

பரிணாம வளர்ச்சியில் இயற்கை செய்த சில வேடிக்கையான படைப்புகளைப் பார்க்கும்போது நமக்கே பெரிய ஆச்சரியமாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு வினோதமான படைப்புதான் 'ரெட் லிப்ட் பேட்ஃபிஷ் (Red-Lipped Batfish)' எனப்படும் சிவப்பு உதடு வௌவால் மீன். இதைப் பார்த்தால் மனிதர்கள் போலவே உதட்டுச் சாயம் பூசியது போன்ற தோற்றத்தில் இருக்கும்.
யாராவது வீட்டில் இருக்கும் தேவையற்ற பொருட்களை ஒன்றாகச் சேர்த்து ஒரு மீனை உருவாக்கினால் எப்படி இருக்குமோ, அதுபோலவே இதன் உருவம் மிகவும் அபத்தமாக இருக்கும்.
நீந்தத் தெரியாத மீன்!
பொதுவாக மீன்கள் என்றால் அழகாக நீந்தும் என்றுதான் நாம் நினைப்போம். ஆனால் இந்த வௌவால் மீனுக்கு நீந்தவே தெரியாது என்பதுதான் உச்சக்கட்ட காமெடி. இது கடலின் தரைப்பகுதியில் தனது துடுப்புகளைக் கால்கள் போலப் பயன்படுத்தி தவழ்ந்து அல்லது தத்தித் தத்தி நடந்து செல்லும். இதைப் பார்ப்பதற்கு யோகாசனத்தில் ஒருவர் கைகளை மடித்துப் பின்னோக்கி வளைவது போலத் தோன்றும்.
இதன் முகத்தைப் பார்த்தால், யாரோ இருட்டில் அவசர அவசரமாக லிப்ஸ்டிக் போட்டதுபோல, அந்தச் சிவப்பு நிறம் உதட்டைத் தாண்டிப் பரவியிருக்கும். அதோடு ஒரு வெள்ளை நிறத் தாடியும், தலையின் மேல் ஒரு கொக்கி போன்ற அமைப்பும் முளைத்திருக்கும். குழந்தை களுக்கான சீஸ் மெழுகை எடுத்து உதட்டில் ஒட்டி விளையாடுவது போல இதன் முகம் அத்தனை விசித்திரமாக இருக்கும்.
வேட்டை தந்திரம்!
பார்க்க ஏதோ சின்ன மீன் என்று நினைத்துவிட வேண்டாம். இது சுமார் நாற்பது சென்டிமீட்டர் நீளம் வரை வளரக்கூடியது. பசிபிக் பெருங்கடலில் உள்ள கேலபகோஸ் தீவுகளுக்கு அருகே, சுமார் முன்னூறு மீட்டர் ஆழத்தில் இந்த ரெட் லிப்ட் பேட்ஃபிஷ் வசிக்கிறது. நடுக்கடலின் இருட்டில், மற்ற சிறு மீன்களை வேட்டையாடி உண்பதே இதன் முக்கிய வேலை.
இந்த மீன் முழுமையாக வளர்ந்த பிறகு, இதன் தலையின் மேல் பகுதியிலிருந்து 'இலிசியம்' எனப்படும் ஒரு நீளமான முள் போன்ற அமைப்பு உருவாகும். அந்த முள்ளின் நுனியில் இருந்து ஒருவித வெளிச்சம் வரும். அந்த வெளிச்சத்தைக் கண்டு ஏமாந்து வரும் சிறு மீன்களை இது அப்படியே லபக்காக விழுங்கிவிடும்.
விசித்திர தோற்றம்!
எப்பொழுதும் ஒருவிதமான கோபத்துடனேயே இருப்பது போல இதன் முகம் அமைந்திருக்கும். நம்மில் பலருக்கும் காலையில் தூங்கி எழும்போது முகம் ஒரு மாதிரி எரிச்சலாகவும், அலங்கோலமாகவும் இருக்குமே, அதுபோலத்தான் இந்த மீனும் எந்நேரமும் காட்சியளிக்கும். இயற்கை தன்னை ஏன் இப்படி ஒரு கோரமான வடிவத்தில் படைத்தது என்ற விரக்தியில்தான் இது எப்போதும் முறைத்துக் கொண்டே இருக்கிறது போல. கடலடியில் வாழும் ஒரு சோம்பேறியான, அதே சமயம் சற்று பயமுறுத்தும் தோற்றம் கொண்ட மீன் இதுவாகும்.
உலகில் உள்ள எல்லா உயிரினங்களும் ஏதோ ஒரு காரணத்திற்காகத்தான் படைக்கப்பட்டுள்ளன என்பதை இந்த மீன் நமக்கு உணர்த்துகிறது. மனிதர்களாகிய நாம் கூட சில நேரங்களில் நமது தோற்றத்தை நினைத்துக் கவலைப்படுவோம். ஆனால், எந்த ஒரு கவலையும் இல்லாமல் கடலடியில் இத்தனை அலங்கோலமான ஒரு மீன் ராஜாவாக வலம் வருவதைப் பார்க்கும்போது, அழகு என்பது பார்ப்பவர்களின் கண்களில்தான் உள்ளது என்பது தெளிவாகிறது.