத்து செயலாற்றினார். அதன்படி நர்சரிகளில் மரக்கன்றுகள் 6 அடி உயரம் வளரும் வரை வைத்திருந்து பின்னர் பெங்களூருவில் சாலைகளில் நட்டார்.
Tabibuea Rosea மரக்கன்றுகளை தேர்வு செய்த வனத்துறை அதிகாரி பெங்களூர் முழுவதும் 5 வருடங்களில் 15 லட்சம் மரக்கன்றுகளை நட்டு பெரும் சிரத்தை எடுத்து பராமரித்தனர். ஏனெனில் மரக்கன்றுகளை பாதுகாக்க வைத்திருந்த இரும்பு வேலிகள் திருடு போனதால் செலவு அதிகரித்தது. இதனால் செலவை குறைப்பதற்காக மூங்கில் மூலம் பாதுகாப்பு அரண் அமைத்து மரங்களை பாதுகாத்ததால் இன்று பெங்களூரு பசுமை பரப்பாக காட்சி தருகிறது.
1929 ஆம் ஆண்டு அப்போதைய பாம்பே மாகாணத்தின் தார்வத் பகுதியில் பிறந்த நெகின்ஹாலின் பணிக்காலமான 1980 ஆம் ஆண்டுகளில் 10.5 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு மர மனிதன் என வனத்துறை அதிகாரிக்கு பெயர் வாங்கி கொடுத்தது. 1987 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற நெகின்ஹால் 2021ம் ஆண்டு தன்னுடைய 93 வது வயதில் கொரோனா பாதிப்பில் மரணம் அடைந்தார். கர்நாடக மாநிலத்தின் பல்வேறு வனப்பகுதிகளில் வேலை பார்த்த அனுபவ அதிகாரியின் தொலைநோக்கு பார்வையில் இன்று பெங்களூரு நகரமே ஜப்பான் போல இளஞ்சிவப்பு நிற நகரமாக மாறி பூத்துக் குலுங்குகிறது.