

கிரேட் அட்லாண்டிக் சர்காசம் பெல்ட் என அழைக்கப்படும் கடற்பாசி அட்லாண்டிக் பெருங்கடலில் கடந்த 15 ஆண்டுகளாக மிக அதிக அளவில் பெருகி வருகிறது. இது தற்போது மேற்கு ஆப்ரிக்கப் பகுதியிலிருந்து மெக்சிகோ வளைகுடா வரையிலான் சுமார் 8,850 கி.மீ நீளத்திற்கும் பரவியுள்ளது ஒரு பேசு பொருளாக மாறியுள்ளது. விண்வெளியில் இருந்து, இதைப்பார்க்கும் போது, மேற்கு ஆப்பிரிக்காவின் கடற்கரையிலிருந்து மெக்சிகோ வளைகுடா வரை இணைக்கும் ஓர் அற்புதமான பழுப்பு நிற 'ரிப்பன்' வடிவத்தில் இது தோற்றமளிக்கிறது.
முற்காலத்தில், சர்காசம் (Sargassum) எனப்படும் கடற்பாசி, சர்காசோ கடலில் (Sargasso Sea) மட்டுமே காணப்பட்டதாகக் கூறப்பட்ட இதை தற்போது செயற்கோள் படம் எடுத்து அனுப்பியுள்ளது. கடந்த மே மாதம் எடுக்கப்பட்ட இதன் செயற்கைக்கோள் படங்கள் இந்த நீண்ட பாசிப் படலங்கள் 37.5 மில்லியன் டன் எடை அளவில் உள்ளதாகவும், பழுப்பு நிற ரிப்பன் வடிவத்தில் சுமார் 8,850 கி.மீ தூரத்திற்குப் பரவி உள்ளதாகவும் ஆச்சரியமூட்டும் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளன.
இந்நிகழ்வு "கிரேட் அட்லாண்டிக் சர்காசம் பெல்ட்" (Great Atlantic Sargassum Belt - GASB) எனவும் அழைக்கப்படுகிறது. 2011 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து வளர்ந்து வரும் இது, இப்போது அமெரிக்கக் கண்டத்தின் அகலத்தை விட இருமடங்கு பெரிதாக வளர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
சர்காசம் கடற்பாசி எனப்படும் இந்த 'ஒலிகோட்ரோபிக்' (oligotrophic) பெரும்பாலும் ஊட்டச்சத்து குறைபாடு அதிகமாக உள்ள உப்பு நீரில்தான் வசிக்குமாம். ஆனால், இப்போது இந்த கடற்பாசி நைட்ரஜனும், பாஸ்பரஸ்ஸும் அதிகம் உள்ள, ஊட்டச்சத்து நிறைந்த நீரில் கூட அபரிமிதமாக வளர்வது ஆராய்ச்சியாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதன் அபரிமதமான வளர்ச்சிக்கு, அமேசான் போன்ற பெரிய ஆறுகளிலிருந்து வெளியேற்றப்படும் ஊட்டச்சத்துக்கள், விவசாயக் கழிவுகள், தொழிற்சாலை கழிவுநீர், காற்றில் பரவும் ஊட்டச்சத்துக்கள் போன்ற மனிதக் காரணிகளே (anthropogenic sources) காரணமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஃப்ளோரிடாவில் உள்ள அட்லாண்டிக் பல்கலைக்கழகத்தின் ஹார்பர் பிராஞ்ச் ஓஷனோகிராஃபிக் இன்ஸ்டிடியூட் நடத்தியுள்ள ஓர் சமீபத்திய ஆய்வின்படி, 1980 ஆண்டுக்கும் 2020ஆண்டுக்குமான இடைப்பட்ட காலத்தில் சர்காசம் கடற்பாசியின் திசுக்களில் நைட்ரஜன் உள்ளடக்கம் 55 சதவீதம் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
அமேசான் நதி கடலில் கலக்கும் இடத்தில் இந்த ஊட்டச்சத்துப் பெருக்கம் மிக அதிகமாக உள்ளதாகவும், கல்ஃப் ஸ்ட்ரீம் (Gulf stream) போன்ற இயற்கையான கடல் நீரோட்டங்கள், இந்தக் கடற்பாசியைக் கண்டம் முழுவதும் கொண்டு பரவச் செய்வதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் கூறுகின்றன.
சர்காசம் படலம், பல வகையான மீன்கள், நண்டுகள், இறால்கள், ஆமைகள் போன்ற உயிரினங்களுக்கு ஒரு அச்சுறுத்தலாக இருக்கிறது. அதனால், இதன் அதிக அளவிலான பெருக்கம் அறிவியல் அறிஞர்களிடையே பெருத்த கவலையை எழுப்பியுள்ளது.
இவை கடலின் மேற்பரப்பை மூடுவதால், பவளப்பாறைகளின் ஒளிச்சேர்க்கைக்கு (photosynthesis) தேவைப்படும் சூரிய ஒளியைத் தடுத்து நிறுத்துகின்றன. இவை கடலில் உள்ள மிகப்பெரிய 'கார்பன் சேமிப்புக் கிடங்குகளை' (carbon sinks) சேதப்படுத்தவும் செய்கின்றன. இந்தக் கடற்பாசி சிதைவடையும் போது, ஹைட்ரஜன் சல்பைடு, மீத்தேன், பிற பசுமைக்குடில் வாயுக்கள் (greenhouse gases) வெளியாகின்றன. இவை கரையில் ஒதுங்கும் போது, சுற்றுலா, மீன்பிடித்தல், போன்ற உள்ளூர் சார்ந்த பொருளாதாரத்தை வெகுவாகப் பாதிக்கிறது. இதைக் கடற்கரையிலிருந்து அகற்றுவதற்கு அதிக செலவு ஆவதாகவும் கூறப்படுகிறது.
1991 ஆம் ஆண்டில், புளோரிடா கடற்கரையில் இந்த சர்காசம் அதிக மிக அதிக அளவு பரவியதால், ஓர் அணுமின் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கடல் தொடர்ந்து வெப்பமயமாவதால், இந்தக் கடற்பாசி அதிக அளவில் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. இது மேலும் அட்லாண்டிக் கடலுக்கு வடக்கேயும் விரைவில் பரவும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.