

சமீபத்தில் வந்த ‘டிட்வா’ புயல் பலத்த காற்றாக இல்லாமல், மழையாய் வெளுத்து வாங்கிவிட்டது. ஆனாலும் இந்த மழைபொழி விழும்முன், பின் என தொழில்நுட்ப ரீதியாகவும் நம்மைக் குழப்பி விட்டது. இது எதனால் ஏற்பட்டிருக்கும்? இதே நிலைதான் நம் முன்னோர்களும் சந்தித்தார்களா? முன்னோர்கள் எப்படி பருவமழையைக் கணித்தார்கள்?
தமிழ்நாட்டில் பருவமழை எப்போதும் ஒரு உயிர்நாடியாக இருந்து வருகிறது. அதன் மூலம்தான் விவசாயம், நீர் வளம் என்று பலரது வாழ்வாதாரங்கள் வடிவமைக்கப்படுகிறது. இருப்பினும் இன்றைய மழைப்பொழிவு(Rainfall) மாதிரிகள், 60 முதல் 100 ஆண்டுகளுக்கு முன்பு காணப்பட்ட மழைப்பொழிவுகளிலிருந்து கணிசமாக வேறுபடுகின்றன.
தமிழ்நாட்டிற்கு மிக முக்கியமான வடகிழக்கு பருவமழை(North east monsoon) இப்போது அதன் எதிர்பார்க்கப்படும் நேரம், தீவிரத்தில் (Expected time and impact) ஒப்பிடுகையில், அன்றைய காலங்களில் இன்னும் கொஞ்சம் துல்லியமான அளவில் மழையைக் கொடுத்துள்ளன. ஆனால், சில காலகட்டங்களில்(1876-1878, 1918) அன்றைய கணிப்பையும் மீறி பல பிரச்னைகளையும் தமிழகம் சந்தித்துள்ளது என்பதை வரலாற்று பதிவுகள் காட்டுகின்றன.
விவசாயிகளும், உள்ளூர் சமூகங்களும் மழையை எதிர்பார்க்க காற்றின் திசை, மேக உருவாக்கம், விலங்குகளின் நடத்தை மற்றும் சில தாவரங்களின் பூக்கள் போன்ற பாரம்பரிய குறிகாட்டிகளை(Indications) நம்பியிருந்தன. இந்தப் பூர்வீக முறைகள் கொஞ்சம் கொஞ்சமாக பிரிட்டிஷ் நிறுவனங்களால் கொண்டுவரப்பட்ட காற்றழுத்தமானிகள்(barometers) மற்றும் மழைப்பொழிவுகளின் வருடாவருடம் பதிவுகள்(rainfall logs) மூலம் பூர்த்தி செய்யப்பட்டன.
இப்போதைய கணிப்பு Vs அப்போதைய கணிப்பு
இருப்பினும் கடந்த கால கணிப்புகள் 100% துல்லியமாக இருந்தனவா என்றால்? அதுதான் இல்லை. காரணம் அன்றைய மழையை பற்றிய முன்னறிவிப்பு பெரும்பாலும் அனுபவ ரீதியாகவும், பிராந்திய ரீதியாகவும்(Regions) இருந்தது. அதாவது அன்றைய மக்கள் தோராயமான மழைக்காலங்களை எதிர்பார்க்கலாம். ஆனால், துல்லியமான அளவுகளை (அதிகனமழை, மிதமான மழை) என்று எதிர்பார்க்க முடியாது. இப்போது நாம் சந்திப்பதுபோல் 19, 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில்கூட தமிழ்நாட்டில் வறட்சி, வெள்ளம் சூழ்நிலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இன்றைய தொழில்நுட்ப முன்னேற்றங்களால் செயற்கைக்கோள் இமேஜிங் (satellite imaging), டாப்ளர் ரேடார்கள்(Doppler radars) மற்றும் எண்ணற்ற வானிலை மாதிரிகள் (weather models) இருந்த போதிலும், கணிப்புகள் சில நேரங்களில் தோல்வியடைகின்றன.
இதற்கு புவி வெப்பமடைதல் (global warming), எல் நினோ-தெற்கு அலைவு (El Niño–Southern Oscillation) மற்றும் விரைவான நகரமயமாக்கல் (rapid urbanization) போன்றவை தான் காரணங்கள் .
இது அப்போதைக்கும், இப்போதைக்கும் உள்ள காலநிலை அமைப்பில்(climate system) பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. இந்தப் பிரச்னை மழையை கணிப்பதை கடினமாக்கும், ஒரு நகரத்திற்குள்ளேயே சிறு சிறு காலநிலை மாற்றங்களை உருவாக்கும்(Rainfall intensity varies within a city itself).
அந்தக் காலகட்டங்களில் தமிழ்நாட்டின் பருவமழை காலங்கள் மிகவும் சீராக(Steady pattern) இருந்தது. ஒரு சில ஆண்டுகள் பிரச்னைகளை கொடுத்தாலும் மற்ற காலங்களில் சரியான நேரத்தில் தேவையான மழையையும், அதன் கடந்த கால பதிவுகளிலும் மாற்றமின்றி தொடர்ந்தது.
ஆனால் இப்போதைய பருவமழைகள் மிகவும் ஒழுங்கற்றதாக மாறியுள்ளது. மேலே கூறியதுபோல் காலநிலை மாற்ற பிரச்னைகள்தான் வரக்கூடிய பருவமழையில் இடையூறு செய்கின்றன. இதன் விளைவாக கணிக்க முடியாத பெரும் வெள்ளம், வறட்சி, திடீர் மேக வெடிப்புகள் போன்ற புதுப்புது பிரச்னைகளை நாம் சந்திக்கிறோம்.