

இவ்வளவு வெப்பத்திலும்கூட எப்படி இந்தத் தாவரங்கள் செழித்து வளர்கின்றன? கோடைக்காலம் நமக்கு கடுமையாக உயரும் வெப்பநிலை, நீர் பற்றாக்குறை என்ற இரட்டை சவால்களைக் கொண்டுவருகிறது. இவை இயல்பாகவே உயிரினங்களின் உயிர்வாழ்வுக்கும் அச்சுறுத்தலாக இருக்கக்கூடியவை.
இருப்பினும் மாம்பழம், கொய்யா, பப்பாளி, வாழைப்பழம், பலாப்பழம், சப்போட்டா, மாதுளை, சீதாப்பழம், தர்பூசணி, முலாம்பழம் போன்ற பழங்களும், எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் வகைகளும் தொடர்ந்து செழித்து வளர்ந்து, சந்தைகளில் ஏராளமாக கிடைக்கின்றன. சாதாரண புள்ளே காய்ந்து போகும்போது, எப்படி இவைகளால் செழித்து வளரமுடிகிறது? செழித்து வளர உயிரியல் அமைப்புகள் இந்தத் தாவரங்களிடம் உள்ளது.
கோடைக்கால பழங்களின் அதிசயங்கள்: உதாரணமாக, மாமரங்கள் மண்ணில் ஆழமாக ஊடுருவும் ஆணிவேர்களைக் கொண்டுள்ளன. இதனால் அதன் மேற்பரப்பு ஈரப்பதம் குறைவாக இருக்கும்போதும் இவைகளால் நிலத்தடி நீரைச் சுலபமாக அணுக முடிகிறது. அவற்றின் தடிமனான தோல் போன்ற இலைகள் நீர் ஆவியாவதைக் குறைத்து; உச்ச வெப்பத்தின்போதும்கூட நீரைச் சேமிக்க உதவுகின்றன.
இதேபோல் கொய்யா, மாதுளை ஆகியவை வறட்சியைத் தாங்கக்கூடிய பழ இனங்கள் ஆகும். அவைகளுக்கு கடினமான வேர் அமைப்புகளும், நீர் இழப்பைக் குறைக்கும் மெழுகு போன்ற இலைகளையும் கொண்டுள்ளன. பப்பாளி சற்று ஆழமற்ற வேர்களைக் கொண்டிருந்தாலும் இந்தக் காலகட்டத்தில் பழங்களைத் தருகின்றன. காரணம் வெப்பம் தரும் கடுமையான அழுத்தம் அதன் வளர்ச்சிச் சுழற்சியைத் தடுப்பதற்கு முன்பே வேகமாக வளர்ந்துவிடுகின்றன.
அதே சமயம் வாழைப்பழங்கள் தேவையான நீரை சேமிக்கவும், வெப்ப நிலையைச் சமாளிக்க; அவைகளின் செதில் செதிலான வாழை தண்டுகளையும், பெரிய இலைகளையும் சார்ந்துள்ளன.
தர்பூசணி, முலாம்பழம் மற்றொரு வியக்கத்தக்க தகவமைப்பைக் காட்டுகின்றன. அவற்றின் படரும் கொடிகள் மண்ணின் மேற்பரப்பை மூடி; நீர் ஆவியாவதைக் குறைத்து தரைக்கு நிழல் தருகின்றன. இறுதியில் அவற்றின் பழங்களே நீர்த்தேக்கங்களாகச் செயல்பட்டு; அவற்றுள் உருவாகும் விதை வளர்ச்சிக்குத் தேவையான ஈரப்பதத்தைச் சேமிக்கின்றன. எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களின் எண்ணெய் சுரப்பிகள், தடித்த தோல்கள்; அதன் உட்புறத் திசுக்களை வறண்டு போகாமல் பாதுகாக்கின்றன. இதனால் வெளிப்புற சூழ்நிலையில் வறட்சி இருந்தபோதிலும் பழம் சாறுடன் இருப்பதை உறுதி செய்கின்றன.
அவைகளுக்கும் ஒரு எல்லை உண்டு:
இப்படிப்பட்ட தனிப்பட்ட தாவரப் பண்புகளுக்கு அப்பால் ஒரு மரம் செழிப்பாக வளர; நாம் மேற்கொள்ளும் சாகுபடி முறைகளும் ஒரு முக்கியப் பங்கு வகிக்கின்றன. விவசாயிகள் பெரும்பாலும் மண்ணின் ஈரப்பதத்தைத் தக்கவைக்க மண் மேல் ‘கவர்’ போன்ற பொருட்களைப் பயன்படுத்துவார்கள், நிழல் தர ஊடுபயிர் செய்வார்கள், வேர்களுக்கு நேரடியாக நீரைச் செலுத்த சொட்டுநீர் பாசனம் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட நீர்ப்பாசன முறைகளைப் பயன்படுத்துகின்றனர்.
இந்த நுட்பங்கள் பழம் தரும் தாவரங்களின் உற்பத்தியை அதிகரிக்க துணைபுரிகின்றன. இதுவும் கடுமையான கோடைக்காலச் சூழல்களிலும் அவை செழித்து வளர உதவுகின்றன.
என்னதான் இயற்கை நம்மை வெப்பத்தில் இருந்து பாதுகாக்க மரம், மலைகள் தந்தாலும். அதிகமான ஜனத்தொகை காரணமாக நாம் நிலங்களை அழித்து வீடுகளை கட்டி வசித்து வருகிறோம். அதிகரித்து வரும் புழுக்கத்திலிருந்து தப்பிக்க ஏசி போன்ற விஷயங்களைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். அதுபோல்தான் தாவரங்களுக்கும் இந்தக் காலக்கட்டத்தில் தப்பிக்க இயற்கையாகவே வேர், விதை, இலை அமைப்பு போன்ற சில விஷயங்களைக் கொடுத்துள்ளது.